ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை தன் வசம் ஈர்க்கும் திருப்பதி ஏழுமலையானை நம் கண்கள் எத்தனை முறை கண்டாலும் சலிக்கவே சலிக்காது! திருப்பதியில் தரிசனம் மற்றும் ரூம் புக்கிங் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. மாதந்திர புக்கிங் ஓபன் ஆன ஒரு சில மணி நேரங்களிலே முழு ஸ்லாட்டும் தீர்ந்து விடுகிறது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அனைத்து வகையான பக்தர் பெருமக்களும் பயன்பெறும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் பிரச்சினை எதுவுமின்றி நீங்கள் உங்கள் மொபைலிலே டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்! இந்த செயலியை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை கீழே காண்போம்!
TTD யின் புதிய செயலி
பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'Sri TTDevasthanams' என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கோவிந்தா செயலி மேம்படுத்தப்பட்டு புதிய செயலிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் புதிய செயலி மூலம் பக்தர்கள் அறிய முடியும். அந்தவகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல் செயலி டி.டி.தேவஸ்தானம் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட், தங்குமிடம், ஆர்ஜித சேவைகளை ஆகியவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருமலை தேவஸ்தானத்துடன் ஜியோ
திருமலையில் ஜனவரி 27 அன்று அன்னமய்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தார். "இது யூனிவர்ஸல் செயலியாகும். பக்தர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தரிசன டிக்கெட் மற்றும் பிற சேவைகளை அறிந்து புக் செய்து கொள்ளலாம்" என்றும் கூறினார். இதையடுத்து மொபைல் செயலியின் சிறப்பம்சங்கள், பயன்பாடு குறித்து ஜியோ நிறுவன அதிகாரிகள் பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார்கள்.
செயலியில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன
இந்த செயலிமூலம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம், ஆர்ஜித சேவை, தங்குமிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மொபைல் செயலியில் பண்டிகை தினங்கள், விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு, திருப்பதியில் நடக்கும் நிகழ்ச்சிகள், வீடியோக்கள், ரிங்டோன்கள், வால்பேப்பர், திருமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தரப்பட்டுள்ளன. பக்தர்கள் நேரடியாக வந்து திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாதவர்கள், ஏழுமலையானை நினைத்து இ-உண்டியலில் ஆன்லைன் பேமெண்ட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் பதிவிறக்கம்
இந்த செயலியை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலம் மேற்கூறப்பட்ட அனைத்து விதமான பயன்களையும் பெறலாம் என்பதால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். செயலி வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான ஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.
எப்படி பதிவிறக்கம் செய்வது
o உங்களது மொபைல் போனில் ப்ளேஸ்டோரில் 'Sri TTDevasthanams' என்று தேடவும்
o செயலியை உங்களது போனில் டவுன்லோட் செய்யவும்.
o பின்னர் உங்களது செல்போனுக்கு வரும் OTP யை கொடுத்து உள் நுழையவும்.
o உங்களது பெயர், பிறந்த தேதி, இ-மெயில் ஐடி, மற்றும் ஆதார் கார்டு ஆகிய சுய விவரங்களை கொடுக்கவும்.
o அவ்வளவு தான், செயலி செயல்பட தயார்.
ஏழுமலையான் முகத்துடன் ஓபன் ஆகும் செயலியில் ரம்மியமாக "ஓம் நமோ வெங்கடேசாய" என்று கேட்பது செவிகளுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா. இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்!