ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
கனவுகளை விதைத்து காலத்தை வென்ற அப்துல் கலாம் என்ற சரித்திர நாயகர் நம்மை விட்டு பிரித்திருக்கிறார். காந்தியையோ, காமராசரையோ பார்த்திராத நமக்கு எளிமையையே உருவாக ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.அப்துல் கலாம். ஒரு விஞ்ஞானியாக திருமணம் கூட செய்யாமல் தன் வாழ்நாளையே இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான ஆராய்ச்சியில் அர்ப்பணித்தவர்.
பின்னர் நாட்டின் முதல் குடிமகனாக கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சங்களில் கனவுகளை விதைத்தவர். தனது இறுதி மூச்சு வரை மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலேயே செலவிட்டவர் இன்று புவியை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டார்.
இப்படிப்பட்ட தருணத்தில் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்காட்டாய் திகழும் அவரின் வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம் வாருங்கள். திரு.அப்துல் கலாம் அவர்களின் வாழ்கையில் திருப்புமுனையாக இருந்த இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் .
மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மாணவர்களுக்காக 6000 அடி உயரத்திற்கு சென்ற கலாம் !!
ராமேஸ்வரம் :
அப்துல் கலாம் என்ற மகத்துவம் மிக்க மனிதர் ராமேஸ்வரத்தில் பிறந்தது தமிழகம் செய்த பெரும் பாக்கியங்களில் ஒன்று. கடலோடி நகரமான ராமேஸ்வரத்தில் எளிமையான ஒரு மீனவ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 தேதி பிறந்திருக்கிறார். பள்ளி நாட்களில் தன்னுடைய தந்தைக்கு உதவும் பொருட்டு சைக்கிளில் சென்று வீடுகளுக்கு செய்தித்தாள் விற்பனை செய்திருக்கிறார்.
ராமேஸ்வரம் :
ராமேஸ்வரத்தில் வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்ப சூழ்நிலை தான் திரு. அப்துல் கலாம் அவர்கள் இறுதிவரை பின்பற்றிய எளிமையை அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. திரு.அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அவருடைய வீடு அமைந்திருக்கிறது. இங்கே அவரின் அரிய புகைப்படங்கள், அவர் வாங்கிய விருதுகள், அவரின் கண்டுபிடிப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் :
மசூதி வீதி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த வீட்டை பொது மக்கள் பார்வைக்காக காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணிவரை திறந்திருக்கிறது. நுழைவுக்கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. அடுத்த முறை ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தல் இந்த மாமனிதர் வாழ்ந்த வீட்டுக்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.
ராமேஸ்வரம் :
அப்துல் கலாமை தாண்டி ராமேஸ்வரம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ராமநாத சுவாமி கோயில் ஆகும். புராணப்படி இலங்கை தீவை ஆட்சி செய்யும் ராவணனை கொன்று கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவியை மீட்க செல்லும் முன்பாக சிவ பெருமானை வழிபட்ட இடம் தான் இக்கோயில் இருக்கும் இடமென்று சொல்லப்படுகிறது.
ராமேஸ்வரம் :
திரு.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த இந்த ராமேஸ்வரம் நகரை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
திருச்சி :
திரு.அப்துல்கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவாக முக்கிய காரணமாக இருந்த இடம் திருச்சி ஆகும். இந்த மலைக்கோட்டை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் 1952 - 1954 வரையிலான காலகட்டத்தில் இளங்கலை இயற்பியல் பாடத்தை பயின்றிருக்கிறார்.
மறைந்த எழுத்தாளரான சுஜாதா அப்துல் கலாம் அவர்களுடன் ஒரே வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி :
அப்துல் கலாம் அவர்களை பற்றிய நினைவுகளை முன்பொருமுறை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்கையில் "கல்லூரி காலத்தில் வகுப்பில் பிரபலமான மாணவராக அப்துல் கலாம் இருக்கவில்லை என்றும் மிகவும் அமைதியான கூச்ச சுபாவம் உடையவராகவே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று கலாம் அவர்களின் மறைவை ஒட்டி அவர் படித்த கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி :
திரு.கலாம் அவர்கள் தன்னுடைய கல்லூரி நாட்களை செலவிட்ட திருச்சி நகரம் இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த திருச்சியின் பெருமைமிகு அடையாளங்களாக மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், சோழன் கட்டிய அதிசயமான கல்லணை போன்றவை இருக்கின்றன.
திருச்சி :
திருச்சி நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள். திருச்சியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் :
இந்திய அறிவியல் துறைக்கு கலாம் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. செயற்கை கோள்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பில் இன்று உலகின் முன்னோடியாக இந்தியா திகழ திரு. அப்துல் கலாம் அவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவர்.
திரு. அப்துல் கலாம் அவர்கள் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதள மையத்தில் பணிபுரிந்துள்ளார்.
(இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்கிறார் இளம் வயது கலாம்)
திருவனந்தபுரம் :
திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு.அப்துல் கலாம் அவர்கள் இந்திய குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு கேரள ராஜ் பவனில் நடக்கும் ஒரு விழாவுக்காக வருகை தந்தார். அப்போது முன்னர் தான் இங்கே பணிபுரிந்த போது நண்பர்களாக மாறிய சிறிய ஹோட்டல் கடை முதலாளி ஒருவரையும், செருப்புத்தைக்கும் தொழிலாளி ஒருவரையும் குடியரசு தலைவரின் சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்திருக்கிறார்.
இது அவரின் எளிமைக்கு சான்றாக சொல்லப்படுகிறது.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலத்தின் தலைநகராக திகழும் திருவனந்தபுரத்தை பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
ராஷ்டிரபதி பவன் :
இந்திய திருநாட்டுக்கு பல குடியரசு தலைவர்கள் வந்திருந்தாலும் அந்த பதவிக்கு மிகப்பெரிய மரியாதையை தேடித்தந்தவர் திரு.அப்துல் கலாம் அவர்கள் தான். 2002 முதல் 2007 வரை அவர் குடியரசு தலைவராக பதவி வகித்த காலகட்டத்தில் நாடு முழுவதிலும் பயணம் செய்து கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரின் உயர்ந்த ஆசையை மாணவர்களின் மனதில் விதைத்தவர். குடியரசு தலைவராக இருந்த போதிலும் அப்துல் கலாம் அவர்கள் எளிமையான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார் .
ராஷ்டிரபதி பவன் :
இந்திய அரசாங்கத்தின் அதி முக்கிய அலுவலகங்களில் ஒன்றாக இருப்பது ராஷ்டிரபதி பவன் எனப்படும் ஜனாதிபதி மாளிகை தான். காலனிய ஆட்சியின்போது இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டபோது இந்த பிரம்மாண்ட மாளிகை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய வைசிராய் வசிப்பதற்கான மாளிகையாக இந்திய முகலாய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய பாணி அம்சங்களை கலந்து இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
கனவை நிஜமாக்குவோம் :
அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் நெஞ்சங்களில் அவர் ஏற்றிய ஒளி என்றென்றைக்கும் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்திய தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லவேண்டும் என்ற அவரின் கனவை நிறைவேற்ற நம்மால் இயன்றதை செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.