ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்துக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சிம்ஹாச்சலம், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ஹமூர்த்திக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் புகழ்பெற்ற கோயில் உள்ள ஸ்தலமாக பிரபலமாக அறியப்படுகிறது. இதன் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் நரசிம்ம மூர்த்தியாக, திரிபங்க வடிவம் என்று அழைக்கப்படும் மூன்று வெவ்வேறு நிலைகளில் சந்தன பூச்சுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்தக் கோயில் நரசிம்மருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள 18 கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதோடு, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலில் 1098-ஆம் ஆண்டை சேர்ந்த சோழ மன்னன் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அதேசமயம் மற்றொரு கல்வெட்டு கலிங்கா ராணி வாழ்ந்த 1137 மற்றும் 1156-ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களை சேர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இவைபோல நரசிம்மர் கோயிலின் சுவர்களில் 252-களுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் யாவும் கோயிலின் தொன்மையை பறைசாற்றுவதோடு, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரலாறு குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு சிறந்த ஆதாரமாக உள்ளன. மேலும் இந்தக் கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் ஒரிய மொழிகளில் காணப்படுவதுடன், கோயிலின் கட்டிடக் கலை பாணியும் இந்த இரு மொழிகள் சார்ந்த பகுதிகளின் கட்டிடக் கலையையே பிரதிபலிக்கின்றன. அதோடு இங்கு உள்ள குன்றில் ஒரு புனித குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருப்பதையும் பயணிகள் பார்க்கலாம்.
சிம்ஹாச்சலம் கிராமம் குறித்து சுவையான புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது சில இஸ்லாமிய கொள்ளையர்கள் இந்த கிராமத்துக்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஊடுருவியபோது கிராம மக்களை காத்தருளுமாறு குமாரநாதன் என்ற புலவர் நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டார். இவருடைய வேண்டுதலை நிறைவேற்றி மக்களை காப்பதற்காக நரசிம்மர், குளவிக் கூட்டத்தை கொள்ளையர்கள் மீது ஏவிவிட்டு அவர்களை பயந்தோடச் செய்தார் என்று புராணம் கூறுகிறது. சிம்ஹாச்சலம் கிராமம் வெப்பம் மிகுந்த கோடை காலத்தையும், இதமான பனிக் காலத்தையும் கொண்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. இந்த கிராமத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம்.