திருமணத் தடையால் பாதிக்கப்படுதல், மன நலம் பாதிப்பு மற்றும் நியாபக மறதி, தொடர்ந்து நோய்களால் அவதிப்பட்டு வருவோர், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தொடர்ந்து ஏற்படும் பெருத்த நஷ்டம், புத்திர பாக்கியத் தடை உள்ளிட்டவற்றை குறிப்பிடும் சொல் பிரம்மஹத்தி தோஷம் எனப்படுகிறது. இத்தகைய தோஷத்தால் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் அவதியுற்று வருகிரீர்களா ?. கவலைய விடுங்க, உடனே இத்தலத்தில் அமைந்துள்ள மகாலிங்கசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி
சோழ நாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர் ஆகும். திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் சிவன் குடிகொண்ட தலமாகவும், அவரே சிவனின் மொத்த உருவமும் என கருதப்படுகிறது. இதனாலேயே இத்தலத்தில் உள்ள சிவபெருமான் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார். இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.
Krishna Kumar S
காசிக்கு நிகரான தலம்
வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் தலைமருது என்றும், தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் கடைமருது என்றும் வழங்கப்படும். இவை இரண்டுக்கும் இடையில் இருப்பதால் இது இடைமருது என பெயர் பெற்றது. மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் என இத்தலத்திற்கு இன்னும் பல்வேறு பெயர்கள் உண்டு. காசிக்கு நிகரான இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
Krishna Kumar S
தல வரலாறு
வரகுண பாண்டிய மன்னர் தன் குதிரையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குதிரை ஒரு அந்தகனை மிதித்துக் கொன்று விட்டது. இதனால் பாண்டிய மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அநேக நேரங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட மன்னர் மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டார். அப்போது ஒலித்த தேவகுரல், திருவிடைமருதூரில் உள்ள ஈசனை வழிபட அறிவுருத்தியது. மன்னரும் திருவிடைமருதூர் சிவ பெருமானை வழிபட்டு தன் தோஷத்தை நீக்கிக் கொண்டார்.
Ssriram mt
மனநோய் தீர்க்கும் மகாலிங்கம்
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். இங்குள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் குளிக்க வைத்து காலை, மாலை இருவேளையும் மகாலிங்கசுவாமியை வழிபடச் செய்வார்கள். தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
Krishna Kumar S
பரிகாரத் தலம்
திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டும்.
Ssriram mt
வழிபாடு
இந்தத் தலத்தில் உள்ள மூகாம்பிகை சன்நிதி சக்தி மிக்கதாகவும், இங்கு அமர்ந்து வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனதில் உள்ள துயரம் நீங்குவதோடு, கல்யாண வரம் கிடைக்கும். திருவிடைமருதூர் ஈசனை வணங்குவோருக்கு வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பணி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பிக்கை நிலவுகிறது.
Ssriram mt
நேர்த்திக்கடன்
வேண்டியவை நிறைவேறியதும் மூலவர் மற்றும் அம்பாளுக்கு வேட்டி, சேலை காணிக்கையாகப் படைத்து, நெய்வேத்தியம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. சிலர், வழக்கமான அபிஷேக பூஜைகள் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
Krishna Kumar S
எப்போது, எப்படிச் செல்வது ?
அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம் வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் பயணித்தாலும், கும்பகோணத்தில் இருந்து திருபுவனம் வழியாக 8 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம். காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செல்வது சிறந்தது.