பொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீதோஷனம், இயற்கை சூழ்ந்த காட்சிகள், பசுமை மாறாக் காற்று, மனதை ரம்மியமாக்கும் சாலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். வருடத்தின் ஒரு முறை என்றாலும் சரி, வார விடுமுறை என்றாலும் சரி உடனே நாம் பயணிப்பது அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மலைப் பிரதேசம் தான். அந்த வகையில் இன்று நாம் பயணிக்கப்போவது கீலாங் என்னும் கடவுளின் மடியைத் தேடித்தான்.
கீலாங்
மடாலயங்களுக்கு பிரசிதித்தமான கீலாங் ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலாத் தலமாகும். லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களின் தலைமையகமாக உள்ள கீலாங் பல்வேறு சுற்றுலாத் தலங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. கீலாங் மனிதர்கள் வாழ்வதற்கு அல்ல, இது கடவுள் வாழும் இடம் என பிரபல எழுத்தாளரே வர்னித்துள்ளார்.
Moebius1
ஸ்பிடி சமவெளி
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெரிய தரிசு நிலம். ஸ்பிடி என்றால் இடைநிலம் என்று பொருள். இதை லடாக் போலவே இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு திபெத் என்றும் கூறலாம். இன்றும் காலம் அசையாது கிடக்கும் இடங்கள், மலைப்பகுதிகளின் பௌத்த மடாலயங்கள்தான் இந்த இடத்தின் சிறப்பாக திகழ்கிறது.
John Hill
எங்கும் மடாலயங்களே...
கீலாங் முழுவதும் கர்டங் மடம் மற்றும் ஷஷுர் மடம் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. 900 ஆண்டுகள் பழமையான கர்டங் மடம், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஷஷுர் மடாலயம் 17ம் நூற்றாண்டில் பூட்டான் மன்னர் நவங் நம்ஜியாலின் மத போதகரான சன்ஸ்காரின் லாமா தேவ கியட்ஷோவால் கட்டப்பட்டது. இப்பகுதியில் குரு கண்டல் மடம், தயுள் மடம், கெமுர் மடம் உள்ளிட்டவையும் புகழ்பெற்ற மடங்களாகும்.
Dennis Jarvis
சுற்றுலா அம்சங்கள்
கீலாங்கின் மற்ற புகழ்பெற்ற இடங்களாக தண்டி, சிஸ்சு, உதய்பூர் போன்றவை பிரசித்தமாக உள்ளது. சந்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சிஸ்சு கிராமம் ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். மேலும் சாகச விளையாட்டுக்களான மலையேறுதல், மீன்பிடித்தல், ஜீப் சவாரி, பாராக்ளைடிங், பனிச்சறுக்கு மற்றும் முகாமிடுதல் போன்றவற்றின் மூலம் கீலாங் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
tommy
நூறு மில்லியன் மணிச்சக்கரம்
தயுள் மடாலயம் ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சதிங்க்ரி கிராமத்தில் அமைந்துள்ள இம்மடாலயம் கீலாங்கின் பழமையான மடாலயங்களின் ஒன்றாகும். காம் பகுதியின் டோக்பா லாமா, செர்சங் ரிஞ்சென் ஆகியோரால் 17-ஆம் நூற்றாண்டில் இம்மடாலயம் நிறுவப்பட்டது. பௌத்தர்களின் முக்கிய நிகழ்வுகளில் தானாகவே சுழலும் புகழ்பெற்ற நூறு மில்லியன் மணிச்சக்கரம் இம்மடாலயத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. தயுளில் இருக்கும் லாமாக்களின்படி கடைசியாக 1986-ஆம் வருடம் அச்சக்கரம் தானாகவே சுழன்றது. இத்தனை பேரளும் ஒருங்கிணைந்தே இது கடவுள் வாழும் இடமாக போற்றப்படுகிறது.
Rajib Ghosh
பாராக்ளைடிங்
பாராக்ளைடிங் கீலாங்கிற்கு வருகை புரியும் பயணிகளின் பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாகும். பாராக்ளைடிங்கிற்கான வசதிகள் கீலாங்கின் நுழைவாயிலான ரோதங்பாஸில் கிடைக்கும். பாராக்ளைடிங்கிற்கு புதியவர்கள் கூட இங்கு ஒரு குறுகிய கால பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
Rafa Tecchio
தண்டி
ஹிமாச்சல பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கிராமமான தண்டி கீலாங்கில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2573 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கீலாங்கின் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரா மற்றும் பாகா நதிகள் இணையும் பகுதியின் மேலே அமைந்துள்ளது. வருவாய் மற்றும் தீர்வு பதிவேடுகளின் படி சண்டி என்ற பெயரின் கீழ் இவ்விடம் ராஜா ராணா சந்த் ராம் என்பவரால் நிறுவப்பட்டது. இவ்விடம் பல்வேறு புராணக் கதைகளோடு தொடர்புடையது. அவற்றில் ஒரு புராணக்கதையின்படி, புராணப்பாத்திரங்களான சந்திரக்கடவுளின் மகனான சந்திராவும், சூரியக்கடவுளின் மகளான பாகாவும் ஒருவரையொருவர் விரும்பினர். பழங்கதைப்படி அவர்கள் இருவரும் ஓடிப்போய் இவ்விடத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்கின்றது.
Ankit Solanki
கெமுர் மடாலயம்
ஹிமாச்சல பிரதேசத்தின் கீலாங்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமுர் மடாலயம் 700 ஆண்டுகள் பழமையான ஒரு மடாலயமாகும். கீலாங்கின் பாகா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கோம்பா, கெமுர் கிராமத்தின் மேலே 600 முதல் 700 கஜ உயரத்தில் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் பேய் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்துக்கடவுளான வராஹியின் வழிதோன்றல்களான மாரிச்சி மற்றும் வஜ்ரவராஹியின் 11 வது நூற்றாண்டுச்சிலை இந்தக்கோவிலின் முக்கிய ஈர்ப்பு அம்சமாகும்.
Ajith U
கர்டங் மடாலயம்
கர்டங் மடாலயமானது ஒரு பழமையான கோம்பாவாகும். கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் பாகா நதிக்கரையில் அமைந்துள்ள இது பெளத்த த்ருப்கா கக்யுட் பள்ளியின் கீழ் வரும் 900 ஆண்டு பழமையான மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் நாட்டின் மிகப்பெரிய புத்த மத நூலகத்தை கொண்டுள்ளது.
எப்படிச் செல்வது ?
கீலாங்கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் ஜோகிந்தர் நகரில் உள்ளது. 168 கிலோ மீட்டர் தொலைவில் புந்தர் என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது. மணாலியில் இருந்து பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கீலாங்கிற்கு இயக்கப்படுகின்றன.
wikipedia