தமிழ்நாட்டில் கால் வைக்கும் இடமெல்லாம் சுற்றுலாத் தலங்கள் தான்! ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறப்புகள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. பல வகையான வரலாற்றுக் கட்டிடங்கள், காலம் கடந்த கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், குளிரான மலைப்பிரதேசங்கள் என அனைத்துமே தமிழ்நாட்டில் உள்ளன.
இன்று நாம் பார்க்கவிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இடம் தான்! இந்த இடத்தைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட அழகிய தீவுகள் உள்ளன. அவற்றில் ராமேஸ்வரத்தின் குருசடை தீவு தான் முதன்மையானதாம்!
ராமேஸ்வரத்திற்கு உள்ளே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் போல இந்த இடம் தனித்துவமான அழகுடன் ஜொலிக்கிறது. ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு சரியான இடமாகும். இந்த அழகிய குருசடை தீவு எங்கே இருக்கிறது? அங்கு எப்படி செல்வது? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்ற அனைத்தையும் இங்கே காண்போம்!
ராமேஸ்வரத்தின் அழகிய குருசடை தீவு
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவின் 21 தீவுகளில் ஒன்றான குருசடை தீவு சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. இயற்கை அழகால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள குருசுடை தீவு பவளப்பாறைகள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாகும். இந்த இடம் கவர்ச்சியான மற்றும் கிட்டத்தட்ட அழிந்து வரும் கடல் உயிரினங்களின் சொர்க்கமாக கருதப்படுகிறது.
தீவிற்கு வருகை தரும் பெரும்பாலான மக்கள் கடல்சார் நிபுணர்கள் அல்லது நீர்வாழ் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி அதிகம் படிப்பதிலும் கண்டுபிடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இருப்பினும், தீவு அதன் தனித்துவமான பவளப்பாறைகளுக்காக சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.
உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை அழகு
செழுமையான பல்லுயிர் பெருக்கம் நிறைந்து சதுப்புநிலங்களால் சூழப்பட்டுள்ள இந்த அழகிய தீவு ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடமாகும். வனத்துறையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகால் மற்றும் சின்னபாலம் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குருசடை தீவுக்கு படகு சேவையை இயக்குகின்றனர்.
படகுகள் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை இயக்கப்படும். ஒரு சவாரிக்கு மொத்தம் 12 பேர் பயணிக்கலாம்மற்றும் அவர்களுடன் உயிர்காக்கும் காவலர்கள் வருவார்கள். ஒரு நபருக்கு ரூ. 400 கட்டணமாக வசூலிக்கப்படும் மற்றும் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தீவை அடைந்தவுடன் பயணிகள் அழகிய கடற்கரையும், பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு மகிழலாம். விவேகானந்தர் நினைவிடத்திற்கு அருகில் உள்ள கடல் விளக்க மையத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். சுற்றுலா செல்ல விரும்பும் பார்வையாளர்கள் சென்னையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும்.
பல்வேறு இயற்கை அதிசயங்கள் நிறைந்த தீவு
நண்டுகள், கடல் பாசிகள், ஸ்டிங்ரேக்கள், டுகோங்ஸ், வால்யூட்ஸ், நட்சத்திர மீன்கள், கடல் அனிமோன்கள், சக்கரங்கள், சிப்பிகள்ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு மகிழலாம். ஆலிவ் ரிட்லி மற்றும் ஹாக்பில்ஸ் ஆகியவையும் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், ஹம்ப்பேக் டால்பின்களை காணும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
கடலில் இறங்கி கால் நனைத்தோ அல்லது குளித்தோ நீங்கள் விளையாடலாம். பவளப்பாறைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு மகிழலாம். கடலுக்கும் சின்னதாக படகு சவாரி செய்யலாம்.ஆனால் நீங்கள் எது செய்தாலும் இந்த அழகிய இடத்தை மாசுபடுத்தாதவாறு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த அழகிய இடம் எங்கே இருக்கிறது
தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த அழகிய தனித்துவமான தீவு, ராமேஸ்வரத்தின் மண்டபத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மீன்வளத்துறையால் சிறப்பாக நிர்வகிக்கப்படும் இந்த தீவு நிச்சயமாக கடல்வாழ் உயிரினங்களின் மிகவும் வளமான ஒரு பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது. இந்த தீவு ராமேஸ்வரத்தில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகவும், ராமேஸ்வரம் சுற்றுலாவின் பட்டியலில் முதலிடமாகவும் உள்ளது.
இப்போது மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், அழகிய தீவான குருசடைக்கு படகு சவாரியை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
குருசடையை அடைவது எப்படி?
இந்த இடம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து 13 கிமீ தொலைவிலும், மண்டபத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும், ராமேஸ்வரம் நகரில் இருந்து 23 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சென்னையில் உள்ள மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றப்பின்னர் நீங்கள் ராமேஸ்வரத்தை அடைய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு செல்ல மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், அண்டை நகரங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. எனவே நீங்கள் ராமேஸ்வரத்தை அடைந்தவுடன் அங்கிருந்து மண்டபத்திற்கு பேருந்தோ அல்லது டாக்ஸியோ எடுக்க வேண்டும், பின்னர் அங்கிருந்து படகில் இந்த அழகிய தீவை அடைந்திடலாம்!
நம் மாநிலத்திற்கு உள்ளேயே அமைந்து இருக்கும் இந்த அழகிய தீவிற்கு ஒரு நாள் பிக்னிக் சென்று வந்து உங்களின் சோர்வடைந்த ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி அளித்திடுங்கள்!