கடந்த 2015 சென்னை வெள்ளம் போல, மீண்டும் தமிழகத்துக்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் கிழக்கு கடற்கரை வாசிகளிடையேயும், அவர்களின் குடும்பத்தினரிடையேயும் அதிக அளவில் நிகழ்கிறது. காரணம் கஜா எனும் அரக்கப்புயல்.
ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?
நவம்பர் 15ம் தேதி முதல் வெளுத்து வாங்கப்போகும் அதிரடி கஜா புயலால் பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் புயலின் காரணமாக பாதிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாலும், பஞ்சாங்க வானிலை எனும் பெயரில் பல தகவல்கள் வட தமிழகம் வெள்ளத்தில் மூழ்கி அழியும் எனும் பீதியையும் பரப்பி வருகிறது. வாருங்கள் பாதிக்கப்படும் இடங்கள் குறித்தும் சுற்றுலா சென்றவர்கள் செல்பவர்கள் பாதுகாப்புகள் குறித்தும் சில விசயங்களை இந்த பகுதியில் காண்போம்.
எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.
மீண்டும் சென்னை வெள்ளம்
அடித்து கிளப்பிய மழையில், திடீரென திறந்துவிடப்பட்ட அணைகளின் நீரால் சென்னை வெள்ளத்தில் மூழ்கி சில ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர் சென்னை வாசிகள் பலர். தங்கள் உடைமைகளை இழந்து மீண்டு வர இத்தனை ஆண்டுகள் கழிந்த பின் மீண்டும் பழைய நிகழ்வுகள் கண்முன் வந்து செல்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு பாதிப்பு வந்துவிடுமோ என்று அரசாங்கத்தை கேள்வி கேட்கின்றனர் மக்கள். இதனால் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் சுற்றுலாவுக்கு சென்ற செல்லவுள்ள மக்களுடைய பாதுகாப்புக்கு சில தகவல்களை அறிவுறுத்தவேண்டியிருக்கிறது.
கஜா எனும் அரக்கப்புயல்
வங்கக் கடலில், நாகப்பட்டினத்துக்கு வட கிழக்குப் பகுதியில் 820 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது இந்த கஜா புயல். இது கரையைக் கடக்கும் போது 7 மாவட்டங்களில் மிக கன மழையையும், மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்துக்கு காற்றையும் வீசக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிக அளவு பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், பல இடங்களில் குறிப்பிட்ட நாள்களில் சுற்றுலாவுக்கு பயணிகள் வரவேண்டாம் எனும் படியும் அறிவுறுத்துகின்றனர் அரசு தரப்பினர்.
கடலில் ஏற்படும் மாற்றம்
நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்காலில் இயல்பை தாண்டிய உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்றும் அந்தந்த பகுதியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களுக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடுகளுக்குள் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் எவைஎவை தெரியுமா?
பாதிக்கப்படும் கடற்கரை சுற்றுலாத் தளங்கள்
வேதாரண்யம், வேளாங்கன்னி, காரைக்கால், தரங்கம்பாடி, பூம்புகார், கொடிலம் ஆறு, அரியாங்குப்பம், பாண்டிச்சேரி, செரனிட்டி பீச், மண்டாவி, மரக்காணம், ஆலம்பாறைக் கோட்டை, கடலூர், மாமல்லபுரம், கோவளம் வரை பெரும்பாலான பகுதிகள் கடற்கரை சுற்றுலாத் தளங்களாகும்.
வேதாரண்யம்
உப்பு சத்தியாகிரகத்துக்கு பெயர் பெற்ற வேதாரண்யம் பகுதி இந்த புயலால் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இங்கு சுற்றுலா செல்பவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்கவேண்டும்.
இங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத மூலிகைக்காடு, வரலாற்றுப் புகழ்வாய்ந்த கலங்கரை விளக்கம், இராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோவில், போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடங்களாகும்.
டச்சுக் கோட்டை
தரங்கம்பாடியில் இருக்கும் டச்சுக் கோட்டை மிகச் சிறந்த வரலாற்று நினைவுச் சின்னமாகும். இந்த புயல் மழையின் காரணமாக இந்த பகுதியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
டச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும். இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி ஆதிக்கம் குறித்த வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் இக்கோட்டையைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.
வேளாங்கன்னி கடற்கரை
வேளாங்கன்னி கடற்கரைப் பகுதி டிசம்பர் மாதம் மிக அதிகம் மக்கள் வரும் சுற்றுலாத் தளமாகும். இங்கு மழையால் ஏற்படும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எனவே பாதுகாப்பு கருதி இங்கு செல்ல திட்டமிட்டிருந்தால், அதை அப்படியே ஒத்தி வைக்கும்படி சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோவளம் கடற்கரை
கோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்கள் உள்ளன.
இந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன. பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பதால் இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். புயலால் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பயணத்தை ஒத்தி வைப்பது சிறந்தது.
மாமழையில் புரளப் போகும் மகாபலிபுரம்
கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம். பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தனை அம்சங்களைக் கொண்ட மகாபலிபுரம் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும், எனவே இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருக்கும். இந்த இடமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.