பீகார் மாநிலத்தில் இருந்து 2000மாவது ஆண்டு பிரிந்து தனி மாநிலமாக உருவான ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் தான் ராஞ்சி. செழுமையான கனிம வளங்களை கொண்டிருந்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்த ஜார்கண்ட் மாநிலத்திற்கு புது அடையாளத்தையும், அதுf மேம்பட உதவியதிலும் மண்ணின் மைந்தன் நம்ம இந்திய அணி கேப்டன் தோனிக்கு பெரும் பங்குண்டு. அப்படிப்பட்ட நகரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஹூண்டுரு அருவி :
Photo: Skmishraindia
இயற்கை எழில் கொஞ்சும் ராஞ்சி நகரில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் தான் இந்த ஹூண்டுரு அருவி ஆகும். இந்தியாவில் இருக்கும் உயரமான அருவிகளில் ஒன்றான இது சுபர்ணரேகா ஆற்றின் ஊடாக 322 அடி உயரத்தில் இருந்து வீழ்கிறது. மழை காலத்தில் இவ்வருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம் கோடை காலத்தில் மிதமான அளவில், குளுகுளுவென கொட்டும் தண்ணீரில் ஆட்டம் போடுவது அற்புதமாக இருக்கும். மேலும் இதனை சுற்றிலும் நாம் புகைப்படம் எடுக்க அற்புதமான காணிடங்கள் நிறைய உள்ளன.
ராஞ்சி நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் ராஞ்சி - புருலியா சாலையில் இவ்விடம் அமைந்திருக்கிறது.
ஜோன்ஹா அருவி :
Photo: Eddyvishal
ராஞ்சி நகருக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் மற்றுமொரு பேரழகு நிரம்பிய அருவி தான் இந்த ஜோன்ஹா அருவி. ராஞ்சி பீடபூமியின் ஒரு முனையில் அமைந்திருப்பதால் 'தொங்கும் அருவி' என்ற புனைப்பெயரும் இதற்கு உண்டு. 722 படிகள் ஏறி இந்த அருவியை அடைந்தால் புத்த விஹாராத்தை உடைய சுற்றுலா விடுதியொன்றும், சிறு கோயிலும் இருக்கிறது. ராஞ்சி நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. ஹூண்டுரு அருவியை போலவே இவ்வருவியும் ராஞ்சி - புருலியா சாலையில் அமைந்திருக்கிறது.
ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம் :
Photo: Akash Guruji
மிகவும் பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் இந்திய அணிக்கு கேப்டனாக வருவார் என்பது யாருமே யுகிக்காத ஒன்று. அப்படி தோனி ஒரு நாயகனாக உருவானது ஜார்க்கண்டின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரிந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உருவானது தான் ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம். உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும்.