வெளிநாடு என்றாலே பாமர மக்களுக்கும் உடனே நினைவுக்கு வருவது அமெரிக்கா தான்! அமெரிக்கா சென்று வருவது என்பதை இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோர் தங்கள் வாழ்நாள் லட்சியமாகவே கருதுகிறார்கள். ஆனால் அமெரிக்க தூதரகமோ அவர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டிருக்கிறது! ஆம் முதல் முறையாக (B-1) மற்றும் (B-2) விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட 1000 நாட்களை நெருங்குகிறது. அமெரிக்க அரசாங்கம் எதனால் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது? அமெரிக்க விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது குறித்து கீழே காண்போம்!
அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லாதவர் யாரேனும் உண்டா?
எத்தனை நாடுகளுக்கு நீங்கள் சென்று வந்திருந்தாலும் அமெரிக்கா சென்று வரவில்லை என்றால், நீங்கள் உண்மையிலேயே ஒரு வெற்றிடத்தை உணருவீர்கள். ஏனென்றால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, வேலையாட்களை, மாணவர்களை பெறுவதில் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. ஏன் நீங்களே யோசித்து பாருங்களேன், உங்கள் ஊரில் உள்ள வயதானவர்களும் கூட அமெரிக்கா என்ற பெயரை தெரிந்து வைத்திருப்பார்களே. சரி தானே? ஆனால், இந்த மாதத்தை பொருத்தவரை சுற்றுலா விசா (B1/B2) நேர்காணல் சந்திப்புக்கான உலகளாவிய சராசரி காத்திருப்பு நேரம் இரண்டு மாதங்களாக இருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
B-1 மற்றும் B-2 விசாக்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காத்திருப்பு காலம்
சுற்றுலா விசாக்களுக்கு (B-2) மற்றும் அமெரிக்க வணிக விசாக்களுக்கு (B-1) முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, காத்திருப்பு நேரம் இப்போது மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பின் படி, மும்பையில் இருந்து அமெரிக்க (B-1) மற்றும் (B-2)விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 999 நாட்கள் காத்திருக்க வேண்டும், அதுவே ஹைதராபாத்தில் 994 நாட்கள், டெல்லியில் 961 நாட்கள், சென்னையில் 948 நாட்கள் மற்றும் கொல்கத்தாவில் 904 நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய பயணிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் கூடிய வேலைப்பளு
அதிகரித்து வரும் பேக்லாக்களை சரி செய்வதற்காக, நேர்காணல் தள்ளுபடிக்கு (interview waiver) அதிகமான விண்ணப்பதாரர்களை அமெரிக்கா தகுதிப்படுத்தியுள்ளது. இது தற்காலிக பணியாளர்களைப் பெறுவதற்கும் நன்கு உறுதியான தீர்ப்பைப் பெறுவதற்கும் வெளிநாடுகளில் டிராப் பாக்ஸ் வழக்குகளை அனுப்புகிறது. அமெரிக்க தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அமெரிக்க அரசாங்கம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறது. தொற்றுநோய் காரணமாக தூதரக பணியாளர் இடைவெளிகளை நிரப்ப முயற்சிப்பதன் மூலம் காத்திருப்பு நேரம் மற்றும் பின்னடைவுகளை குறைக்க முயற்சி செய்து வருகிறது.
தேசிய நலன் கருதி அமெரிக்க விசா விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை
அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதில் புதிய பணியாளர்களை உள்வாங்குதல் மற்றும் பயிற்சியளிப்பது ஆகியவை அடங்கும். அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஆண்டை விட அமெரிக்க அதிகாரிகளின் பணியமர்த்தலை இரட்டிப்பாக்கியுள்ளது. அதாவது தேசிய நலன் கருதி ஏற்கனவே அமெரிக்க விசா பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. நீங்கள் அமெரிக்கா செல்வது அமெரிக்காவிற்கு பயனளிக்கும் என்றால் உங்களது விசா உடனடியாக அங்கீகரிக்கப்படும் மக்களே. நீங்கள் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் அல்லது வணிக விஷயமாக செல்லுகிறீர்கள் என்றால் உங்களது விசா காத்திருப்பு காலம் நிச்சயம் 1௦௦௦ நாட்களை நெருங்கிவிடும். மனம் தளராமல் யோசித்து செயல்படுங்கள்!