பாண்டிச்சேரிக்கு சென்றால் கடற்கரையும், குடியும் கும்மாளமும் இருக்கும். நமக்கு எதுக்கு பாண்டிச்சேரி என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிவிடுங்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் காணவேண்டிய அந்த பத்து இடங்களை இந்த பதிவில் காண்போம். மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ள மாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள். வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது. பிரெஞ்சு அரசின் முக்கிய காலனிப் பகுதியாக இருந்து வந்த பாண்டிச்சேரி 1674-ம் ஆண்டு முதல் 1954-ம் வரை பிரெஞ்சு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு யாருடைய இடையூறும் இல்லாமல் பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் பிரான்ஸ், வளமான கலாச்சாரத்தையும் மற்றும் அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு வழங்கியுள்ளது. வழக்கமாக நீங்கள் பாண்டிச்சேரியில் காணும் இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களும் இருக்கின்றன.
காரைக்காலின் மணல் கடற்கரை
தென் தமிழ் நாட்டில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக காரைக்காலின் மணல் கடற்கரை கருதப்படுகிறது. இன்னமும் சுரண்டப்படாமலிருக்கும் இந்த கடற்கரையில் தண்ணீரை விரும்புபவர்களுக்கேற்ற தனிமையும், அழகும் குடிகொண்டுள்ளது. இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையை அரசாழ்வார் ஆற்றையொட்டி 2 கிமீ நீளத்திற்கு அகலப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் எளிதில் இங்கு வந்து செல்ல முடிகிறது. வங்களா விரிகுடாவின் கழிமுக நதியான அரசாழ்வார் நதியின் புகழ் பெற்ற படகுச்சவாரிகளை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இங்கிருக்கும் படகு குழாமில் மிதி படகுகள், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கடற்கரையில் ஒரு சிறுவர் பூங்காவும், சில கடற்கரை உணவு விடுதிகளும் மற்றும் டென்னிஸ் மைதானமும் உள்ளன. இந்த கடற்கரையின் மிகச்சிறந்த காட்சியாக கருதப்படும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமான காட்சிகளை காண்பதற்கு சரியான நேரத்தில் செல்லுங்கள்.
ஆரோவில் நகரம்
பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.
50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.
அகாலகன்
காரைக்கால் நகரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்கிருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா கிராமமான அகாலகன்னுவிற்கு வருவது நல்லதாகும். காரைக்கால் மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அகாலகன்னு, அதன் நீர் வேலைப்பாடுகள் மற்றும் கோவில்களுக்காக புகழ் பெற்ற இடமாகும். இந்த கிராமம் வித்யானதந்தா சுவாமி கோவிலுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
Bernard Gagnon
கைலாசநாதர் கோவில்
காரைக்காலில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான அருள்மிகு கைலாசநாதர் கோவில், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இடமாகும்.
புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு எதிரிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. பிரெஞ்சு அரசின் ஆட்சிக் காலத்திலும் இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டு புணரமைக்கப்பட்டது.
Kumaraguru
தூய இருதய கிறிஸ்து தேவாலயம்
பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும். கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடமாகும். இந்த தேவாலயத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் காலங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் கண்ணாடி ஓவியங்கள் மிகவும் கவனிக்கத் தக்க அம்சங்களாகும்.
BishkekRocks
பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம்
1826-ம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன. 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் ஆகியவை பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
BishkekRocks
காசக்குடி கிராமம்
காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கும் மேல காசக்குடி கிராமம் இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற கிராமங்களில் ஒன்றாகும். இந்த கிராமம் காரைக்கல்-நெடுங்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்காக இந்த கிராமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மாநில அரசாங்கத்தால் பழமையான நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த கோவில், அதன் கற்குடைவுகள், வெளிப்பகுதி மற்றும் உட்புற அழகு ஆகியவற்றால் காண்பவரை கண்டிப்பாக ஈர்த்து விடும்
Sandip Dey
அரிக்கமேடு
1940-களில் மார்ட்டிமோர் வீலர் என்பவரால் மிகவும் பரவலாக செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிகழ்ந்த இடம் தான் அரிக்கமேடு. சோழர்களின் பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வாணிபம் நடைபெற காரணமாக இருந்த முக்கிய துறைமுக நகரமாக அரிக்கமேடு இருந்தது.
இந்த இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் ரோமானிய நாகரிகத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்து வருகின்றன.
அரிக்கமேடு மணிகளை தயாரிப்பதில் முக்கியமான மையமாக இருந்துள்ளது. அரிக்கமேட்டில் கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கு சற்று முன்னதாகவே மக்கள் குடியிருப்புகளை அமைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக அரிக்கமேடு உள்ளது.
Jayaseerlourdhuraj
தர்மாபுரம்
காரைக்கால் நகரத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் தர்மாபுரம். தர்மாபுரத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ யாழ்முரிநதீஸ்வரர் கோவில் என்ற புனிதத்தலம் உள்ளது. இந்த இடத்திற்கு திருஞானசம்பந்தர் வருகை தந்து, இங்கு குடிகொண்டுள்ள ஸ்ரீ யாழ்முரிநதீஸ்வரரை துதித்து பதிகங்களை பாடியதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் குறைந்த விலையிலான தங்குமிடங்களும் அதிகம் உள்ளன
Ramsadeesh
கிரேண்ட் மாஸ்க்
முதன் முதல் 1848ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட இடத்தில் கிரேண்ட் மாஸ்க் கட்டப்பட்டது. பின்னர் பல முறை இந்த மசூதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது. 1956ஆம் ஆண்டு முதல் முறையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டு, பின்னர் 1978ஆம் ஆண்டு முற்றிலும் இடிக்கப்பட்டு, இவ்விடத்தில் புதிய மாஸ்க் கட்டப்பட்டது. இந்த மசூதி 1999-2000 ஆம் ஆண்டு இறுதியாக இப்போது இருக்கும் கிரேண்ட் மாஸ்காக உருவெடுத்தது.