பைக் ரைடு செய்வது யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் நம் மனதிற்கு பிடித்தவரோடு சென்றால் அது எவ்வளவு இனிமையானதாக இருக்கும். ஆனால் எங்கு செல்வது? எந்தப் பாதை குளு குளுவென இருக்கும்? அதனைப்பற்றிய பதிவு தான் இது. உங்களது மனைவி, காதலி அல்லது நெருங்கிய நண்பரோடு சேர்ந்து பைக் ரைடு போகும் போது, வழி நெடுக மலைகளும், மரங்களும், பசுமையும் நிறைந்து இருந்தாலம் எவ்வளவு இதமாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். பயணத்தை ஆரம்பித்து, ஆங்காங்கே நின்று தேநீர் அருந்திவிட்டு, வகை வகையான உணவுகளை சுவைத்துக் கொண்டு, கதைப்பேசி கொண்டு செல்ல வேண்டிய இடத்தை அடைந்திடுங்கள். நம்மில் பலரும் இந்த அழகான சாலை பயணங்கள் எல்லாம் வட இந்தியாவில் தான் அதிகம் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதுவல்ல உண்மை, தென்னிந்தியா முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் வளமும், கலாச்சாரமும் நிறைந்து பன்முகத்தன்மை கொண்ட பல சாலைகள் உள்ளன, அவற்றின் பட்டியல் இதோ!
விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு
விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் வழி இந்தியாவிலேயே மிகவும் அழகான சாலைப்பயணங்களில் ஒன்றாகும். மாயஜாலம் நிறைந்த கிழக்கு தொடர்ச்சி மலைகள், கண்டும் காணாத வகையில் இருக்கும் வங்காள விரிகுடாவும் பயணத்தில் கூடுதல் அழகு சேர்க்கின்றன. பயணம் தொடங்கிய நிமிடம் முதலே நீங்கள் பலவகையான காட்சிகளை கண்டு வியப்பில் அடைவீர்கள். பசுமையான மலைகள், வளைந்து நெளிந்த சாலைகள், அழகிய பள்ளத்தாக்குகள், போரா குகைகளை கண்ட படியே நீங்கள் அரக்குவை அடையலாம். விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு 116 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேலும் அரக்குவை சென்றடைய நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகிறது. இயற்கை அழகை ரசித்தபடியே போகும் வழியெல்லாம் நின்று நீங்கள் போட்டோ எடுத்துக்கொண்டே செல்லலாம்.
பெங்களூரு - பந்திப்பூர்
இந்தியாவில் பல அற்புதமான மற்றும் சாகச சாலைப் பயணங்கள் இருந்தாலும், பெங்களூரில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு பயணம் செய்வது கண்டிப்பாக பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது எனலாம். பெங்களூரில் இருந்து பந்திப்பூர் வனச்சரகத்தின் அமைதியான மற்றும் பசுமையான சாலைகளின் வழியே பயணம் செய்வது முழுமையான பேரின்பத்தை உங்களுக்கு கொடுக்கும். இந்த வசீகரமான சாலையில் பல வகையான உணவு பொருட்களும் கிடைக்கின்றன, வற்றை வாங்கி சுவைத்துக் கொண்டே, கண்ணில் அவ்வப்போது தென்படும் வன விலங்குகளை ரசித்தபடியே பந்திப்பூரை அடையலாம். இந்த இரண்டு இடத்திற்கும் இடையேயான தூரம் 22௦ கிமீ ஆகும்.
கொச்சி - வயநாடு
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேல் அமைந்துள்ள வயநாடு ஒரு அழகிய மற்றும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். கொச்சியில் இருந்து வயநாடு செல்வது மிகவும் ஒரு அழகான பாதையாக உங்கள் மனதை கொள்ளையடிக்கும். மலைகள், பள்ளத்தாக்குகள், பசுமையான புல்வெளிகள், ஏரிகள் என இயற்கை அழகை ரசித்துக்கொண்டே, ஆங்காங்கே நின்று போட்டோ பிடித்துக்கொண்டே போகலாம். இவ்விரண்டு இடங்களுக்கும் இடையேயான தூரம் 27௦ கிமீ ஆகும், இந்த தூரத்தை ஒரு 6 மணி நேரத்தில் பயணித்து விடலாம்.
கோவா - கன்னியாகுமரி
கோவாவில் இருந்து கன்னியாகுமரி செல்வது ஒரு கடற்கரை சாலைப் பயணமாகும். இது உங்களை நாட்டின் தென்கோடி முனைக்கு அழைத்துச் செல்லும். இந்த பாதை அழகாக இருப்பதோடு மட்டுமில்லாமல் கேரளாவின் மிகவும் பிரபலமான சில சுற்றுலா தலங்கள் வழியாக செல்கிறது. மலைகள் முதல் உப்பங்கழிகள் வரை அனைத்தையும் நீங்கள் கண்டுக்கொண்டே பயணிக்கலாம். இவ்விரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரமானது 3௦௦ கிமீ ஆகும்.
சென்னை - புதுச்சேரி
கிழக்கின் பாரிஸ் என்று செல்லப்பெயர் பெற்ற புதுச்சேரிக்கு செல்ல இரண்டு சாலை வழிகள் உள்ளன. அதில் ஒன்று பைபாஸ் மற்றொன்று கிழக்கு கடற்கரை சாலை. நாம் செல்லவிருப்பது, கிழக்கு கடற்கரை சாலையில் தான்! கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் புதுச்சேரியை அடைய முடியும். ஒருபுறம் கடலின் அழகிய காட்சியும், தண்ணீரில் சூரியனின் பிரதிபலிப்பும், மகாபலிபுரம் வழியாக செல்லும் பாதையின் இன்பத்தை கூட்டுகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான இந்த இடத்தில் சற்று நிறுத்தி மகாபலிபுரத்தை ஆராய்ந்து விட்டு செல்வது இன்னும் விசேஷமாகும். இடைக்கழிநாடு, மரக்காணம், முதலியார்குப்பம் வழியாக கடலை ரசித்தபடியே பயணிப்பது இன்பமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.