சவன்துர்கா மலைப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த யாத்ரீக ஸ்தலம் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது. இந்த கோயிலில் இயற்கையாகவே பாறையில் உருவாகியிருக்கும் நரசிம்மஸ்வாமி சிலையை பயணிகள் பார்க்கலாம். அமைதியான இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாக பொழுதை கழிக்க விரும்பும் பயணிகளுக்கு இது மிகவும் உகந்த ஸ்தலமாகும். மேலும் இதன் சிறப்புகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
எங்கே இருக்கிறது?
அரண்கள் போல் உயர்ந்து நிற்கும் இரண்டு மலைகள், கோயில்கள், இயற்கை எழில் ஆகியவை சேர்ந்து காட்சியளிக்கும் இந்த சவன்துர்க்கா நகரம் பெங்களூரிலிருந்து 33 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை அளிக்கக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
மலைகளும் கோட்டைகளும்
சவன்துர்க்கா நகரம் கரிகுட்டா மற்றும் பிலிகுட்டா எனும் இரண்டு மலைகளுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. கருப்பு மலை மற்றும் வெள்ளை மலை என்பது இந்த பெயர்களின் பொருளாகும். இந்த இரண்டு மலைகளும் தக்காண பீடபூமியின் மீது 1226 மீட்டர் உயரத்தில அமைந்துள்ளன.
கடினமான மலையேற்றம்
கிரானைட் மற்றும் லாடரைட் பாறைகளால் உருவாகியுள்ள இந்த மலைகள் ஏறுவதற்கு கடினமான மலைகளாகும். பாறைப்பிளவுகளும் மடிப்புகளும் சிகரத்தை நோக்கிய மலையேற்றத்துக்கு பெரும் சவாலாய் காணப்பட்டாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது உற்சாகமூட்டும் சாகசமாய் இருக்கக்கூடும்.
ஆர்மில்லாதவர்களுக்கு
மலையுச்சியில் சிதிலமடைந்த கோட்டை ஒன்று அமைந்துள்ளது. மலையேற்றத்திலோ அல்லது பாறையேற்றத்திலோ ஆர்வம் இல்லாத பயணிகள் இங்குள்ள வீரபத்ரேஷ்வரர் ஸ்வாமி கோயில் மற்றும் நரசிம்மஸ்வாமி கோயில் போன்றவற்றை சுற்றிப்பார்க்கலாம். இவ்விரண்டு கோயில்களும் மலையடிவாரத்திலேயே அமைந்துள்ளன.
மரங்களும் பறவைகளும்
கோயிலை சுற்றியிள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இயற்கை நடைப்பயணமும் மேற்கொள்ளலாம். அபூர்வமான மரவகைகள் மற்றும் மஞ்சள் கழுத்து புல்புல் பறவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். வரலாற்று ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில கற்கால முதுமக்கள் தாழிகள் இங்கு காணப்படுகின்றன.
எப்படி செல்வது?
சவன்துர்கா அருகிலுள்ள ஊரான மகடி வரை பெங்களூரிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளது. மகடியிலிருந்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் உங்களை சவன்துர்காவிற்கு அழைத்துச்செல்ல கிடைக்கின்றன.
மஞ்சின்பேலே அணை
நகரின் சந்தடியிலிருந்து விலகி ஓய்வாக நேரத்தை கழிக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஸ்தலமாகும். சிற்றுலா (பிக்னிக்) மற்றும் பறவை வேடிக்கைக்கும் இது பொருத்தமாக உள்ளது. பெங்களூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த அணைக்கு வரவிரும்பும் பயணிகள் மகடி சாலை வழியாக வரலாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இந்த மஞ்சின்பேலே அணைக்கு சிற்றுலா செல்ல உகந்த காலமாகும்.
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம்
நேரம் இருப்பின் சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இந்த திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த நீர்த்தேக்க அமைப்பு 1933ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் காவேரி ஆற்றின் துணை ஆறாகிய அர்க்காவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இது பெங்களூர் நகரத்தின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது