வால்ப்பாறை மலைப்பிரதேசம் மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை உதாரணமாக சொல்லலாம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக திகழ்கின்றது.
வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் உள்ளன.
ஆழியார் அணை
பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், வால்ப்பாறையிலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஆழியார் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டத்தாகும். இங்கு எண்ணற்ற திரைப்படங்கள் படமாகப்பட்டுள்ளன. அவற்றில் முத்துராமன், ரவிச்சந்திரன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் மிகவும் பிரபலம்.
படம் : Siva301in
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அல்லது இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் பல வகையான காட்டு விலங்கினங்கள் மற்றும் செடியினங்களைக் கொண்டது. இங்கு சிறுத்தைகள், மான்கள், புலிகள், யானைகள், புனுகுப் பூனைகள், காட்டெருதுகள், கரடிகள், தேவாங்குகள், முள்ளம்பன்றிகள், ஓநாய்கள், எறும்புத்திண்ணிகள் உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சிவப்பு மரப் பறவை, புள்ளிப் புறா, மீசையுடன் கூடிய புல்புல், கறுப்புத் தலை ஓரியோல், ராக்கெட் வால் கரிச்சான் போன்ற பறவைகளையும் நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். இவைதவிர இப்பூங்காவினுள் அமைந்துள்ள அமராவதி ஏரியில் எண்ணற்ற முதலைகள் காணப்படுகின்றன.
படம் : Marcus Sherman
மங்கீ ஃபால்ஸ்
மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், வால்ப்பாறையிலிருந்து கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.
கிராஸ் ஹில்ஸ்
வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஆனைமலை வனவிலங்கு சரணாலயதின் ஒரு பகுதியாக புல் குன்று அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல்வேறு தாவரங்களையும், விலங்கினங்களையும் அவற்றின் வசிப்பிடத்திலேயே கண்டு ரசிக்க முடியும். ஆனால் இங்கு செல்வதற்கு நீங்கள் வனவிலங்குத் துறை பாதுகாவலரிடம் அனுமதி பெறவேண்டும். இப்புல் குன்றினை பார்வையிட ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலங்களே மிகவும் சிறந்தவை.
படம் : D momaya
சோலையார் அணை
வால்பாறையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை ஆசியாவிலேயே 2-வது ஆழமான அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் பிரம்மாண்டமான தோற்றமும், பீரிட்டு வரும் நீரும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதன் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக ஆண்டுதோறும் இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
படம்
வியூ பாயிண்ட்ஸ்
வால்ப்பாறை மலைப்பிரதேசம் பல்வேறு வியூ பாயிண்ட்டுகளை கொண்ட இடம். அப்படி பொள்ளாச்சியிலிருந்து வால்ப்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள லோம்ஸ் வியூ பாயிண்ட் மிகவும் பிரபலமானது. அதேபோல வால்ப்பாறையின் சங்கிலி சாலை அருகேயுள்ள நல்லமுடி பூஞ்சோலை, கடம்பாறை அணை, நம்பர் பாறை ஆகியவை வால்ப்பாறையிலும் அதைச் சுற்றிலும் அமையப்பெற்றுள்ள மற்ற வியூ பாயிண்ட்டுகள் ஆகும். இந்த இடங்கள் அனைத்துமே மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் ஆகியவற்றை காண சிறந்த காட்சி அமைப்பை தருகின்றன.
படம் : Vivekr
சின்னக்கல்லார்
வால்ப்பாறையிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவில் சின்னக்கல்லார் பகுதி அமைந்திருக்கிறது. இவ்விடம் நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை பெருவதால் தென் இந்தியாவின் சீராப்புஞ்சி என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள சின்னக்கல்லார் அருவிக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் தொங்கு பாலப் பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கும். மேலும் எப்போதுமே மேகங்களினாலும், பனியினாலும் மூடப்பட்டு காட்சியளிக்கும் சின்னக்கல்லாருக்கு பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.
படம் : Jeganila