தென்னிந்தியாவை ஆட்சி செய்து வந்த பெரும்பாலான மன்னர்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் சிறப்பை போற்றும் வகையிலும், வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல பிரம்மாண்டமான கோவில்களை கட்டியெழுப்பினர். இவை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி பல வரலாற்று சுவடுகளையும் இன்றும் சுமந்து நிற்கின்றன. இவற்றுள் விலை மதிப்பற்ற ஐம்பொன், நவபாஷானச் சிலை என அனைவரும் காணக்கூடிய வகையில் செல்வங்களை வைத்திருந்தாலும், எளிதில் யாரும் நெருங்க முடியாதவாறு வைரம், தங்கம், வைடூரியம் என பல கோடிக்கணக்கு விலைமிக்க செல்வங்களை கோவில் தலங்களிலேயே ரகசியமாக பதுக்கி வைத்தனர். இவை பல நூற்றாண்டு கடந்து இன்று மர்மம் நிறைந்த புதையல்களாகவே உள்ளன. அவ்வாறு, தியாகராஜர் கோவிலில் இரகசியமாக பாதுகாக்கப்பப்பட்டு வரும் புதையல் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?
எங்கே உள்ளது ?
தஞ்சாவூருக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது திருவாரூர் மாவட்டம். இம்மாவட்டத்திலேயே பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜர் ஆலயம். சிவபெருமானுக்காக அர்ப்பனிக்கப்பட்டுள்ள இத்தலம் கடவுள்களுக்கு எல்லாம் ராஜா என்னும் கூற்றில் தியாகராஜர் ஆலயம் என்று பெயர்பெற்றுள்ளது.
தல சிறப்பு
அருள்மிகு தியாகராஜர் ஆலயத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தியாகராஜரின் திருவுருவ தரிசனம் காண்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாண்டமாற கட்டிடக் கலையும், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் இது பிரசிதிபெற்றுள்ளது. மேலும், இது காவிரி தென்கரையில் அமைந்துள்ள விசேஷ தலமாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் கமலை பீடமாகும்.
கட்டிடக் கலை
9 ராஜ கோபுரங்கள், அவற்றில் 80 விமானங்கள், 12 பெரிய மதில்களும், 13 மண்டபங்களும் என தல அமைப்பு பரந்து விரிந்துள்ளது. இத்தலத்திற்கு உட்பட்டு 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனம், கோவில் தலத்தை சுற்றிலும் 365 லிங்கங்கள், நூற்றுன்னும் அதிகமான சன்னிதிகள், 80க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் என கோவிலைச் சுற்றிலும் வியப்பளிக்கக் கூடிய வகையில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.
மரகதலிங்க தரிசனம்
இத்தல தியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இந்திரன் வழிபட்ட சிறிய மரகதலிங்கத்திற்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த லிங்கத்தின் மேல் வெள்ளிக்குவளை அமைத்து மூலவருக்கு அருகில் வைக்கப்படுகிறது. அபிஷேக நேரத்தைத் தவிற பிற நேரங்களில் அச்சை வெளியில் தென்படுவதில்லை.
பிரம்மாண்ட சன்னதிகள்
தமிழகத்தில் பரவலாக காணப்படும் கோவில்களைப் போல தியாகராஜர் கோவிலில் உள்ள சன்னதிகள் பிரம்மாண்டத் தோற்றம் கொண்டவை. இவை அனைத்தையும் சுற்றி தரிசிக்க வேண்டுமென்றால் கோவில் தலத்திலேயே முழுதாக ஒரு நாள் தேவைப்படும். அம்மன் சன்னதியில் உள்பிரகாரத்தில் விநாயகர் சன்னதிக்கு அருகே ஐயப்பனும் அருள்பாலிப்பது விசித்திரமாகும்.
ராகு கால வழிபாடு
இத்தலத்தில் ராகு கால வழிபாடு பிரசிதிபெற்றது. பதவி உயர்வு வேண்டுவோர் இந்த வழிபாட்டில் அதிகமாக பங்கேற்பது வழக்கம். மேலும், இந்த வழிபாடு முடிந்தவுடன் பிரதாண மூர்த்தி தியாகேசரை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
திருவாரூர் தேர்
தமிழகத்தில் உள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் மிகவும் பெரியது. கலைநயமிக்க இத்தேர் திருவிழாவின் போது அயிரக் கணக்கான பக்தர்களால் வீதி உலாவாக இழுத்துச் செல்லப்படும். பல தமிழ் பாடல்களில் திருவாரூர் தேரழகு என குறிப்பிட்டிருப்பதை அறியலாம்.
அதிசய நந்தி
பெரும்பாலான சிவ தலங்களில் நந்தி சிலை அமர்ந்த நிலையிலேயே காட்சியளிக்கும். ஆனால், திருவாரூர் கோவிலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருத்தலங்களில் மட்டும் நந்தி நின்ற கோலத்திலேயே உள்ளது. மேலும், இச்சிலைகள் அனைத்துமே உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மர்ம அறைகள்
தியாகராஜர் கோவிலில் மூலவர் கருவறைக்கு உள்ளேயும், இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்தேஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறைகள் கற்களால் மூடப்பட்டு இருக்கிறது. இவற்றின் உள்ளேயே பல கோடிக்கணக்கான புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மறைக்கப்பட்டதன் பின்னணி
பல நூற்றாண்டுகளுக்கு முன், திருவாரூரை நோக்கி படையெடுத்து வந்த பிற தேசத்து மன்னர்கள் கோவில்களை குறிவைத்து சூறையாடினர். அவ்வாறு சோழநாட்டு கோவில்கள் தகர்க்கப்பட்டு வந்த நிலையில், சோழர்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த செல்வங்களை கோவில்களிலும், இரகசிய பாதாளங்களிலும் புதைத்து வைத்தனர். அவ்வாறாக மறைக்கப்பட்ட புதையல் திருவாரூர் தியாகராஜர் கோவிலிலும் உள்ளது என தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் சான்றுகள்
சோழநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்களில் தியாகராஜர் கோவிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஒன்று. இதனால் சுமார் 80 ஆண்டு காலம் கோவில்கள் மூடப்பட்டதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. பிற தேசத்து படையெடுப்பில் இருந்து செல்வங்களை பாதுகாக்க தியாகராஜர் கோவிலில் இரண்டு அறைகளிலும் விலை உயர்ந்த நகைகள், சாமி உருவ சிலைகள் மற்றும் அறிய பொக்கிஷங்களை வைத்து கர்ப்பகிரக வாயிலை மூடியுள்ளனர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொருட்கள் கூட தியாகராஜர் கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது என கல்வெட்டுகள் கூறுகின்றன.