யோசித்துப் பாருங்கள்.. கிராமத்து குழந்தைகளாய்... நம்முடைய குழந்தைப்பருவம் தான் எத்தனை இனிமையான விஷயங்களால் நிரம்பி இருந்தது. எப்போது வீதிக்கு வந்தாலும் விளையாட இருக்கும் நண்பர்கள், நண்பர்களுடன் கிரிக்கெட், கோலி, பம்பரம் விளையாட்டு, அடுத்த தெரு பசங்களுடன் பெட் மேட்ச், வயிற்றில் டியுபை கற்றிகொண்டு நீச்சல் பழகிய அனுபவம், அப்பாவின் தோல் மீது அமர்ந்து போய் பார்த்த திருவிழா, திருவிழாவில் நாம் கண்ட காட்சிகள், வாங்கி தின்ற ஐஸ், தேன்மிட்டாய், சவ்வு மிட்டாய் என மனிதர்களாலும், உணர்வுகளாலும் நிரம்பியதொரு குழந்தைப்பருவம் நம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் நகரத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் கிடைத்திருக்குமா என்றால் சந்தேகமே. முக்கியமாக சென்னைக் குழந்தைகளுக்கு.. ஆனால் அவர்களுக்கும் குழந்தையின் மழலையை கொண்டாடும் வகையில் பல இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லத் தகுந்த சிறந்த சுற்றுலாத் தளங்களைப் பற்றிக் காணலாம். அதுவும் சென்னைக்கு மிக அருகில்...
முதலைப் பூங்கா
பல லட்சம் ஆண்டுகளாக உலகத்தில் வாழ்ந்து வரும் சில உயிரினங்களில் முதலையும் ஒன்று. தடிமனான செதில் செதிலான தோல், நாக்கே இல்லாத அதிவலிமையான தாடை, அசரும் நேரத்தில் பதுங்கி இருந்து தாக்கும் தன்மை போன்றவை நமது குட்டி செல்லங்களிடையே ஆயிரம் கேள்விகளை எழுப்பும்.
எங்குள்ளது
மாமல்லபுரத்தில் இருக்கும் இந்த முதலை பூங்காவிற்கு முதலை குட்டிகளை கைகளில் எடுக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். உங்கள் செல்லக்குட்டிகள் எவ்வளவு தைரியசாலிகள் என தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு இது. குறைந்த செலவில் அருமையான ஒரு நாளை உங்கள் குழந்தைகளுடன் இங்கே கொண்டாடுங்கள்.
எப்படி செல்வது
சென்னையின் புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களிலிருந்து நிறைய பேருந்து சேவைகள் மாமல்லபுரத்துக்கு இயக்கப்படுகின்றன. சுயவாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், சென்னை - மாமல்லபுரம் சாலையில் 42 கிமீ தூரம் பயணித்தால் எளிதில் முதலைப் பூங்காவை அடையலாம். இதன் பயண நேரம் வெறும் 1.30 மணி நேரம் ஆகும்.
படகு சவாரி
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமே.. அவர்களின் மழலையை கொண்டாட குழந்தைகள் தினத்தில் ஏதோ ஒரு படகு சவாரி நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்களேன்.
முட்டுக்காடு படகு சவாரி
சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்க்கரை சாலையில் இருக்கிறது அழகுநிறைந்த முட்டுக்காடு ஏரி. இங்கே உங்கள் குழந்தைகளை மாலை நேரத்தில் ஜாலியாக படகு சவாரிக்கு அழைத்து செல்லுங்கள்.
கொண்டாடுங்கள் குழந்தைகளோடு
அலுவலகத்துக்கு விடுப்பு எடுங்கள், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் முட்டுக்காட்டுக்கு.. மாலை வேலையில் அழகிய பயணம் உங்களுக்காக காத்திருக்கிறது. சூரிய ஒளியில் தங்க நிறத்தில் ஏரியில் இருக்கும் தண்ணீர் இருக்கும் போது அதன் நடுவே படகில் செல்லும் போது உங்கள் குழந்தையின் பரவசத்தை கண்டு மகிழ தவறாதீர்கள்.
விஜிபி கொண்டாட்டம்
பரிட்சைகள், டியுஷன், முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள், ரெகார்ட் வேலைகள் என நிற்க நேரமிலாமல் கொண்டாடி மகிழ வேண்டிய தங்கள் குழந்தை பருவத்தை புத்தக புழுவாகவே கழிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்களை மறந்து கொண்டாடி மகிழ இம்மாதிரியான கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்து வரலாம்.
விளையாட்டுகள் பலவிதம்
பல்வேறு வகையான விளையாட்டுகள், சாகச சவாரிகள் இங்கே உள்ளன. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆசை தீர ஒரு நாளை இங்கே உங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக அளியுங்கள். நம் குழந்தைகளின் மகிழ்ச்சியை விட அழகான விஷயம் வேறென்ன இந்த உலகத்தில் இருந்து விட போகிறது.