பழைய இந்தோ-திபெத்திய சாலையில் அமைந்துள்ள இந்த சிட்குல், இந்திய எல்லையில் கடைசியாக மக்கள் வசிக்கும் கிராமம் என்று கூறப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 35௦௦ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம் கின்னார் பள்ளத்தாக்கில் ஒரு சொர்க்கவாசல் போன்று உள்ளது. சிட்குலில் கண்களை கவரும் அமைதியான சூழலின் நேர்த்தியான நிலப்பரப்பில் எண்ணற்ற சுற்றுலத்தலங்கள் அமைந்துள்ளது. பூந்தோட்டங்கள், மலைகள், புல்வெளிகள், பாறைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள் என சிட்குலில் தனி பெரும் அடையாளங்கள் ஏராளம். இங்கு வெறும் 6௦௦ மக்களே வாழ்கின்றனர். இந்த கடைசி கிராமத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம், வாருங்கள்!
சிட்குலில் பார்க்க வேண்டிய இடங்கள்
சிட்குலின் இயற்கை அழகை வார்த்தைகளால் விவரிப்பது என்பது கடினம். எந்தவொரு மாசுமின்றி, இரைச்சலின்றி இயற்கை வரங்களான காற்று, நீர், மலைகளை மட்டுமே நாம் காணலாம்.
கம்ரு கோட்டை - அழகிய சோலாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்ரு கோட்டை ஒரு பழைய நுழைவாயிலாகும். தனித்துவமான 3-அடுக்கு மரக் கோட்டை 15 ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலை அதிசயமாகும்.
பெரிங் நாக் கோயில் - மக்கள் மத்தியில் மத முக்கியத்துவம் வாய்ந்த பெரிங் நாக் கோயில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோயிலாகும். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் கட்டிடக்கலை அதிசயமாக கருதப்படுகிறது.
பாஸ்பா நதி - பிரம்மாண்டமான இமயமலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த நதி சாங்களா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையை சுற்றியுள்ள.
இயற்கை காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைப்பதோடு பல வண்ண மீன்களையும் நாம் கண்டு களிக்கலாம்.
திபெத்திய மர வேலைப்பாடு மையம் - திபெத்திய பாணியை அடிப்படையாகக் கொண்ட மர பொருட்கள் சிட்குலில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடமாகும். இங்குள்ள அழகிய கைவினைப் பொருட்கள் அந்த இடத்தின் கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்துகின்றன.
பட்சேரி - இந்த இடம் கின்னௌரி தொப்பிகள் மற்றும் ஹிமாச்சலி சால்வைகளுக்கு பெயர் பெற்றது. மேலும் இங்கு பலவகையான ஆப்பிள் தோட்டங்களையும் நீங்கள் காணலாம்.
ப்ரெலேங்கி கோம்பா - 1922 ஆம் ஆண்டில், காலசக்ரா விழாவை நடத்திய தலாய் லாமாவுக்காக இந்த இடம் மகாபோதியின் சங்கத்தால் நிறுவப்பட்டது. மடாலயத்திற்கு அருகில், 10 மீ உயரத்தில் நிற்கும் புத்தர் சிலையைக் காணலாம். ஆறுதலையும், அமைதியையும் பெறுவதற்காக ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
சிட்குலில் வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சிட்குலில் நாம் பல வழிகளில் பொழுதை கழிக்கலாம். ட்ரெக்கிங் செய்ய ஆசை உள்ளவர்கள் தாரளாமாக இங்கு ட்ரக்கிங் செய்யலாம். இப்படி ஒரு இடத்தில் யாருக்கு தான் நடைபயணம் அல்லது மலையேறுதல் பிடிக்காமல் இருக்கும்! அப்படியே, களைப்பாற முகாமிட்டு தங்குவதும் இங்கு விசேஷமான ஒன்றாகும். இரவில் வானத்தை பார்த்து நட்சத்திரங்களை ரசிப்பதும், கேம்ஃப்பயர் செய்வதும், போட்டோக்கள் எடுத்து மகிழ்வதும் என ஆனந்தமாக பொழுதை கழிக்கலாம்.
எப்படி சிட்குலை அடையலாம்?
டெல்லியிலிருந்து 6௦௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள சிட்குலை அடைய முதலில் ரெக்காங் பியோவிற்கு செல்ல வேண்டும். ரெக்காங் பியோ, இமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ரெக்காங் பியோவிலிருந்து சிட்குல் கிராமத்தை பேருந்து அல்லது வண்டி மூலம் அடையலாம். மே முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் சிட்குலுக்குச் செல்வது சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, கிராமம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.