கேரளா... நம் வாழ்நாளில் எத்தனை முறை பயணப்பட்டாலும், ஏன் அம்மாநிலத்திலேயே குடிகொண்டாலும் தெகிட்டாத பல அனுபவங்களையும், வெறுக்காத சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து விரல் விட்டா எண்ண முடியும். அத்தனை அத்தனை தலங்கள். மலைத் தொடர்கள், கடற்கரைகள். மீண்டும், மீண்டும் நம்மை ஈர்க்கும் வல்லமைக் கொண்டுள்ளது. இத்தகைய கேரளத்தில் இதுவரைக் காணாத ஒரு புதிய மலைத் தொடரை தேடிப் பயணிக்கலாம் வாங்க.
தோனி மலை
கேரள மாநிலத்தில் அடர்ந்த காடு, மலை மற்றும் நீர்வீழ்ச்சியும் இணைந்த ஒர் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த தோனி மலை. இயற்கை வளம் நிறைந்த தோனி மலை, பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் இந்த தோனி மலை, சாகச விரும்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூறலாம். பாலக்காட்டிற்கு அருகில் தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டமான கோயம்புத்தூரில் இருந்து இன்று தோனி மலை நோக்கி பயணிக்கலாம்.
Jaseem Hamza
கோவை - பாலக்காடு
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கேரள மாநிலம், பாலக்காடு நகராட்சி. பாலக்காட்டுக் கோட்டை, மலம்புழா அணை, பரம்பிக்குளம், அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா, நெல்லியம்பதி, உள்ளிட்ட தலங்கள் இப்பகுதியில் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன. பேருந்துகளும், ரயில் சேவைகளும் கோயம்புத்தூரில் இருந்து பாலக்காட்டிற்கு ஏராளமாக உள்ளது. வாலிபர்கள் தங்களது நண்பர்களுடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க இது மிகச்சிறந்த மலைப் பிரதேசமாகும்.
எப்போது செல்ல வேண்டும் ?
வருடத்தின் அனைத்து காலகட்டத்திலும் ஜில்லென்ற சூழலைக் கொண்டுள்ள தோனி மலைக்கு எப்போது வேண்டுமானாலும் பயணப்படலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடை காலம் பிற மாநிலங்களைப் போல் அல்லாமல் இங்கே குளிர்ச்சியான மேகக் கூட்டங்கள் காலடியை உரசிச் செல்லும். முன்னதாக, தோனி மலை அடிவாரத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் மலையேற்றம் செய்வதற்கான நுழைவுச் சீட்டை பெறுவது கட்டாயம்.
Jaseem Hamza
வரவேற்கும் நீர்வீழ்ச்சிகள்
தோனி மலை அடிவாரத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றப் பதையில் சுமார் 2 மணி நேரம் நடந்து சென்றால் அழகிய நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்து செல்லக்கூடிய நீண்ட மலையேற்றப் பாதையில் நீங்கள் பலவகை மிருகங்களையும், பறவையினங்களையும் கண்டு ரசிக்கலாம். மலைப் பிரதேசங்களில் மட்டு காணப்படும் இராட்சத அணில்கள், சிங்கவால் குரங்குகள், கரடிகள், யானைகள், சிறுத்தைகள், நீலகிரிக் குரங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளிட்ட பலவிதமான விலங்குகளை ரசிக்கலாம்.
Kjrajesh
காலை நேர நடைபயணம்
விடியற் காலைப் பொழுதில் இந்த மலையேற்ற பயணத்தை துவங்குவது சிறந்தது. அப்படிச் செய்வதால் உங்களது களைப்பை நீங்கள் சற்று குறைத்துக் கொள்ளலாம். காலையிலும் மாலையிலும் பயணம் இனிதாய் இருக்கும்படி இதமான குளிர் காணப்படுகிறது. மலையேற்றம் செய்வதற்கேற்ற காலணிகளை நீங்கள் அணிந்து செல்வது உங்கள் பயணத்தை இலகுவாக்கும். அழகாய் தோற்றமளிக்கும் வண்ணவண்ணப் பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் உங்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏற்ற இறக்கமான நடைபாதையின் இருபுறமும் உயர்ந்த மரங்கள், பறவைகள் எழுப்பும் இனிமையான ஒலி மற்றும் கண்ணுக்கு எட்டியவரை இயற்கைக் காட்சிகள் உங்கள் மனதிற்கு ரம்மியமாக இருக்கும்.
Anand2202
திகில் பங்களா
அருவிக்குப் போகும் வழியில் பாழடைந்த நிலையிலிருக்கும் ஒரு பழைய பங்களாவை பார்க்கலாம். கவரக்கண்ணு பங்களா என்று அழைக்கப்படும் இந்த இங்குள்ள எஸ்டேட்டுகளைக் கண்காணிப்பதற்காக 1850 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. கவனிப்பாரின்றி காணப்படும் இந்த பங்களா கொஞ்சம் திகிலூட்டும் வகையில் தான் உள்ளது. இதனருகே தற்போது உபயோகத்திலில்லாத தார் ரோடு ஒன்றையும் நீங்கள் பார்க்கலாம். பாலக்காடு, கோவை, மணற்காடு, நீலம்பூர் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற சில இடங்களை இணைக்க சுதந்திரதிற்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி நீர் வீழ்ச்சியிலிருந்து மலம்புழா அணை செல்வதற்கு மெய் சிலிர்க்க வைக்கும் மலையேற்றப் பாதை ஒன்று இருக்கிறது. யானைகள் அதிகமாக காணப்படும் இப்பாதையில் பயணிக்கும் முன் மாவட்ட வன அதிகாரியிடம் அனுமதியும், உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் பெருவது பயணத்தை இனிமையானதாக மாற்றும்.
The MH15
தோனி நீர்வீழ்ச்சி
தோனி நீர் வீழ்ச்சியை அடைவதற்கு ஒரு சில மீட்டருக்கு முன்பே தண்ணீர் விழும் சப்தமும், ஜில்லென்ற சாரல் காற்றும் நம்மை ஈர்க்க ஆரம்பித்து விடுகிறது. மலையேற்றத்தையின் சோம்பளை போக்கும் வகையில் இந்த குளிர்ந்த அருவியில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு அடர் காட்டை நோக்கி பயணிக்கலாம்.
DEEPAK SUDARSAN
பாதுகாக்கப்பட்ட வனம்
தோனி மலையின் உச்சிக்கு சென்றபின், கண்ணைக் கவரும் எழில் நிறைந்த பாதுகாக்கப்பட்ட காடுகளை கண்டு ரசிக்க கண்கள் இரண்டு போதாது. இந்த அடர்ந்த பசுமையான காட்டிற்குள் வந்து தங்கும் காண்பதற்கரிய பல அரிய பறவையினங்கள் பறவை கண்காணிப்பாளர்களுக்கு ஒரு சொர்க்கம் தான். ஆசிய தேவதை நீலப்பறவை போன்ற எங்கும் காணக்கிடைக்காத பறவைகளை ரசிக்க முடியும்.
Hciteam1
விஸ்வநாத சுவாமி கோவில்
தோனி காட்டின் உள்ளே விஸ்வநாத சுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ரதோல்சவம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமாக மக்கள் கூடுவது வழக்கம்.
Prof tpms
பாலக்காடு - தோனி மலை
பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோனி மலைக்கு வாடகைக் கார்கள் அல்லது மாநகர பேருந்துகள் மூலம் செல்லலாம். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 101 கிலோ மீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. பாலக்காட்டையும், கோயம்புத்தூரையும் இரயில் பயணம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு எங்கே செல்வது ? பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலாத் தலங்கள் எது என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தோனி மலை சுற்றுலாப் பிரியர்களின் காட்டில் நல்ல மழை தான்.
Sktm14