இந்திய மக்களுக்கு பெரும்பாலும் அருகிலுள்ள இடங்கள் மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. கன்னியாக்குமரியைச் சேர்ந்த நபருக்கு அந்த கடலோசையும், வள்ளுவன் சிலையும், மறையும் சூரியனும் அந்த அளவுக்கு பெரிதாகபடாது. அவர் இந்த காட்சிகளை தினமும் கண்டுகொண்டிருப்பதால் அவருக்கு எல்லாநாளும் ஒருமாதிரிதான். இதுவே சிம்லாவைச் சேர்ந்தவருக்கு கன்னியாகுமரி பிரமாதமானதாக இருக்கும். இந்தியர்களுக்கு இப்படி என்றால், வெளிநாட்டவர்கள் இந்திய சுற்றுலாவுக்கு மாதக்கணக்கில் வந்து எதையெல்லாம் ரசிக்கிறார்கள். எங்கெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை இந்த பதிவில் காண்போம்.
தாஜ்மஹால்
வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வர முழுமுதற்காரணங்களுள் முதலாவதாய் இருப்பது தாஜ்மஹால்.
உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாளிகை அமைப்பை சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் எனும் பூங்கா அமைந்துள்ளது. மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.
wiki
தங்கக்கோயில்
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். அம்ரித்ஸரில் உள்ள இந்த குருத்வாரா கோயில் 16ம் நூற்றாண்டில் 5 வது சீக்கிய குருவான அர்ஜன் தேவ்ஜி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் இந்தியாவில் கட்டாயம் காணவேண்டிய ஒன்றாக இதைக் கருதுகின்றனர். டெல்லி வந்து இறங்கியதும் நேரடியாக இதைக் காணவருபவர்கள் அதிகம். சுற்றுலா பயணிகளிடையே தங்கக் கோவில் குறித்த தாக்கம் நிச்சயம் வியப்புக்குரியதாகும்.
native planet
சூரிய கோயில்
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர் அமைந்துள்ளது. இக்கிராமம் 15ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெயின் கோயிலை கொண்டிருக்கிறது. இக்கோயில் ஜெயின் சமுகத்தினர் பெரிதும் பூஜிக்கும் கோயிலாக திகழ்கிறது. இந்த கோயிலின் வசீகரம் அதன் கம்பீரமான தூண்களில் பிரதிபலிக்கிறது. பின்னணியில் முடிவிலா பாலைவனப்பகுதியுடன் இக்கோயில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது.
இக்கோயிலில் சிவபெருமான் மீசையுடன் காணப்படுவது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேலும் கனேராவ் கிராமத்திலேயே இன்னும் ஏராளமான கோயில்களும் தரிசிப்பதற்கு உள்ளன. அவற்றில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் இரண்டும் இப்பிரதேசத்தின் முக்கியமான ஜெயின் கோயில்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
Nagarjun Kandukuru
தஞ்சை பெரியகோயில்
தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்' என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு' எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.
மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு. ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.
Native planet
கோல்கொண்டா கோட்டை
கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம். கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.
nativeplanet
ஆம்பேர் கோட்டை
ஆம்பேர் கோட்டையானது ராஜ மான் சிங், மிர்ஸா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. மூத்தா எனும் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள் இந்த ஆம்பேர் கோட்டை பல அரண்மனைகள், மண்டபங்கள், சபைக்கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்களை கொண்டுள்ளது. யானை மீது சவாரி செய்தவாறே சுற்றுலாப்பயணிகள் கோட்டை முழுவதையும் சுற்றிப்பார்க்கும்படியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஷீலா மாதா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான கோயிலையும் இந்த கோட்டைக்குள் பார்க்கலாம். திவான்-இ-ஆம், ஷீஸ் மஹால், கணேஷ் போல், சுக் நிவாஸ், ஜஸ் மந்திர், திலராம் பாக் மற்றும் மோஹன் பாரி போன்றவை இந்த கோட்டை வளாகத்துக்குள் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சங்களாகும்.
nativeplanet
ராமேஸ்வரம்
தமிழ் நாட்டின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் தீவுகள் இராமேஸ்வரத்திற்கு அருகிலேயே 50 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தாலும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் 1403 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும். இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரும் 'சார் தம்யாத்ரா' அல்லது புனிதப் பயணம் செய்ய வேண்டும். மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், இலங்கை மன்னன் இராவணன் கடத்திச் சென்று சிறை வைத்த தன்னுடைய மனைவி சீதா தேவியை மீட்கும் பொருட்டாக, இலங்கைக்கு தரைப்பாலத்தைக் கட்டிய இடம் தான் இன்றைய இராமேஸ்வரம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
Achuudayasanan
மூனாறு
இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது. மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.
nativeplanet