நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் மாசுபட்டு அதன் அழகை இழந்துக் கொண்டிருக்கும் நிலையில், இங்கு ஒரு நதி மிகவும் தூய்மையாக, க்ரிஸ்டல் க்ளியராக உள்ளது. ஆம்! ஆற்றுப் படுகையில் உள்ள கூழாங்கற்களும் மணல் படிகங்களும் கூட மிகவும் தெளிவாக தெரிகிறது.
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அழகாகவும், தெளிவாகவும் தொடு வானத்தில் தொங்கும் ஆற்றுப் படுகை நம் மனதை கொள்ளையடிக்கிறது. படகில் ஏறி நதியின் மீது சவாரி செய்யும் போது, அடடே என்ன இது, கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
மேகாலயாவின் பெருமைமிகு டாவ்கி
உலகின் மிகவும் தூய்மையான நதிகளின் பட்டியலில் ஒன்றான இந்த உம்ங்கோட் நதி, மேகாலயா மாநிலத்தில் டாவ்கியில் இருக்கிறது. இது ஷில்லாங்கில் இருந்து 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வடகிழக்கு என்றாலே நமக்கு ஒரு வியப்பு தான், காரணம் அதன் மறைந்திருக்கும் தன்மையும் கலாச்சாரமும்தான்.
நமக்கு எப்போதும் தெரியாத மற்றும் மர்மமான விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டு. அது உண்மையாகவே, வடகிழக்கு இந்தியாவின் பகுதி நம்மை வியப்பில் ஆழ்த்தவும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஊக்கப்படுத்தவும் தவறுவதில்லை.
தொழிற்சாலை இல்லாத இடம்
பூஜ்ஜிய மாசுபாடுதான் இங்குள்ள தனித்துவமான தெளிவான நீருக்கு முக்கிய காரணம். டாவ்கி கிராமம் உம்ங்கோட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் தொழிற்சாலைகளோ அல்லது பிற மாசுபடுத்தும் ஆதாரங்களோ இல்லை மற்றும் நகரமயமாக்கலின் அலைகளாலோ இந்த கிராமம் கிட்டத்தட்ட தீண்டப்படவில்லை.
மாசற்ற நதியான உம்ங்கோட்
விவசாயம் மற்றும் சுரங்க தொழில் இவை இரண்டை தவிர்த்து டாவ்கியில் வாழும் மக்கள் அதிக நேரத்தை மீன்பிடியில் செலவழிக்கிறார்கள். இந்த நதியே அவர்களின் வாழ்வாதாரமாகவும் செயல்படுகிறது. இந்த நதியில் அவர்கள் குப்பைகள் வீசுவது இல்லை, கழிவுநீர் கலப்பது இல்லை.
நதி ஆரோக்கியமாகவும், மாசற்று இருப்பதையும் அங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.
100% படித்த மக்கள்
இந்த இடம் இவ்வளவு தூய்மையாக இருப்பதற்கு காரணம், இது ஒரு நூறு சதவீத எழுத்தறிவு தெரிந்த இடமாகும்.
இங்குள்ள எழுத படிக்க தெரியும். குளோபல் வார்மிங், கார்பன் எமிஷன், ஓசோன் ஓட்டை போன்ற பல்வேறு வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்களைப் பற்றி அறிந்த மக்கள் தங்களுடைய சொத்துக்களை தங்களுடைய சந்ததியினர்க்கு கொண்டு சேர்க்க கடமை பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுற்றுசூழலைப் பாதுகாக்கும் மக்கள்
இங்குள்ள அனைத்து வீடுகளிலும் 2007 முதல் செயல்படும் கழிப்பறைகள் உள்ளன, கிராமம் முழுவதும் மூங்கில் குப்பைத் தொட்டிகள் உள்ளன, காய்ந்த இலைகளும் குப்பைத் தொட்டிக்கு செல்கின்றன. பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்பட்டுள்ளன, புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதன் தூய்மையான அழகு காரணமாக பலமுறை நம் சுற்றுசூழல் அமைச்சகத்தாலும், பல இயற்கை ஆர்வலர்களாலும் இந்த இடம் பேசப்பட்டுள்ளது. ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் அமர்விலும், இந்த படிக தெளிவான நதி பற்றி குறிப்பிட்டுள்ளார்!