இந்தியா ஒரு ஜனநாயக சர்வமத நாடாக பல மதங்களின் தாயாக உள்ளது. பல மதங்களை சார்ந்த மக்களும் இந்தியாவில் உள்ள இந்துக்களும் மத வேறுபாடின்றி அண்ணன் தம்பி போன்று பழகி எல்லா பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்றனர். எல்லா இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டாலும் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் உற்சாகமாகவும், கோலாகலத்துடனும் களைகட்டுகிறது. நீங்கள் கீழே கூறப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பாருங்களேன், கொண்டாட்டத்தில் உங்களையே மறந்து விடுவீர்கள்!
கோவா
கொண்டாட்டம் என்று வந்தாலே எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் முதன்மையான இடமாக இருப்பது கோவா தான். கணிசமான ரோமன் கத்தோலிக்க மக்கள்தொகை மற்றும் போர்த்துகீசிய மரபு ஆகியவற்றைக் கொண்டு, இயேசுவின் பிறப்பை அபரிமிதமான, ஆடம்பரத்துடனும், நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடுவது எப்படி என்பதை காண நாம் கோவாவிற்கு தான் செல்ல வேண்டும்.
நகரம் முழுவதும் பாயின்செட்டியா மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். கடற்கரை குடில்கள் மற்றும் உணவகங்களில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகளை நீங்கள் சுவைக்கலாம். அஞ்சுனா, மபூசா மற்றும் கண்டோலிம் போன்ற கடற்கரைகளில் இரவு முழுவதும் பார்ட்டிகள் நடைபெறுகின்றன.
கேரளா
மாநிலம் முழுவதும் எண்ணற்ற தேவாலயங்களைக் கொண்ட மாநிலமான கேரளாவில் மற்ற மாநிலங்களை விட அதிக கிருஸ்தவ மக்கள் வாழ்கின்றனர். வீடுகள், தேவாலயங்கள், வீதிகள் என முழு மாநிலமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். நள்ளிரவில், மக்கள் கரோல்களைப் பாடுகிறார்கள், இது அதிகாலை வரை நீடிக்கும். நீங்கள் அதில் பங்கேற்கலாம் அல்லது மகிழ்ச்சியைக் கூட்டும் விதமாக அழகிய கடற்கரைகள் மற்றும் அமைதியான உப்பங்கழிகளில் நேரத்தை செலவிடலாம்.
புதுச்சேரி
அமைதியான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் உற்சாகமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நீங்கள் நாடுகிறீர்கள் என்றால், புதுச்சேரி தான் உங்களுக்கான சரியான தேர்வாகும். கிறிஸ்துமஸ் நேரங்களில் முழு புதுச்சேரியும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த சிறிய ஊரில் அத்தனை வித விதமான தேவாலயங்கள் உள்ளன. ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு என வெவ்வேறு மொழிகளில் இங்கு பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. கிறிஸ்மஸ் அன்று பாண்டிச்சேரி பயணம் என்பது நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்றாகும்.
பெங்களூரு
பெங்களூரு ஒரு வளமான கலாச்சார கடந்த காலத்தையும் வசீகரிக்கும் கிறிஸ்தவ பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. அட்வென்ட் சீசனில் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்படுகிறது. பெங்களூரு நகரம் பல அழகான தேவாலயங்களைக் கொண்டுள்ளது. செயின்ட் மேரிஸ் பசிலிக்கா, கிறிஸ்டியன் பெல்லோஷிப் சர்ச் மற்றும் சிட்டி ஹார்வெஸ்ட் ஏஜி சர்ச் போன்ற தேவாலயங்களின் நள்ளிரவு பெருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்.
ஷில்லாங்
மேகாலயாவில் உள்ள இந்த அற்புதமான வடகிழக்கு நகரத்தில் கிறிஸ்துவின் பிறந்தநாளை ஆடம்பரத்துடனும் மகிமையுடனும் கொண்டாடுகின்றனர். தெருக்கள், தேவாலயங்கள் மற்றும் வீடுகள் அழகான விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இப்பகுதியின் அழகு, அதன் உணவு மற்றும் கிறிஸ்துமஸிற்கான பொதுவான உற்சாகம் என இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை மறக்க முடியாத அனுபவமாக் மாற்றுகிறது.
மும்பை
காலனித்துவ காலத்தின் வளமான மற்றும் பல புலம்பெயர்ந்தோரின் வரவேற்பைப் பெற்ற நகரம், இந்தியாவில் அதன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மிகவும் பிரபலமானது. பாந்த்ராவின் மேற்கு புறநகர்ப் பகுதி கிறிஸ்மஸ் காலத்தில் மும்பையில் பார்க்க வேண்டிய இடமாகும். மால்கள் மற்றும் சந்தைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் மரங்கள், கலைநயமிக்க அலங்காரங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
சென்னை
கோரமண்டல் பெல்ட்டில் அமைந்துள்ள நகரம் கிறிஸ்மஸ் விருந்து மற்றும் ஆன்மீகத்தின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. தெருக்களில், மக்கள் சிறிய குழுக்கள் கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் இசையுடன் அண்டை வீடுகளுக்குச் செல்கின்றனர். சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒரு நபர் இன்னபிற பொருட்களை வழங்குகிறார். சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெறுகிறது. கடற்கரைகளில் உற்சாகம் களைகட்டுகிறது.
டையு டாமன்
குஜராத் கடற்கரையில் அமைந்துள்ள இந்த சின்ன யூனியன் பிரதேசம் கிறிஸ்துமஸ் சீசனில் கலகலப்பாகவும் பிரகாசமாகவும் மாறுகிறது. கொரின்டினோ போன்ற போர்த்துகீசிய நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. செயிண்ட் பால் தேவாலயம், சே கதீட்ரல் மற்றும் ஜெபமாலை தேவாலயம் போன்ற தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது.
டெல்லி
பலதரப்பட்ட மக்களும் வாழும் டெல்லியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிளப்புகளும் ஓய்வறைகளும் தீம் பார்ட்டிகளை நடத்துகின்றன. கன்னாட் பிளேஸில் உள்ள புனித இதய தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையின் போது மத வேறுபாடின்றி பெருந்திரளான ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
மணாலி
மணாலியில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆம்! பனியில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது தானே மேலை நாட்டு பழக்கம். அதோடு மட்டுமில்லாமல் இந்த கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. மென்மையான கரோல் இசையைக் கேட்டுக்கொண்டே அவர்கள் தங்களுடைய ஹோட்டல்களில் சூடாக உணவு உண்டு, கேக் வெட்டி, சாக்லேட்டை ருசித்து மகிழ்கிறார்கள்.
எல்லாமும் படித்தாகி விட்டதா பயணிகளே? நீங்கள் உங்களது கிறிஸ்துமஸை எங்கே கொண்டாடப் போகிறீர்கள்? இப்பொழுதே திட்டமிடுங்கள்!