சாட்டையில் அடித்து பேயை விரட்டுவது, பெரிய கோலம் போட்டு அதன் நடுவே பேய் பிடித்துவிட்டதாக கூறப்படுபவரை அமர வைத்து பூஜை செய்வது, ஆள் உயர கண்ணாடி முன் நின்று பேயை விரட்டுவது என பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். சிலர் நேரிலோ அல்லது யாராவது மூலமாகவோ கேள்விப்பட்டிருப்போம். சிறு வயதில் இதுபோன்ற காட்சிகளைக் காணும் போது நெஞ்சில் பயம் தொற்றிக்கொண்டாலும், பின் நாகரீக வளர்ச்சியின் அடிப்படையில் இதுபோன்ற பயங்கள் நம்மில் பலருக்கு விட்டுப்போயிருக்கும். ஆனால் பெரும்பாலானோர் தங்களுடன் இருப்போரின் திடீர் மாறுபட்ட நடைமுறை, கூச்சலிடுவது, அமானுஷ்யமாக நடந்துகொள்வது போன்ற பல காட்சிகளைக் கண்டிருப்போம். இதற்கு என்ன காரணம் எனத் தேடினால் நம் வீட்டுப் பெரியோர் கூறுவது பேய் பிடித்துவிட்டது என்று தான். அவ்வாறு பிடித்த பேய்களை விரட்டியடிக்கும் சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
சோற்றானிக்கரை பகவதி
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில். லட்சக்கணக்கான பக்தர்களைத்தன் வசம் ஈர்த்து, அவர்களின் இன்னல்களைக் களைந்து, இடர்பாடுகளைத் தரும் நோய்களை குணப்படுத்தி அருள்பாலிக்கும் இந்த அம்மன் கோவிலில் தான் கேரளத்திலேயே பேய்களை விரட்டியடிப்பதில் பிரசிதிபெற்றது.
Roney Maxwell
தலவரலாறு
முன்னொரு காலத்தில் வேடன் ஒருவனும், அவனது மகளும் இணைந்து கன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். ஒரு நாள் மகள் உயிரிழந்தாள். யாருமற்ற தந்தை அந்த பசுமாட்டு கன்றுக் குட்டியின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் இரவு வடனின் தூக்கத்தில் பசுமாடு காணாமல் போவது போல் கனவு வந்தது. உடனே விழித்த வேடனோ பசுமாட்டை பார்த்தபோது அது அங்கேயே இருந்தது. ஆனால், விடிந்ததும் அந்த பசு காணாமல் போயிற்று. பசு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தில் அதே அளவில் ஒரு கல் இருந்தது. இந்நிலையில், அங்கே வந்த துறவி ஒருவர் அந்தப் பசு மகாலட்சுமி என்றும் உன் கனவில் வந்தது மகாவிஷ்ணு என்றும் விளக்கினார். பின், வேடனின் இறப்பிற்குப் பின் அந்தக் கல் கவணிப்பாரின்றி போனது.
Vinayaraj
சோதி ஆன கரை
இச்சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்டுக்குள் ஒரு நாள், பெண் ஒருவர் புல் வெட்டும் கத்தியை ஒரு பாறையில் தேய்க்க, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்து போன அவர் கூச்சலிட்டு ஊர் மக்களை அழித்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் அங்கு பராசக்தியின் பேரொளி பரவியிருப்பதை அறிந்து, அந்தக் கற்சிலை பகவதிதான் என்றும், அதை சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக வழிபட வேண்டும் என்றும், அருகிலுள்ள சிறிய கல் மகா விஷ்ணுவினுடையது என்றும் கூறினார். அன்னை தன்னை ஜோதி வடிவில் வெளிப்படுத்திக் காட்டியருளியதால் அது சோதி ஆன கரை ஆயிற்று. பின்னர் காலப்போக்கில் சோற்றானிக்கரையாக மருவியது.
Ms Sarah Welch
தல அமைப்பு
மேற்கில் பிரதான கோபுர வாயில் வழியாக நுழைந்தால் பகவதியின் கருவறை கிழக்கு நோக்கியிருக்கிறது. தங்கக் கலசத்திலும், விலை மதிக்க முடியாத அணிகளின் அலங்காரத்திலும் கோடி சூரியப் பிரகாசத்துடன் அருளொளியை வாரி வழங்கும் அன்னை, இங்கு லட்சுமி நாராயணத் தத்துவமாக எழுந்தருளியிருக்கிறாள். மூலஸ்தான சிலா வடிவம் உருவ அமைப்புடன் கூடியது அல்ல. சிவப்பு வெட்டுக்கல் பகவதியாகவும், அதன் வலப்புறம் உள்ள சிறிய கருங்கல் மகாவிஷ்ணுவாகவும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன. அங்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்வதில்லை. விக்ரஹங்களைச் சுற்றியுள்ள மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தூரம் வடக்கே உள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது. உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி.
Ssriram mt
வழிபாடு
பகவதி தேவிக்கு காலையில் வெள்ளாடையும், மத்தியானம் சிவப்பாடையும், மாலையில் நீல நிற ஆடையும் அணியப்படுவதிலிருந்து சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக இங்கு பகவதி ஆராதிக்கப்படுவது விளங்கும்.
Ssriram mt
பேய்களை முடிச்சிட்ட தூண்
உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி உள்ளது. இவர் சன்னதிக்கு முன்தான் பேய், பிசாசு பிடித்தவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார். அவர்கள் பல்வேறு விதமான அமானுஷ்ய கூச்சலிட்டும், ஆக்ரோசமாகவும் செயல்படுகின்றனர். அப்போது, அங்கிருக்கும் நம்பூதிரி தோற்றம் கொண்ட ஒருவர் பேய் பிடித்தவர்களை சில மந்திரங்களின் மூலம் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார். அதற்கு அடையாளமாக சன்னதிக்கு முன்னுள்ள தூண் ஒன்றில் ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
Ssriram mt
மூல சன்னதியும், பில்லி சூனியமும்
மூல சன்னதியில் நிலவும் மாபெரும் சக்தியானது, பேய்களை போன்ற ஆத்மா சாந்தியடையாதவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்து, மெள்ள மெள்ள, விரட்டியடிக்கும் அதிசயத்தைக் கண்ணால் காண முடிகிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள், பில்லி, சூனியம் முதலிய உபத்திரவங்களுக்கு ஆளானவர்களை அதிகளவில் இத்தலத்தில் காணலாம்.
DeepanjanGhosh
கீழ்க்காவு பத்ரகாளி கோவில்
பகவதி கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் கீழ்க்காவு பத்ரகாளி கோவில் அமைந்துள்ளது. பத்ரகாளி, பகவதியை நோக்கியவாறு அமர்ந்திருக்கிறாள். பகவதி தரிசனம் முடிந்ததும், மக்கள் நேரே கீழ்க்காவு காளி கோவிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள். தினமும் பகவதி சன்னதி திறந்த பிறகுதான் கீழ்க்காவு சன்னதி திறக்கப்படுகிறது. இரவு பகவதி சன்னதி மூடிய பிறகு, இங்கு குருதி தர்ப்பணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பிறகே நடை அடைக்கப்படுகிறது. முன்பு இங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு வந்ததற்கு அடையாளமாகக் காலையில் குருதி பூஜையும், இரவில் குருதி சமர்ப்பணமும் நடைபெற்று வருகின்றன.
Christopher J. Fynn
எப்படிச் செல்வது ?
எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில். இதனருகில் கொச்சியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன, அவை எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் நகரம் ஆகும். வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் இருந்துவரும் இரயில்கள் எர்ணாகுளம் சந்திப்பில் நிற்கும். எர்ணாகுளத்தில் இருந்து பேருந்து மூலமாக இந்தக் கோவிலுக்கு எளிதில் செல்ல முடியும்.