குஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள இரண்டாவது உயரமான பீடபூமி இதுவாகும். அதுமட்டுமல்லாமல் சாபுதாரா ஒரு அழகிய எழில்கொஞ்சும், பசுமை அடர்ந்த மலை வாழிடமாக சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது.
ராமாயணத்துடன் தொடர்புள்ள இடம்!
பகவான் ஸ்ரீராமன் தனது 14 ஆண்டு கால வனவாசத்தின்போது காட்டில் வசித்தாரல்லவா? அதுபோது, இப்பகுதியில்தான் நீண்டகாலம் வசித்தார் என்ற பரவலான நம்பிக்கை நிலவுகிறது. சாபுதாரா என்றால் "பாம்புகளின் இருப்பிடம்" என்று பொருள். சாபுதாரா அமைந்துள்ள டாங் வனப்பகுதியில் வசிக்கும் மக்களில் 90% பேர் ஆதிவாசிகளாவர். இந்த ஆதிவாசிகள் நாகபஞ்சமி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளின் பொழுது சர்ப்பகங்கா நதிக்கரையில் பாம்புகளின் உருவச்சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.
சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்கள்
சாபுதாராவில் ஏராளமான கால்வாய்கள், நீரோடைகள், ஏரிகள் நிறைந்துள்ளன. சாபுதாராவில் ஒரு சுற்றுலாத்தலத்துக்குத் தேவையான வசதிகளான, உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், படகுத் துறைகள், திரையரங்கங்கள், அருங்காட்சியகம் ஆகியவை நிறைந்து இருந்தாலும், இப்பகுதியின் மாசுபடாத இயற்கை அழகும் பேணப்பட்டு வருகிறது. சாபுதாரா ஏரி, சூரிய அஸ்தமன முனை, சூரியோதய முனை, எதிரொலி முனை, நகர்க் காட்சி முனை, காந்தி சிகரம், கந்தர்வபூர் கலைக் கிராமம், வன்ஸ்தா தேசியப் பூங்கா, பூர்ணா சரணாலயம், ரோஜாத் தோட்டம், ரோப்கார் வழி ஆகியவை சாபுதாராவில், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் சில இடங்களாகும்.
இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மஹால் பர்திப்புரா காட்டில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தையும், 52 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரா நீர்வீழ்ச்சியையும், சாபுதாராவிலிருந்து எளிதாகப் பயணித்துக் கண்டுவரமுடியும். மஹால் பர்திப்புரா காட்டில் நிறைய ஆறுகளும் மூங்கில் புதர்களும் நிறைந்து சுற்றுலாப்பயணிகளுக்கு திரில்லான மலையேற்ற மற்றும் நடை அனுபவத்தை அளிக்கின்றன. குஜராத் மாநிலத்தின் வறண்ட பகுதிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு ஒரு இனிமையான, குளிர்ச்சியான காலநிலையுடன் திகழும் பகுதியான சாபுதாராவின் கண்ணுக்கினிய அடர்ந்த பசுமையைக் காணத்தவறிவிடக்கூடாது. எனவே உங்கள் அடுத்த சுற்றுலா செல்லவேண்டிய இடங்களின் பட்டியலில் சாபுதாராவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காலநிலை
ஆண்டுமுழுவதும் இங்கு சீரான ரம்மியமான காலநிலை நிலவுகிறது. சூரியன் சுட்டெரிக்கும் வறண்ட குஜராத்தின் சமவெளிகளிலிருந்து தப்பித்து ஓய்வெடுக்க ஏற்ற இடமாக இப்பகுதியின் இனிமையான குளிர்ச்சியான காலநிலை உதவுகிறது. கடல் மட்டத்திலிருந்து 873 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் எக்காலத்திலும், ஏன் கோடைகாலத்தில் கூட, இப்பகுதியின் வெப்பநிலை 28 டிகிரியை தாண்டுவதில்லை. மழைக்காலத்தில் இப்பகுதியில் நல்ல மழைப் பொழிவு காணப்படுகிறது. அதனால் இப்பகுதி மேலும் பசுமையாகிறது. மார்ச் பாதியிலிருந்து நவம்பர் வரையான காலமே சாபுதாராவிற்கு சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற காலமாகும்.
போக்குவரத்து
சூரத் நகரிலிருந்து 162 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாபுதாரா. மகாராஷ்டிரா மாநில எல்லையானது சாபுதாராவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரம்தான். அருகாமையில் அமைந்துள்ள வசதியான ரயில் நிலையம் பில்லிமோரா ரயில்நிலையமாகும். அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் சூரத் ஆகும்.
சாபுதாரா மலை வாழிடமே மிகவும் எழில் கொஞ்சும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கும்போது, அதில் அமைந்துள்ள சாபுதாரா ஏரி அதற்கு மேலும் எழில் சேர்க்கிறது. அழகு ததும்பும் பசுமையான இயற்கைச் சூழலுக்கு மத்தியில் தெள்ளத்தெளிவான நீர் நிறைந்துள்ள சாபுதாரா ஏரியில் படகுச் சவாரி செய்வது ஆனந்தத்திலும் ஆனந்தமே.
அமைதியையும் நிசப்தத்தையும் விரும்பும் எவரும் இவ்விடத்தை ரசிப்பார்கள். இதுவும் ஒரு பரந்து விரிந்த மலை வாழிடம் ஆகும். காலையிலும் மாலையிலும் காலாற நடை பயிலவும், இளைப்பாறவும் ஏற்ற இடம் இந்த மலையுச்சியாகும். இம்மலையுச்சியிலிருந்து இதனைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கின் இயற்கை எழிலைக் கண்டு இன்புறலாம். குஜராத்திற்கும் மஹாராஷ்டிராவுக்குமான எல்லையைப் பிரித்துக்காட்டும் வேலியொன்றும் இம்மலையுச்சியில் அமைந்துள்ளது