வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு 'சண்டிகர்' எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு.
பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் பஞ்சாப் மாநிலத்திற்கான புதிய தலைநகர் பற்றிய அவசியம் ஏற்பட்டபோது அப்போதைய பிரதமரான பண்டித ஜவகர்லால் நேரு ஒரு புதிய நவீன நகரத்தை நிர்மாணிக்க விரும்பினார். அவரது திட்டப்படி பிரபல ஃபிரெஞ்சு கட்டிடக்கலை நிபுணரும் நகர வடிவமைப்பாளருமான 'லெ கொர்புசியர்' என்பவர் இந்த சண்டிகர் நகரத்தை 1950களில் வடிவமைத்து நிர்மாணித்தார். 1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த நவீன நகரம் ஒரு தனிப்பட்ட யூனியன் பிரதேசமாகவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டு உருவம் பெற்றது. சண்டிகர் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள் சண்டிகர் நகரத்தில் 'லெ கொர்புசியர்' சிருஷ்டித்த கலைப்படைப்புகளில் ஒன்றாக 'தி ஓபன் ஹான்ட்' என்றழைக்கப்படும் சின்னம் ஒன்று கேபிடோல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலாத் தகவல்கள்
சண்டிகர் நகரத்தில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக ராக் கார்டன் எனும் பூங்கா பிரசித்தமாக அறியப்படுகிறது. இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் மற்றும் கவர்ண்மென்ட் மியூசியம் போன்றவையும் இங்கு தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்களாகும். சண்டிகர் நகரத்தின் வடபகுதியில் உள்ள பெரிய வனப்பகுதி காட்டுயிர் ரசிகர்களை பெரிதும் கவரும் அம்சமாக வீற்றுள்ளது.
இயற்கைப்பிரதேசம்
கன்சால் மற்றும் நேப்லி காடுகளில் பல்வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படும் இயற்கைப்பிரதேசமாக புகழ் பெற்றுள்ளன. இவை தவிர சுக்னா காட்டுயிர் சரணாலயமும் இங்கு முக்கியமான இயற்கைச்சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. சுக்னா ஏரிக்கான நீர்ப்பிடிப்புப்பகுதியாக விளங்கும் இந்த வனச்சரகம் ஏராளமான பாலூட்டி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை கொண்டுள்ளது.
சாத்பிர் வனவிலங்குக்காட்சியகம்
சண்டிகருக்கு அருகில் உள்ள மொஹாலி எனும் இடத்தில் சாத்பிர் வனவிலங்குக்காட்சியகம் ஒன்றும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. ரோஸ் கார்டன் மற்றும் குருத்வாரா கூஹ்னி சாஹிப் ஆகியவை சண்டிகர் நகரத்தின் இதர சுற்றுலா அம்சங்களாகும்
எப்படி செல்வது
சண்டிகருக்கு நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சண்டிகர் நகரை வந்தடையலாம். சண்டிகர் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 8 கி.மீ அமைந்துள்ளது. 17-வது செக்டார் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் வெளி மாநிலப்பேருந்துகளுக்கான இரண்டு பேருந்து நிலையங்கள் செக்டார் 17 மற்றும் செக்டார் 43ல் அமைந்துள்ளன. எப்போது விஜயம் செய்யலாம் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.
கலைப்பூங்கா
1-வது செக்டாரில் சுக்னா ஏரி மற்றும் கேபிடோல் காம்ப்ளக்ஸுக்கு நடுவே இந்த ராக் கார்டன் அமைந்துள்ளது. சண்டிகர் நகரத்தில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்றும் இதனை சொல்லலாம்.
நேக் சந்த் என்பவரால் 40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாறைத்தோட்ட பூங்காவில் 14 அறைகள், நீரூற்றுகள், தடாகங்கள், நடைபாதைகள் போன்றவை அழகியல் அம்சங்களோடு காட்சியளிக்கின்றன.
கலைச் சிற்ப வேலைப்பாடுகள்
40 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த பூங்கா வளாகம் தனித்தன்மையான கலைச்சிற்ப அமைப்புகளால் நிரம்பியுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
மனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் போன்ற பல்வேறு தோற்றங்களில் இந்த கலைப்படைப்புகள் காட்சியளிக்கின்றன. தினமும் காலை 9 மணிக்கு இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.
பரப்பளவு
ரோஸ் கார்டன் இந்த பூங்காத்தோட்டம் 1967ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே இது போன்ற மிகப்பெரிய பூங்காத்தோட்டம் இதுதான் எனும் பெருமையை இது பெற்றுள்ளது.
ஜாகீர் ஹுசேன் ரோஸ் கார்டன் என்றும் அழைக்கப்படும் இந்த 17 ஏக்கர் பரப்பை கொண்ட பூங்காவில் 1600 வகைகளை சேர்ந்த 17000 ரோஜாச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. ரோஜாச்செடிகள் மட்டுமல்லாமல் பலவித மூலிகை தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
ரோஜா திருவிழா
பாஹேரா, காம்பெர், பேல், ஹரார் மற்றும் மஞ்சள் குல்மொஹர் போன்றவை இவற்றில் அடக்கம். நன்கு பரமாரிக்கப்பட்டு வரும் இந்த தோட்டப்பூங்காவில் வருடந்தோறும் ‘ரோஜா திருவிழா' எனும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த திருவிழா உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. மனம் மயக்கும் ரோஜா மலர்களால் ஜொலிக்கும் சண்டிகரின் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த ரோஜாப்பூங்கா சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாளில் 5000 பார்வையாளர்கள் இந்த பூங்காத்தோட்டத்துக்கு விஜயம் செய்கின்றனர்.