பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட நாகரிகத்தின் உன்னதமான வரலாற்றுப்பெருமை மற்றும் செழிப்பான பாரம்பரியம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. வேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது. இங்குள்ள வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது. வேலூரில் இன்னும் பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. வாருங்கள் ஒரு பயணம் செல்வோம்.
வரலாற்றின் அடையாளம்
வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது. இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.
வேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவிய, தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆன்மீக சுற்றுலா
வேலூர் நகரை சுற்றியும் பல கோயில்களும் சிறு சன்னதிகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஜலகண்டேஷ்வரர் கோயில் எனும் முக்கியமான ஆலயம் வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது.
ரத்னகிரி கோயில், ஆனை குளத்தம்மன் கோயில், ரோமன் கத்தோலிக் டயோசீஸ், மதராஸா மொஹமதியா மஸ்ஜித் போன்றவையும் வேலுர் நகரத்தில் உள்ள இதர முக்கியமான ஆன்மீகத்தலங்களாகும்.
திருமலைக்கோடி எனும் இடத்துக்கு அருகில் ஷீபுரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மற்றொரு விசேஷ அம்சமாகும். இது 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
மற்ற சுற்றுலா
வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன. அசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.
ஆராய்ச்சியும் அறிவியலும்
இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.
விலங்கியல் பூங்காவும் அறிவியல் அரங்கும்
வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.
காவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.