நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து வருகிறார் என்பது நம்பிக்கை. பொதுவாக, நாம் கோவில்களில் கண்டு வழிபட்ட சிவலிங்கங்கள் கருப்பு நிறத்திலோ அல்லது அமர்நாத்தில் மட்டும் உள்ள பனியால் ஆன வெள்ளை லிங்கத்தையோ கண்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு சிவதலத்தில் உள்ள லிங்கம் நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசயம் உங்களுக்குத் தெரியுமா ?
நிறம் மாறும் லிங்கம்
சிவபெருமான் எந்த அளவிற்கு பல புதிர்களை உடையக் கடவுளோ அதேப் போலத்தான் இந்த லிங்கமும். கல்லாலான சிவலிங்கம் என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேலை என காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும், உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப்பூ நிறத்திலும், பொழுது சாய்கையில் சற்று நிறம் மங்கிய நிலையிலும் இந்த லிங்கம் தரிசனம் தருகிறது.
File Upload Bot
தலசிறப்பு
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிவ பெருமானின் பெயர் அசலேஷ்வர் மஹாதேவ். இங்குள்ள லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. இந்த அதிசயம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. ராஜபுத்திர மறவர்களும், ரிஷிகளும், முனிவர் பெருமக்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள். வசிஷ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனுப் பசுவுடன் இங்கு தங்கியிருந்து தவம்புரிந்து வேள்விகள் இயற்றியிருக்கிறார் என புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
Yann Forget
விசித்திர நந்தி
இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் எந்த அளவிற்கு பிரசிதிபெற்றதோ அதே அளவிற்கு சிறப்புடையது இங்குள்ள நந்தி சிலையும். இந்த நந்தி சிலை 5 வித்தியாச உலோகங்களின் கலவையால் செய்யப்பட்டதாகும். லிங்கத்தின் நேர் எதிரே சிவனை வழிபடுவதுபோல் இந்த நந்தி காட்சியளிக்கிறது.
Ranjith Kumar Inbasekaran
புதைந்து கிடக்கும் ரசகியம்
அசலேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் இன்றும் புதைந்த நிலையிலேயே உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, பாதாளத்தில் புதைந்து கிடப்பதாக நம்பப்படுகிறது. அதாவது, சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை இது உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது. பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இதுதான் என்கின்றனர் பக்தர்கள்.
வழிபாடு
திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமைந்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இங்கு வந்து வேண்டிய மக்களுக்கு நினைத்த காரியம் நடக்கிறது என்று பகதர்களிடம் பலத்த நம்பிக்கையிருக்கிறது.
Janki1694
எப்படிச் செல்வது ?
ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமான தோல்பூர் ஆக்ராவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்பூரில் இருந்து 276 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதை வழியாக மவுன்ட் அவு கடந்து பயணித்தால் அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலை அடையலாம். ராஜஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தோல்பூருக்குப் பேருந்துகள் இருக்கின்றன. ஆக்ரா விமான நிலையமே இதன் அருகில் உள்ள விமான நிலையமாகும்.
மவுன்ட் அபு
ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், அடர் வனக்காடுகள் போன்றவை நிறைந்து வருடம் முபவதும் பசுமையாகக் காட்சி தரும் மவுன்ட் அபு குறித்து பல புராணக் கதைகளும் உள்ளன. ஒருமுறை, அற்புதா என்ற பெயர் கொண்ட நாகம் ஒன்று, சிவபெருமானின் வாகனமான நந்திதேவரின் உயிரைக் காப்பாற்றியது. ஆகவே, இச்சம்பவம் நடைபெற்ற இடமான இந்த மலை, அற்புதா காடுகள் என்ற பொருளில், அற்புதாரண்யம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து, அபு பர்வதம் என்றும், பின்னர் மவுன்ட் அபு என்றும் மாறிப்போனது என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
Graphikamaal
சுற்றுலாத் தலங்கள்
மவுன்ட் அபுவிற்கு பயணம் செய்யத் திட்டமிட்டால் தவறாமல் இந்த சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரலாமே. மேவார் மன்னர் ராணா கும்பாவினால் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அசல்கர் கோட்டை, அதன் நடுவே உள்ள நக்கி ஏரி, அருகே குன்றின் மீதுள்ள தவளைப் பாறை போன்றவை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பிக் காணும் இடங்களாகும். மேலும், வசிஷ்டர் ஆசிரமம், கௌதமர் ஆசிரமம், வியாசதீர்த்தம், பெண்களின் மலட்டுத்தன்மையைப் போக்கும் நாகதீர்த்தம் ஆகிய புனிதத் தலங்களும் உள்ளன. அபு மலை உலக அலவில் புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள அற்புதமான தில்வாரா அல்லது தெஹல்வாடா ஜைன ஆலயங்களே எனலாம். இந்த மலையில் அற்புதா தேவி, ஸ்ரீ ரகுநாத்ஜி, தத்தாத்ரேயர், துர்கை போன்ற பல இந்துக் கடவுளருக்கும் கோவில்கள் உள்ளன.
Sahaamit457