இந்தியா ஒரு தீபகற்பம். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டால் அது தீவு. இப்படி உலகின் பல நாடுகளில் தீவுகள் இருக்கின்றன. பொதுவாக அமெரிக்க தீவுகள் மிக அழகாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உலக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் இந்தியாவுக்கு உட்பட்ட பல தீவுகள் உண்மையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.. வாருங்கள் அந்த மூன்று தீவுகளுக்கும் சென்று வரலாம்.
திட்டமிடல்
மூன்று தீவுகள்
1 அஸ்ஸாமின் மாஜுலி தீவு
2 கோவா அருகிலுள்ள திவார் தீவு
3 கர்நாடக மாநிலத்தின் புனித மேரி தீவு
மூன்று இடங்களுக்கும் செல்வது பற்றி தனித்தனியாக பயணவழிகாட்டி தர முயன்றுள்ளோம்.
Gourab Bhuyan
ரம்மியமான தீவுப்பகுதி
மாஜுலி எனும் இந்த அழகான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை ஒருங்கே பெற்றுள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. மாஜூலி தீவு சிறிய சுற்றுலாத்தலம் என்றாலும் பல சுவாரசிய அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது.
சுற்றிலும் ஓடும் பிரம்மபுத்திரா ஆறு இதன் இயற்கை எழிலை கூட்டுகிறது என்றால் இங்கு அமைந்திருக்கும் சாத்ரா கோயில்கள் இந்த தீவுப்பகுதிக்கு ஒரு கலாச்சார அடையாளத்தையும் வழங்கியுள்ளன.
Dhrubazaan Photography
மாஜுலி சுற்றுலா அம்சங்கள்
தீவுப்பகுதியின் விதவிதமான சுவாரசிய பரிமாணங்கள் உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவாக புகழ் பெற்றுள்ள இந்த மாஜூலி தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.
Udit Kapoor
ரசனை மிகு வாழ்வு
மாஜூலி தீவில் வாழ்க்கை முழுமையாக ரசனையுடன் கொண்டாடப்படுகிறது. விடாத ஆற்று வெள்ளம் மற்றும் சூற்றுச்சூழல் சீரழிவுகள் ஆகியவற்றுக்கிடையே இங்குள்ள மக்களின் வாழ்க்கை உன்னதமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் இந்த தீவுப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சாத்ரா எனப்படும் மடாலயங்கள் இந்த தீவின் உயிர்நாடியாக வீற்றிருக்கின்றன. மொத்தம் 25 சாத்ராக்கள் இந்த தீவில் உள்ளன. உள்ளூர் மக்களின் கலாச்சார மையங்களாக இயங்கும் இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வதில் வியப்பொன்றுமில்லை.
Udit Kapoor
திருவிழா
அவுனியாடி சாத்ரா எனும் மற்றொரு மடாலயம் அதில் கொண்டாடப்படும் ‘பால்நாம்' எனும் திருவிழாவுக்காகவும் ‘அப்சரா நடனம்' எனும் நிகழ்ச்சிக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இவை தவிர பெங்கநாடி சாத்ரா மற்றும் ஷாமாகுரி சாத்ரா ஆகிய இரண்டும் ஏனைய முக்கியமான சாத்ரா மடலாயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
Phanindraprasad
எப்படி செல்லலாம்
போக்குவரத்து வசதிகள் ஒரு ஆற்றுத்தீவாக அமைந்திருப்பதால் பிரம்மபுத்ரா ஆற்றை ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலமாக கடந்துதான் இந்த மாஜூலி தீவிற்கு விஜயம் செய்ய முடியும். ஜோர்ஹாத் எனும் இடத்தில் உள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து மஜூலிக்கு படகுச்சேவைகள் இயக்கப்படுகின்றன. பருவநிலை பருவநிலையைப்பொறுத்தவரை மாஜுலி தீவுப்பகுதி நீண்ட கடுமையான மழைக்காலத்தை பெற்றிருக்கிறது. கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடனும் வறட்சியுடனும் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாஜூலி தீவிற்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு குளிர்காலமே உகந்ததாக காணப்படுகிறது.
Kalai Sukanta
கோவா அருகிலுள்ள திவார் தீவு
இந்தியாவில் அதிகம் பேர் அறிந்திடாத ஒரு இடம் இதுவாகும். மிகவும் அழகிய இடமும் கூட.. கோவாவின் பன்ஜிம் நகரிலிருந்து வெறும் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த தீவு. மந்தோவி ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த தீவு கோவாவின் அழகில் முக்கியமான ஒன்றாகும்.
நவம்பர் - டிசம்பர் - ஜனவரி - பிப்பிரவரி ஆகிய மாதங்களில் இங்கு செல்வது சிறப்பு
பழைய கோவாவிலிருந்து பத்து நிமிட பெஃர்ரி பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்
காணவேண்டியவை - நம் அன்னை ஆலயம், அருள்மிகு கணேசன் கோயில், ஐரோப்பிய வீடுகள் மற்றும் போர்த்துகீசிய இடங்கள்
எங்கு தங்கலாம் - திவார் தீவுகளில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை
என்னவெல்லாம் செய்யலாம் - புகைப்படங்கள் எடுக்கவும், கடலின் அழகை ரசிக்கவும், விரும்பியவர்களுடன் மனம்விட்டு பேசவும் இந்த இடம் சிறப்பானதாகும். உங்கள் தகவலுக்காக - இந்த இடத்தில்தான் தில் சாத்தா ஹே படம் எடுக்கப்பட்டது.
Milindpk -
கர்நாடக மாநிலத்தின் புனித மேரி தீவு
கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
Dr. Rushikesh joshi
வாஸ்கோட காமா
இந்தியாவில் இருக்கக் கூடிய 26 புவியியல் நினைவுச் சின்னங்களில் செயிண்ட் மேரி தீவும் ஒன்று. போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா கேரளாவின் காப்பாட் கடற்கரையில் கால்வைக்கும் முன் இந்த செயிண்ட் மேரி தீவில் நங்கூரமிட்டு நின்றிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தத் தீவு தற்போது கட்டிடங்கள் ஏதுமின்றி, விலங்குகளை கூட பார்க்க முடியாத பாலைவனம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
Manojz Kumar
எப்படி செல்வது
செயிண்ட் மேரி தீவுக்கு அருகில் 58 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. மேலும் பயணிகள் இந்தத் தீவை அடைய ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்த ஃபெர்ரி படகுகள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே இயக்கபடும்.
Subhashish Panigrahi