உலகில் பல அதிசயமான ஆச்சர்யமான விசயங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவற்றில் சில விசயங்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்தது அல்லது உருவானது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கமாட்டோம். பின் அதைப் பற்றி படிக்கும்போது அடடே.. இது இந்தியாவிலே இருக்கா என்று ஆச்சர்யப்படுவோம். அப்படி நம்மை அதிசயிக்கச் செய்யும் பத்து இடங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மிதக்கும் தபால் நிலையம்
இந்தியாவில் தபால் போக்குவரத்து என்பது மிகப்பெரிய போக்குவரத்தாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டபோஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் லேக் பகுதியில் ஒரு போஸ்ட் ஆபீஸ் திறக்கப்பட்டது.
இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இந்த அலுவலகம் ஒரு படகில் திறக்கப்பட்டது. இந்தியாவின் ஒரே மிதக்கும் போஸ்ட் ஆபீஸ் இதுதான்.
எங்கே இருக்கிறது?
இந்தியாவில் அமைந்துள்ள உலகின் ஒரே மிதக்கும் தபால் நிலையம் ஜம்மு காஷ்மீரில் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில்தான் இந்த தபால் நிலையம் அமைந்துள்ளது.
கும்பமேளா
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஓர் திருவிழா கும்பமேளா ஆகும். இதனை பூர்ண கும்பமேளா என்றும் அழைப்பர். பன்னிரெண்டு பூர்ண கும்பமேளாவிற்கு பிறகு வருவது தான் மகா கும்பமேளா கிட்டத்தட்ட 144 வருடங்கள் கழித்து வருவது. உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவும் இது தான். இந்த கூட்டத்தை விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரிந்திருக்கிறது.
எந்த இடங்களில் தெரியுமா?
கும்பமேளாவானது இந்தியாவின் அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்
உலகின் மிக ஈரமான பகுதி
உலகிலேயே அதிக மழைப்பொழிவு இங்கே தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் 11ஆயிரம் மில்லி மீட்டர் வரை மழைப்பொழிவு இருக்குமாம். இதுதான் உலகின் மிக அதிக ஈரமான பகுதியாக இருக்கிறது.
எந்த இடம் தெரியுமா?
மேகாலயாவில் இருக்கக்கூடிய காசி மலையில் இருக்கும் மவுஸ்ன்ரம் கிராமம் தான் உலகிலேயே அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதி ஆகும்
உலகையே சுற்றும் இரும்பு வேலிகள்
ஒரு இரும்பு பாலத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. இதன் எடை 50000 ஆப்ரிக்க யானை எடையின் ஒத்ததாக இருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கம்பிகளை ஒன்றாக இணைத்தால் அது பூமியின் சுற்றளவிற்கு சரியாக வருமாம்!
இரும்பு பாலம் எது தெரியுமா
மும்பையின் புறநகரான பாந்திராவை வொர்லி மற்றும் நாரிமுன்னுடன் இணைக்கும் ஒர் பாலம் தான் பாந்திரா வொர்லி கடற்பாலம். சுமார் 1600 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. முன்னால் பாந்திராவிலிருந்து வொர்லி செல்ல 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் இந்த கடற்பாலம் கட்டியதிலிருந்து அந்த பயண தூரம் வெறும் ஏழு நிமிடங்களாக குறைந்திருக்கிறது.
உலகின் மிக உயரமான கிரிக்கெட் ஸ்டேடியம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் சைல் கிரிக்கெட் கிரவுண்டு உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் கிரவுண்டாகும். இது 2,444 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கு அமைந்திருக்கும் மிலிட்டிரி பள்ளிக்கூடத்தின் பயன்பாட்டிற்காக 1893 ஆம் ஆண்டு இந்த கிரவுண்ட் கட்டப்பட்டது.
6 கபடி எனும் விளையாட்டு உருவான இடம்
கபடி எனும் விளையாட்டின் பெயர் கைப்பிடி எனும் தமிழ் சொல்லிலிருந்து உருவாகியது. இது தமிழில் சடுகுடு போட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது உருவான இடமே தமிழ்நாடுதான் என்று கூறப்படுகிறது. எங்கே தெரியுமா?
கபடியின் தாயகம்
கபடியின் தாயகம் இந்தியா என்றாலும், இது உருவான இடம் சோழர்களின் பகுதியாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே வேளையில் பாண்டிய தேசத்தவர்களும் வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் போர் நேரம் போக மற்ற நேரங்களில் உடல்திறன் குறையாமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம்.
நிலவில் தண்ணீரைக் கண்டுபிடித்த இடம்
நிலாவில் தண்ணீர் இருக்கிறது, தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன என்று உலகிற்கே முதன் முதலில் சொன்னது இந்தியா தான். இஸ்ரோவிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் 1 மூன் மினராலஜி முறையில் அதனை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இஸ்ரோ இந்தியாவில் பெங்களூரில் இருக்கிறது.
இந்தியாவின் முதல் ராக்கெட் வைக்கப்பட்ட இடம்
இந்தியாவின் முதல் ராக்கெட் வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? திருவனந்தபுரம் தும்பா ராக்கெட் ஏவுதளம்தான் அது. அதுவும் அந்த ராக்கெட் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டது தனி கதை.
யானைக்களுக்கான உலகின் முதல் ஸ்பா
உலகின் முதல் யானைகளுக்கான ஸ்பா கேரளத்தில்தான் உள்ளது. புன்னத்தூர் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த இடம்தான் யானைகளுக்கான உலகின் முதல் ஸ்பா.
உலகின் முதல் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
உலகில் பல்வேறு இடங்களில் வைரம் கிடைக்கிறது. அதை ஒப்பிடும் போது இந்தியாவில் கிடைக்கும் வைரங்களின் அளவு குறைவுதான் என்றாலும், உலகின் முதல் வைரம் இங்குதான் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 12ம் நூற்றாண்டிலேயே குண்டூர் கிருஷ்ணா நதிக்கரையில் வைரம் எடுத்ததாக தகவல்கள் உள்ளன.