ரிஸ்க் எடுப்பதில் இருக்கும் சுவாரஸ்யமும், அதனை சரியாக கடந்து வருகையில் ஏற்ப்படும் சந்தோசமும் நமக்கு அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித்தரும். வெளிநாடுகளைப்போல இந்தியாவில் சாகச விளையாட்டுகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை என்றாலும் சமீப காலங்களில் பல்வேறு விதமான சாகச விளையாட்டுகள் இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகின்றன.
நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் நமது தில்லை வெளிக்காட்டும் சுவாரஸ்யம் நம்மை பற்றி நமக்கே தெரியாத விஷயங்களை நம்முள் இருந்து வெளிக்கொண்டு வரும். வாருங்கள், இந்தியாவில் இம்மாதிரியான சாகச விளையாட்டுகள் எங்கே நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
ஸ்கை டைவிங்:
Photo: Philip Leara
பல ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் விமானம் பறந்து நிலை கொண்டு இருக்கையில் அதிலிருந்து குதிக்கும் உயிரை உறையவைக்கும் சாகசம். இந்தியாவில் கர்னாடக மாநிலம் மைசூர், மத்திய பிரதேச மாநிலம் தானா, குஜராத் மாநிலம் தீசா, மகாராஷ்டிரத்தில் இருக்கும் அம்பை பள்ளத்தாக்கு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமே இவ்விளையாட்டு இருக்கிறது. வானத்தில் பறவை போன்று கைகளையும், கால்களையும் விரித்து சில நிமிடங்கள் மிதந்து விட்டு பின் பாராசூட் மூலம் தரை இறங்கலாம். இதை உண்மையான தைரியசாலிகள் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் எப்படி?
ஸ்கியிங்:
Photo: Peter
வெள்ளைப் போர்வை போன்று பனியில் விளையாட உங்களுக்கு ஆசையா? அப்படி என்றால் நீங்கள் செல்ல வேண்டியது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களுக்கே. கால்களில் நீளமான பலகை போன்ற ஒன்றை அணிந்து கொண்டு கைகளில் உள்ள குச்சிகள் மூலம் வேகமாக பனியில் சறுக்கி செல்லும் அனுபவம் புதுமையாக இருக்கும். அதேசமயம் இதை செய்யும் போது அதிக கவனமும் தேவை. புகழ் பெற்ற கார்பந்தைய வீரர் மைக்கேல் சூமாக்கர் இந்த விளையாட்டின் போது அடிபட்டுத்தான் கோமா நிலைக்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராப்டிங்:
Photo: Philip Larson
இந்தியாவில் பிரபலமாக உள்ள சாகச விளையாட்டு என்றால் அது ராப்டிங் தான். ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் மிதவை படகில் துடுப்பு போட்டபடி, கூர்மையான பாறைகளையும், ஆபத்தான வளைவுகளையும் கடந்து செல்வது மிக சுவாரஸ்யமாக இருக்கும். ரிஷ்கேஷ், டார்ஜிலிங், லடாக், கூர்க் போன்ற பகுதிகளில் இந்த விளையாட்டு மிக பிரபலம். நண்பர்களுடன் ஒரு குழுவாக ஒன்றாக ஒரு சவாலை முறியடிப்பதன் மூலம் உங்கள் நட்ப்பை இந்த விளையாட்டு மேலும் வலிமையாக்கும்.
பாரக்ளிடிங்:
Photo: Snappa2006
மனிதனால் பறக்கவே முடியாது என்று உலகம் முடிவு செய்த நான்கு ஆண்டுகளில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாம். இப்பொது அதையும் தாண்டி பறவைகளுடன் ஒற்றைக்கு ஒற்றையாய் மனிதன் இந்த பாரக்ளிடிங் மூலம் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். உயரமான ஒரு சிகரத்தில் இருந்து பாராசூட் மூலம் பறவை போன்றே பறக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். இந்தியாவில் ஓரளவு இவ்விளையாட்டு பிரபலம் ஆகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்டாக் கொண்கிரி, மகாராஷ்டிரா மாநிலம் காம்ஷேத், ஹிமாச்சல பிரதேசம் குலு பள்ளத்தாக்கு மற்றும் பிர் ஆகிய இடங்களில் இவை உள்ளது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
ஸ்கூபா டைவிங்:
Photo: Arun Katiyar
ஆழ்கடலில் மூழ்கி மீன்களோடு மீன் போல நீந்தி பவளப்பாறைகளையும், அற்புதமான நீலக்கடலையும், வியக்க வைக்கும் அளவில் இருக்கும் வித விதமான கதவால் உயிரினங்களையும் தொடும் தூரத்தில் பார்க்கும் வாய்ப்பு ஸ்குபா டைவிங் விளையாட்டில் நமக்கு கிடைக்கும். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நேற்ராணி தீவு , கோவா, பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளில் இவை இருக்கின்றன. இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்கையில் இந்த விளையாட்டையும் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.