எண்ணற்ற வண்ணமயமான மீன்களுடன் நீந்தலாம்! பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம்! அரிய கடல் விலங்கினங்களைப் பார்த்து மகிழலாம்! என்ன புரியவில்லையா? ஆம்! இவை அனைத்தும் ஸ்கூபா டைவிங்கின் அம்சங்கள் தான்! ஆனால் இது அதிகம் செலவாகுமே, இதைக் காண எப்படியும் மாலத்தீவு, தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவிற்கு தானே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் எண்ணினால் அது தவறு, ஏனென்றால் அதை தாண்டிய இயற்கை அழகு வாய்ந்த ஸ்நோர்கெல்லிங் ஸ்பாட்டுகள் இந்தியாவில் உள்ளன. குறைந்த பயண நேரத்தில் அதிக பட்ஜெட் செலவில்லாமல் இந்த இடங்களுக்கு சென்று வந்து விடலாம். இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்நோர்கெல்லிங் மற்றும் பவளப்பாறை இடங்களின் பட்டியல் இதோ!
லட்சத்தீவுகள்
சுமார் 78 வகையான பவளப்பாறைகள் அடங்கிய லட்சத்தீவுகள் கண்ணிற்கினிய சொர்க்கம் என்றே சொல்லலாம். எங்கே பார்த்தாலும் நீல நிற மற்றும் தெளிவான படிக நீர், தென்னை மரங்கள், வண்ணமயமான கடல் உயிரினங்கள் என லட்சத்தீவுகள் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. மாண்டா ரேக்கள், ஆமைகள், வித விதமான மீன்கள், வெள்ளை சுறாக்கள் ஆகியவற்றுடன் நீல நிற வெளிப்படையான லகூன்களில் நேரத்தை செலவிடுவது வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிரின்சஸ் ராயல், லாஸ்ட் பாரடைஸ், டால்பின் ரீஃப், கிளாஸ் ரூம், மாண்டா பாயிண்ட் ஆகிய இடங்களில் இங்கு ஸ்கூபா டைவிங் மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது. அக்டோபர் முதல் மே வரையிலான இடைப்பட்ட காலத்தில் இங்கு வந்து செல்லலாம். இங்கு ஸ்கூபா டைவிங் செய்ய 4,000 ரூபாய் முதல் 1௦,000 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி விமான நிலையங்களில் இருந்து லட்சத்தீவுகளை அடையலாம்.
அந்தமான் & நிக்கோபார்
560 வகையான பவளப்பாறைகளுடன் இது உலகில் உள்ள செழிப்பான பவளப்பாறை திட்டுகளில் ஒன்றாக உள்ளது. இது திமிங்கலங்கள், டுகோங், உப்பு நீர் முதலைகள், கடல் ஆமைகள், கடல் பாம்புகள், டால்பின்கள் போன்ற கடல் விலங்குகளை நீங்கள் இங்கு பார்க்கலாம். இது தவிர, போல்டர் பவளப்பாறைகள், பூமராங் பவளப்பாறைகள், சிவப்பு பாசிகள், பழுப்பு பாசிகள், கடல் புற்கள், கம்பி பவளப்பாறைகள், மென்மையான பவளப்பாறைகள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். இங்கு ஒரு டைவ் 4,500 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடைபட்ட காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். அந்தமானுக்கு விமான சேவை மட்டுமின்றி, கப்பல் சேவையும் உள்ளது. கப்பலில் சென்றடைய 2 முதல் 3 நாட்கள் ஆகிறது, இருப்பினும் கப்பலில் செல்வது மிகவும் அலாதியாக இருக்கும். விமானம் என்றால் சென்னையிலிருந்து செல்வது மிகவும் சரியாக இருக்கும்.
கோவா
இந்தியாவின் பார்ட்டி தலைநகரான கோவா, நீர் விளையாட்டு ஆர்வலர்களின் புகலிடமாக உள்ளது. பல கப்பல் விபத்துகள் அரங்கேறிய அரபிக்கடலின் வெதுவெதுப்பான நீரில் எண்ணற்ற கடல் உயிரினங்களை காண லட்சக்கணக்கான டைவர்ஸ் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றனர். கிராண்டே தீவு, ரெக் ஆஃப் சுசி, கோவ் ஆஃப் ஷெல்டர் மற்றும் பே ஆஃப் பவுண்டி ஆகியவை மிகவும் பிரபலமான ஸ்கூபா டைவிங் இடங்களாகும். இங்கு ரூபாய் 5,000 முதல் 1௦,௦௦௦ வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் சாலை வழியாகவும், விமான வழியாகவும் கோவா நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தர்கர்லி
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள தர்கர்லி கொங்கன் கடற்கரையில் மறைந்திருக்கும் ரத்தினமாகும். நீரில் மூழ்கிய சுவர்களுக்குள் வளமான பவள வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்த இடம் நூற்றுக்கணக்கான நீர்வாழ் உயிரினங்களின் இருப்பிடமாகும். தர்கர்லியின் கடலோர நீர் தெளிவாகவும், பவளப்பாறைகள் மற்றும் வண்ணமயமான கடல் விலங்குகள் நிறைந்ததாகவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்டி கடற்கரையில் இருந்து விரைவு படகுகளில் டைவிங் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தர்கர்லியில் நிபுணர்களால் வழிநடத்தப்படும் டைவிங் செயல்பாடு வழக்கமான ஸ்கூபாவைக் காட்டிலும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த டைவ் ஆகவே பார்க்கப்படுகிறது. ஒரு நபருக்கு 850 ரூபாயே இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதால் நிறைய மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டமே தர்கர்லிக்கு செல்வதற்கு சிறந்த நேரமாக கூறப்படுகிறது. நீங்கள் மும்பை, கோவா அல்லது புனேவில் இருந்து வருகிறீர்கள் என்றால், தர்கர்லியை சாலை வழியாக எளிதாக அணுகலாம். அருகிலுள்ள விமான நிலையம் கோவா விமான நிலையம் ஆகும்.
புதுச்சேரி
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரே டைவிங் ஸ்பாட் புதுச்சேரி மட்டும் தான். ஸ்கூபா டைவிங் இடமாக புதுச்சேரியை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் அங்கு சென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவது முற்றிலும் உறுதி. இந்த இடம் இயற்கையான பவளப்பாறைகள், பாறை பாப்-அப்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட முகடுகள் மற்றும் பலா மீன், மாண்டா ரேக்கள், கிளி மீன்கள், கடல் பாம்புகள், ஓட்டுமீன்கள், ட்ரிக்கர் மீன்கள், சிங்க மீன்கள், குரூப்பர்கள், மோரே ஈல்கள் மற்றும் விசிறி பவளப்பாறைகள் போன்ற ஏராளமான கடல் உயிரினங்களால் நிறைந்துள்ளது. ரூபாய் 6500-8000 வரை இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாக நன்கு இணைப்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள விமான நிலையம் சென்னை விமான நிலையம் ஆகும்.