நவீன இந்தியாவின் அடையாள நகரமாக மாறிவிட்ட நகரம் பெங்களுரு ஒரு கலாச்சார கேந்திரமாகவும் திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வசிக்கும் வெவ்வேறு கலாச்சார அடையாளங்களை கொண்ட பண் மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் ஆனந்தமாக வசிக்கும் ஒரு நகரமாக திகழ்கிறது. இங்கு இன மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மதப் பண்டிகைகளும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்நகரில் இருக்கும் புகழ்பெற்ற ஐந்து சர்ச்சுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குழந்தை இயேசு சர்ச்:
Photo: Johnchacks
பெங்களுருவின் விவேக் நகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ரோமன் கத்தோலிக்க சார்ச்சான குழந்தை இயேசு சர்ச். செக் குடியரசு நாட்டில் உள்ள பராக் நகரில் அமைந்துள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற குழந்தை இயேசு சர்ச்சை கவுரவிக்கும் நோக்கத்துடன் எழுப்பப்பட்டதே இந்த சர்ச்சாகும். சாதாரண பிரார்த்தனை தினங்களில் 2000 பேரும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது 10,000 பேரும் இங்கு நடக்கும் பிரார்த்தனைகளில் கலந்து கொள்கின்றனர். இந்த சர்ச்சில் நிகழ்ந்த அற்புதங்களை மையப்படுத்தியே 'குழந்தை இயேசு' என்ற தமிழ் திரைப்படம் உருவானது.
புனித பிரான்சிஸ் சேவியர்ஸ் கதீட்ரல்:
Photo: Saad Faruque
பெங்களுருவில் உள்ள மிகப்பழமையான சர்ச்சுகளில் ஒன்றான இது 1886ஆம் ஆண்டில் இருந்து 1946ஆம் ஆண்டு வரைக்கும் பெங்களுரு மற்றும் மைசுருவின் ஆர்ச் சர்ச்சாகவும் இருந்திருக்கிறது. 1851ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சர்ச் அதிகப்படியான மக்கள் வர ஆரம்பிக்கவே இடவசதி போதாமல் 1911 ஆம் புதிய சர்ச் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சர்ச்சின் நூற்றாண்டு விழா 2009 ஆம் ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிளீவ்லாந்து டவுன் தெருவில் அமைந்திருக்கும் இந்த சர்ச்சின் பழமையான கட்டிடக்கலையை ரசிக்கவும், பிர்ரர்த்திக்கவும் ஏராளமான மக்கள் வருகின்றனர்.
புனித மேரி'ஸ் பசில்லியா:
Photo: Muhammad Mahdi Karim
பெங்களுருவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சிவாஜி நகரில் அமைந்திருக்கிறது புனித மேரி'ஸ் சர்ச். பெங்களுருவில் இருப்பதிலேயே மிகப்பழமையான சர்ச் இது தான். கர்நாடகா மாநிலத்திலேயே மைனர் பசில்லியா சர்ச்சாக அறிவிக்கப்பட்ட ஒரே சர்ச்சும் இதுவே. மற்ற இடங்களில் இருப்பது போன்றல்லாமல் இங்கு கிறிஸ்மஸ் பண்டிகை மிகவும் அமைதியான முறையிலேயே கொண்டாடப்படுகிறது.
புனித ட்ரினிட்டி சர்ச்:
Photo: Charles Haynes
பெங்களுருவின் மிகப்பரப்பரப்பான பகுதியான எம்.ஜீ ரோட்டில் ட்ரினிட்டி சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த புனித ட்ரினிட்டி சர்ச். 1851ஆம் ஆண்டு பெங்களுருவில் இருந்த பிரிட்டிஷ் ரேஜிமேன்டினால் கட்டப்பட்ட இந்த சார்ச்சானது ஆங்கிலேய கட்டிடக்கலை வடிவமைப்பின் படி அமைந்திருக்கிறது. பண்டிகை காலங்களில் இந்த சர்ச் விழாக்கோலமாக காட்சி தரும். ஒரே நேரத்தில் இதனுள் 700 பேர் வரை பிரார்த்தனை செய்யலாம்.
பெத்தல் அசம்பிலி ஆப் காட் சர்ச்:
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றாகவும் ஆசியாவின் மிக முக்கிய சர்ச்சுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது இந்த பெத்தல் அசம்பிலி ஆப் காட் சர்ச். ஒரே நேரத்தில் இதனுள் 3500 பேர் வரை அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடியும். இந்த சர்ச்சில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், பிரெஞ்சு, நேபாளி மற்றும் ஆங்கிலம் என 8 வெவ்வேறு மொழிகளில் பிரார்த்தனை நடக்கிறது.