திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் தாமிர பரணி நதியில் இந்த ஆண்டு மகா புஷ்கர விழா நடைபெற்றது. கடந்த 11ம் தேதி தொடங்கிய இந்த விழா இன்று மாலையுடன் முடிவடைய இருக்கிறது. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடைபெற்றது. இன்று கடைசி நாள் இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணியில் நீராடினால் கோடி பலன்கள் கிட்டும் என நம்புகின்றனர். வாருங்கள் நாமும் தாமிரபரணிக்கு சென்று வரலாம்.
மக்கள் கூட்டம்
புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்தனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
விழா கோலாகலம்
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந்தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், மங்கல ஆரத்திகள், வேள்விகள், யாகங்கள், நடைபெற்றன. நீராட வந்த பக்தர்களுக்கு 3 வேளை அன்னதானமும் வழங்கப்பட்டன. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
எங்கெல்லாம் விழா நடந்தது
பாபநாசம் தாமிரபரணியிலும் பக்தர்கள் பலர் புனித நீராடினர். இது போலவே விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.
குருஸ்தலமான தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறை, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது. முறப்பநாட்டில் சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. 12ஆம்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் இன்று மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாட்டில் அமைந்துள்ள இந்த கைலாசநாதர் கோவில், விருச்சிகராசிக்கும் குருவுக்கு ஏற்ற தலமாகும். நவகைலாயங்களில் 5 வது தளமான இது குதிரை முகத்திலான நந்தியை கொண்டது ஆகும்.
நடை திறக்கும் நேரம்
இந்த கோவிலில் காலை 7 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இடையில் மதியம் 12 மணிக்கு சாற்றப்பட்டு பின் மாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.
வேண்டுகோள்
கோவிலுக்கு வரும் பக்தர்கல் திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் மேம்பட வணங்குகின்றனர். மேலும் இது உறுதியாக கைக்கூடும் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டால், நிச்சயம் அவர்களது வேண்டுதல் பலிக்கின்றனவாம்.
எட்டெழுத்து பெருமாள் கோவில்
எட்டெழுத்து பெருமாள் கோவில் திருநெல்வேலி நகரின் ஓரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தர் பீடம். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். கருவறையின் நடுவில் பெருமாளும் வலதுபுறத்தில் சிவலிங்கமும் இடதுபுறத்தில் மயிலேறும் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
இன்று வழிபட்டால் என்ன நடக்கும்?
தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் முடிவடைகிறது. விருச்சிக ராசிக்கு ஏற்ற இந்த நதியில் குளிப்பதால், விருச்சிக ராசிக்கார்களுக்கு கூடுதல் பலன் கிடைக்குமாம். அதுமட்டுமில்லாமல், விருச்சிகத்துடன் சேர்ந்த மற்ற ராசிக்காரர்களுக்கும் இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திர நம்பிக்கை
ஜோதிட சாஸ்திர நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் இந்த விசயங்களில் நம்பிக்கை ஏற்படும் . அவர்கள் தங்கள் வாழ்நாளை நன்றாக அமைத்துக்கொள்ள இறைவனை வேண்டு புனித நீராடுவார்கள். அப்படி இந்த வருடம் மகா புஷ்கரத்தை தவறவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் உடனடியாக உங்கள் பகுதியில் இருக்கும் தாமிரபரணி நதியில் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாச மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு பல்வேறு நகரங்கள், கிராமங்கள், வயல்வெளிகள் கடந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் சங்கமமாகிறது.