அழகிய ஏழு நதிகள் சூழ ஆர்ப்பரிக்கும் விதத்தில் நடுவே ஒய்யாரமாக வீற்றிருக்கிறது எடுப்பாயலா வன துர்கா கோவில். இந்த கோவிலுக்கு செல்பவர்களுக்கு சப்த ரிஷிகளின் அருளும், வன துர்க்கை அம்மனின் அருளும் சேர்த்து கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நல்ல சுவாரசியமான ஒரு காட்டு பயணமும், சாகச அனுபவமும் கிடைக்கிறது என்றால் இந்த பயணத்தை ஏன் நாம் முயற்சித்து பார்க்ககூடாது. வாருங்கள் எடுப்பாயலா வன துர்கா கோவில் எங்குள்ளது எப்படி செல்வது, அருகில் காணவேண்டிய இடங்களையும் காண்போம்.
எடுப்பாயலா வன துர்கா
துர்கை அம்மனின் எடுப்பாயலா கோவில் அழகிய மரங்கள் நிறைந்த காடுகளுக்கு இடையே அமைதியான இடத்தில் ஆறுகளின் ஒலியில் மிதமிதக்கும் தன்மையில் காணப்படுகிறது.
எங்குள்ளது
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் நாகசன்பள்ளி எனும் பகுதியில் அமைந்துள்ளது வன துர்கா கோவில்.
இது தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 112 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மேடக்கிலிருந்து வெறும் 18 கிமீ தொலைவில் உள்ளது.
எப்படி செல்வது
ஹைதரபாத்திலிருந்து 2 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.
ஹைதரபாத்திலிருந்து திண்டுக்கல் வரும் சாலையில் காந்தி மிசாம்மா சரகத்தில் இடது பக்கம் திரும்பி எடுப்பாயலா வன துர்கா கோவிலுக்கு செல்வது எளிமையான வழியாகும்.
பசுமையான வழித்தடங்கள்
கருட கங்கை என்று அழைக்கப்படும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் மன்ஜீரா ஆறு ஓடுகிறது.
பச்சை பசேலென்ற பாதைகள் மிக அழகானதாக இருக்கும். மழைக்காலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த இடத்தை காண்பவர்கள் குடுத்து வைத்தவர்கள். மழை பெய்து கொண்டிருக்கும் போதும் நீங்கள் தகுந்த பாதுகாப்போடு இங்கு பயணிக்கலாம்.
வரலாறு
இந்த கோவில் அமைந்திருக்கும் இடத்தின் வரலாறு கொஞ்சம் புதிரானது. பலருக்கு இது பற்றி தெரியாது என்பதாலும், புராணக் கதைகள் கலந்து இருப்பதாலும் சிலரால் இது ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. ஆனாலும் வரலாற்று புராணத்தையும் காண்போமே.
ஏழு முனிவர்கள் எனப்படும் ஜமதாக்னி, அத்ரி, கஸ்யாபா, விஸ்வாமித்ரர், வசிஷ்டர்,பரத்வாஜா, கௌதமா எனும் இவர்கள் சிவராத்திரியன்று ஒன்று கூடி இந்த இடத்தில் துர்கை அம்மனுக்கு வழிபாடு நடத்துவார்களாம்.
இவர்கள் ஏழு பேரும் நீராக மாறி இந்த கோவிலைச் சுற்றியிருக்கிறார்கள் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி கொண்டாட்டம்
அழகிய இடங்களைச் சுற்றிலும் கொண்டுள்ள இந்த எடுப்பாயலா துர்கை அம்மன் கோவிலில் சிவராத்திரி தொடக்கத்தில் ஒரு வாரம் திருவிழா நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த ஒரு வாரத்துக்குள் வந்துவிடுகிறார்கள்.
சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிறப்புகள்
வன துர்கை அம்மன் கோவிலுக்கு இருக்கும் சிறப்புகள் பல. அதில் முக்கியமானது இந்த கோவிலைச் சுற்றி 7 ஆறுகள் கலந்து ஓடுவதுதான். அதாவது இவை தீர்த்தங்கள் எனப்படுகின்றன. இவை முன் பக்கத்தில் 3 பின்பக்கத்தில் 4 என அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஆறுகளில் கவனமாக நீராடுகின்றனர். அழகும் இயற்கையும் இணைந்து இருக்கும் இந்த இடத்துக்கு நீங்களும் வருகை தரலாமே!