தாய்லாந்தில் அவசரகால ஆணை ரத்துசெய்யப்பட்டதால் அக்டோபர் 1 2022 முதல், தாய்லாந்திற்குச் செல்வதற்காக, பயணிகள் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழையோ அல்லது கோவிட்-19 நெகடிவ் பரிசோதனையையோ காட்ட வேண்டியதில்லை.
மேலும் உங்களுக்கு கோவிட் பாசிடிவ் என வந்தாலும் தனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை!
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
ஆம், கொரோனா தொற்றால் உலகின் அனைத்து நாடுகளும் பல பொருளாதார மற்றும் சுகாதார சவால்களை எதிர்கொண்டன. அதில் தாய்லாந்து மட்டும் விதிவிலக்கா என்ன? தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுலாத் துறையில் மிகவும் முதன்மையானது மற்றும் பிரபலமானது தாய்லாந்து என்பது நம் அனைவருமே அறிந்த விஷயம்!
இப்போது தொற்றுநோய் குறைந்து அனைத்தும் ஒரு வகையான முடிவுக்கு வந்துள்ளதால்தாய்லாந்து கோவிட்-19 ஐ "ஒரு ஆபத்தான தொற்று நோய்"என்பதிலிருந்து "கண்காணிப்பின் கீழ் வரும் ஒரு தொற்று நோய்" என மறுவகைப்படுத்தியதால் இந்த முடிவு எடுத்துள்ளது. அதன்படி தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளில் மிச்சமிருந்தவற்றையும் தாய்லாந்து நீக்கியுள்ளது.
எளிதாகிய நுழைவு மற்றும் விசா ஆன் அரைவல்
அதன்படி அக்டோபர் 1, 2022 முதல் தாய்லாந்திற்குள் நுழைய, கோவிட்-19தடுப்பூசிக்கான ஆதாரம் அல்லது புறப்படுவதற்கு முந்தைய சோதனைச் சான்றிதழை நீங்கள் காட்ட வேண்டிய அவசியமில்லை,மேலும் நீங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் கால கட்டுப்பாடுகளை கைவிடுவதுடன், தாய்லாந்து விசா விலக்கு பெற்ற பயணிகள் நாட்டில் தங்குவதற்கான நேரத்தை30 நாட்களில் இருந்து 45 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.தாய்லாந்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தூதரகத்தின் படி, அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு விசா தேவையில்லை.
சுற்றுலாத் துறையில் ஊக்கம்
இந்த முடிவு கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகை அனுபவிக்கும் திறனை மேலும் எளிதாக்குகிறது. வருகை செயல்முறையை எளிதாக்குவது பயணிகள் தங்கள் வருகைகளைத் திட்டமிட ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இதன் விளைவாக தாய்லாந்தின் சுற்றுலாவில் மறுமலர்ச்சி ஏற்படும் என தாய்லாந்து சுற்றுலா அதிகாரி தெரிவித்துள்ளார்.
அழகிய தாய்லாந்து
"தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படும் தாய்லாந்தின் மிகப்பெரிய பொருளாதார இயக்கியே சுற்றுலா தான்! அழகிய கடற்கரைகள் முதல் அடர்ந்த காடுகள் வரை, பழங்கால மடங்கள் முதல் பவளப்பாறைகள் வரை, புத்த துறவிகள் முதல் மிதக்கும் சந்தைகள் வரை தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்த ஒரு சிறு துண்டு போல தான் காட்சியளிக்கிறது. பாங்காக், சியாங் மாய், சியாங் ராய், ஃபூகெட், கிராபி, கோ சாமுய், உபோன் ராட்சதானி மற்றும் பட்டாயா ஆகியவற்றைக் காண ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்!
கொரானா தொற்றால் சற்று முடங்கியிருந்த தாய்லாந்து சுற்றுலாத் துறை இப்போது மேலோங்க ஆரம்பித்துள்ளது. இது தாய்லாந்து செல்வதற்கான சீசன் என்பதால் இப்போதே டிக்கெட் முன்பதிவு, ரூம் முன்பதிவு, பேக்கேஜ் முன்பதிவு ஆகியவற்றை புக் செய்து சுற்றுலா சென்று வாருங்கள்!