தொடரி படத்தின் ட்ரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கிறது. அது என்னமோ தெரியவில்லை தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கிறது. நாமும் ஜாலியாய் தமிழ் சினிமாவின் சிறந்த ரயில் காட்சிகளைப் பார்க்கலாம்.
தில்லானா மோகனாம்பாள்
தமிழ் சினிமாவின் Classic ரயில் காட்சி என்றால் தில்லானா மோகனாம்பாள்தான். படம் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இப்படத்திற்கு.
இதனாலேயே, இப்படத்தைத் தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கலாம். நடிகர் திலகம், நாகேஷ், பாலையா, பத்மினி, டி.ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு என்று பெரும் ஜாம்பவன்கள் நடித்த இப்படத்தில் ரயிலில் சிவாஜியும் பத்மினியும் கண்ணாலேயே பேசிக் கொள்வதும், பாலையா தூங்குவதற்காக விளக்கை அணைக்கச் சொல்வதும் அதனால் ஏற்படும் குழப்பங்களும் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள். இன்னொரு சுவாரஸ்யம் இந்த ரயில் காட்சியே செட் போட்டுதான் எடுக்கப்பட்டது.
கோபுரவாசலிலே
கோபுரவாசலிலே படத்தின் ஆரம்ப காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா ?
ஊட்டி ரயில் கூவிக்கொண்டு மெல்லக் கிளம்ப, இசைஞானியின் இதமான புல்லாங்குழலுடன் படத்தின் முதல் காட்சித் தொடங்கி, ரயில், குகைகள், மலைகள் வழியே செல்லும் கூடவே நாமும். இதைப் பார்க்கும் எவருக்குத்தான் ஊட்டி ரயிலில் செல்லும் ஆசை வராது ?
மூன்றாம் பிறை
பாலு மகேந்திராவிற்கும் ஊட்டிக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அதே போல ஊட்டி ரயிலும். பூங்காற்று புதிதானது பாடலில் ஸ்ரீதேவியின் உடை தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டு, வேகமாக அதை எடுத்து சிறிது தள்ளிப்போய் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ரயிலில் செல்வோருக்கு டாடா சொல்லும் காட்சி.
மிக முக்கியமாக, கிளைமேக்சில், கமல், ரயிலில் உட்கார்ந்திருக்கும் ஸ்ரீதேவியிடம் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளும் இன்றும் கண்ணீரை வரவழைப்பவை.
காதல் கோட்டை
80 வருட தமிழ் சினிமாவில், காதல் கோட்டைதான் சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான தேசிய விருதைப் முதன் முதலில் பெற்றது. மூன்றாம் பிறையைப் போல இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ரயில் காட்சியும் வெகு பிரபலம்.
தேவயானி, அஜீத்தின் காஃபி கொட்டிய ஸ்வெட்டரைப் பார்த்து, ரயிலில் இருந்து குதித்து ஓடி வந்து சூர்யா என்று சந்தோஷம் பொங்க கேட்கும் காட்சி ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.
தைய்ய தைய்யா... உயிரே
2002'இல் பிபிசி உலக சேவை மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட 7000 பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில் ஒன்பதாம் இடம் பிடித்தது தைய்ய தைய்யா... பாடல் படமாக்கப்பட்ட இடம் ஊட்டி. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எந்தவொரு கேமரா ட்ரிக்குகளும், கிராஃபிக்ஸ்களும் பயன்படுத்தாமல், நீங்கள் எப்படி திரையில் காண்கிறீர்களோ அதே போல எடுக்கப்பட்டது.