கேரளாவின் மலபார் மாவட்டத்தில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி நகரம். இந்த நகரம் கடற்கரைகளுக்காகவும், எண்ணற்ற மசூதிகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். அதோடு தென்னிந்தியாவின் பழமையான துறைமுக நகரங்களில் ஒன்றான பொன்னனி, மலபார் மாவட்டத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது.
தென்னிந்தியாவின் மெக்காஹ்
பொன்னனி நகரம் பல நூற்றாண்டுகளாக முக்கிய இஸ்லாமிய கல்வி மையமாக திகழ்ந்து வருவதால் 'தென்னிந்தியாவின் மெக்காஹ்' என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹிந்து, முஸ்லிம் என்று மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த நகரத்தில் ஒற்றுமையாக வசித்து வருவதால் மத நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக பொன்னனி நகரம் திகழ்ந்து வருகிறது.
வரலாறு
பொன்னனி நகரின் பாரம்பரியமும், வரலாறும் பொன்னனி நகரத்தின் வரலாற்றை புரட்டிப் பாத்தால் அது நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும். இந்த நகரத்தில் உள்ள பொன்னனி ஜூம்மா மசூதியை பற்றி புகழ்பெற்ற காலனித்துவ வரலாற்றியலாளர் வில்லியம் லோகன் எழுதிய மலபார் கையேட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன.
இரண்டாவது தலைநகரம்
பொன்னனி நகரம் சமூத்ரி மகாராஜாக்களின் ஆட்சி காலத்தில் மலபார் பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக விளங்கி வந்தது. அதோடு இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈத்த எண்ணற்ற சுத்தந்திர போராட்ட வீரர்கள் தோன்றிய சிறப்பு வாய்ந்த பூமியாக பொன்னனி நகரம் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.
காணவேண்டிய இடங்கள்
பொன்னனி நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது பொன்னனி ஜூம்மா மசூதி, பொன்னனி கலங்கரைவிளக்கம், மீன்பிடி துறைமுகம், சரஸ்வதி ஹிந்து கோயில், பீயம் காயல் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இந்த நகரில் பாரதப்புழா நதியும், திரூர் ஆறும் பிரம்மாண்டமான அரபிக் கடலில் கலப்பதற்கு முன் சங்கமாகும் அலைவாயில் ஒன்று உள்ளது.இவ்விடம் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகளுக்கு தற்காலிக புகலிடமாக விளங்கி வருகிறது. எனவே எண்ணற்ற பறவையினங்களை கண்டு ரசிக்க இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
All photos taken from
wiki