இந்த நகரம் நீரமைந்த நகரம் என்ற பொருளில் புனலூர் என்று தமிழிலும், மலையாளத்திலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இதன் பெயருக்கேற்றபடி இந்த நகரில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கல்லடா எனும் நதி புனலூர் நகரின் செழுமைக்கும், வளமைக்கும் மூலகாரணமாக திகழ்ந்து வருகிறது. புனலூர் பேப்பர் மில்ஸ் துவங்கப்பட்டதன் காரணமாக கேரளாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டதாக பிரபலமாக அறியப்படும் புனலூர் நகரம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. வாருங்கள் நாமும் சென்று பார்க்கலாம்.
All photos taken from
எங்குள்ளது
புனலூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நுழைவாயிலாக கருதப்படும் பத்னபுரம் தாலுக்காவின் நிர்வாக தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் அமைந்திருக்கும் இந்த நகரம் தெற்கு கேரளாவின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.
நினைவுச் சின்னம்
புனலூர் நகரின் புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது தேசிய முக்கியத்துவத்தை பறைசாற்றும் நினைவுச் சின்னமாக 19-ஆம் நூற்றாண்டில் கட்டபட்ட தொங்கு பாலமே ஆகும். இந்த பாலம் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும் பாலத்தை பாதுகாக்க தேவையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
தொங்கு பாலம்
புனலூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தொங்கு பாலத்தை தவிர அகஸ்த்திய மலை எனும் காட்டுயிர் சரணாலயத்துக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம். மேலும் அன்னாசி பழம், பிளைவுட், டிம்பர், மிளகு போன்றவைக்காகவும் புனலூர் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதுமிருந்து சபரிமலை வருபவர்கள் புனலூர் நகரில் இளைப்பாறி செல்வதால் திருவிழா காலங்களில் புனலூர் நகரம் ஜேஜேவென்று இருக்கும்.
எக்கோ டூரிஸம்
இந்த நகருக்கு நீங்கள் வரும்போது சேந்த்ருணி காடுகளுக்கும், தென்மலா ஈக்கோ டூரிசம் பகுதிக்கும் கண்டிப்பாக சென்று வர வேண்டும். இப்பகுதிகளில் நீங்கள் நெடுந்தூர நடைபயணம், மவுண்டெயின் பைக்கிங் போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு பாலருவியும், பழைய குற்றாலமும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள். இவைதவிர புனலூர் நகருக்கு வரும்போது நீங்கள் பட்டாழி தேவி கோயிலுக்கும் சென்று வரலாம்.
முதல் பயணம்
புனலூர் தொங்கு பாலம் கல்லடா ஆற்றின் குறுக்கே 1877-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஹென்றி என்பவரால் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க முழுமையாக ஆறு ஆண்டுகள் ஆயின. இந்த பாலம் கட்டப்பட்ட புதிதில் இதில் பயணம் செய்ய பொதுமக்கள் பெரிதும் அஞ்சினர். ஆனால் பொறியாளரும் அவர் குடும்பமும் பாலத்துக்கு அடியில் ஒரு நாட்டுப்படகில் பயணம் செய்ய, அந்த சமயம் ஆறு யானைகள் பாலத்தில் நடத்திச் செல்லப்பட்ட காட்சியை அனைவரும் பார்த்தபிறகு தொங்கு பாலத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
நான்கு ஆழமான கிணறுகள்
புனலூர் தொங்கு பாலம் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் வசித்து வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அங்கு அடிக்கடி வந்து சென்ற வன விலங்குகளை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பாலம் நடக்கும் போது குலுங்குவதால் விலங்குகள் பாலத்தில் நடப்பதற்கு அஞ்சும். எனவே அவைகள் கான்கிரீட் பாலத்தை கடப்பதை போல் இந்த தொங்கு பாலத்தை கடக்க முடியாது. புனலூர் தொங்கு பாலத்தை நான்கு ஆழமான கிணறுகள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் 100 அடி ஆழம் கொண்டவை.