நம் வாழ்நாளில் பலவற்றை அடைவோம். பலவற்றை இழப்போம். இது வாழ்க்கைச் சக்கர முறைகளில் பொதுவான ஒன்றுதான். செல்வம், பொருள், புகழ் என எதை இழந்தாலும் தன்னம்பிக்கை, திறமை கொண்டு மீட்டெப்போம். ஆனால், இவை அனைத்தையும் சேர்ப்பதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது, பதவி எனும் பொறுப்பு. தொழில் நிறுவனத்திலோ, குழுவிலோ தனக்கென ஒரு பதவி இருக்கும் போது தான் செல்வம், புகழ், மரியாதை அனைத்தையும் தேடிவரும். பதவி போனால், சகலமும் போய் விடும். இப்படி உங்களை இதுவரை காத்து வந்த பதவி பறிபோன நிலையில், அல்லது எதிர்காலத்தில் பதவி பறிபோகும் சூழ்நிலை ஏற்படுமாயின் இறைவனின் அருளுடன் எவ்வாறு அந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இழந்த பதவியை எப்படி மீட்டெடுக்க வேண்டும், இதற்காக எத்தலத்திற்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என காணலாம்.
எங்கே உள்ளது ?
விழுப்புரம் மாவட்டம், ஒழிந்தியாம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து குறிஞ்சிபாடி, தொரவி, சேதரபட்டு வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.
Adam Jones Adam63
கோவில் சிறப்பு
சிவ பெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 264-வது ஆகும். தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31-வது தலமாக உள்ளது. இத்தலத்தில் மூலவர் 108 ருத்திராட்சங்கள் இணைந்த பந்தலின் கீழ் சுயம்பு லிங்க வடிவிலி தோற்றமளிக்கிறார். தனிச் சன்னதியில் அம்பாள் பெரியநாயகி காட்சியளிக்கிறார்.
Paneer06
திருவிழா
மகா சிவராத்திரி, கார்த்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு அலங்காரங்களுடன் பிரார்த்தனையும், வைகாசி மாதம் 10 நாட்களுக்கு பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
Prathap90
நடைதிறப்பு
அருள்மிகு அரசலீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இருப்பினும் காலை நேரத்தில் மூலவருக்கும், இக்கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கும் நடைபெறும் பூஜையைக் காண பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.
Ve.Balamurali
வழிபாடு
பதவி இழந்தவர்கள், தொழிலில் ஆதிக்கமின்றி இருப்போர் இத்தலத்தில் உள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபடுவதன் மூலம் இழந்த பதவிகள் திரும்பி, பதவி உயர்வு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Sureshsaka
நேர்த்திக்கடன்
வேண்டிய காரியம் நிறைவேறியதும் அரசலீஸ்வரருக்கும் அம்பாளுக்கும் புதுஆடைகள் வழங்கி, அங்கபிரதட்சணம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
Jothi Balaji
தலஅமைப்பு
அரசலீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்தி கோஷ்ட சுவரில் காட்சியளிக்கிறார். கருவறைக்குப் பின் பகுதியில் மகாவிஷ்ணு மேற்கு நோக்கியவாறு உள்ளார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், பைரவர், நால்வர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
Krishna Kumar
கோவில் வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை சத்தியவிரதன் என்னும் மன்னன் ஆட்சி செய்துவந்த காலத்தில் இத்தலத்தில் இருந்த லிங்கம் மறைந்து விட்டது. சிவபெருமானின் மீது பக்திமிகுந்த அம்மன்னன் மற்றொரு சிவனின் கோவிலில் பூஜை செய்து வழிபட்டு வந்தார். ஒரு நாள் பூஜைக்கு மலர் பறிக்க தோட்டத்திற்குச் சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. மறுநாளும் தோட்டத்தில் மலர்கள் இல்லை. பின்பே மான் ஒன்று தோட்டத்தில் சிவ வழிபாட்டுக்காக இருந்த மலர்களை உண்டது தெரியவந்தது. கோபமடைந்த மன்னர் மானின் மீது அம்பு எய்தவாறு துரத்திக் கொண்டு செல்லவே அது அரசமர பொந்தில் நுழைந்து மறைந்தது. மன்னன் அரசமரத்தை நோக்கி அம்பு எய்தபோது அதில் இருந்து ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ச்சியுள்ளார். பின் அரசமர பொந்தில் பார்க்கையில் லிங்க வடிவில் சிவன் காட்சியளித்து மான் வடிவில் வந்தது தான்தான் என உணர்த்தினார். இன்றும் இத்தலத்தில் உள்ள லிங்கத்தின் தலையில் காயம்பட்டதற்கான அடையாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Ssriram mt
எப்படிச் செல்வது ?
விழுப்புரத்தில் இருந்து மன்னடிபெட் வழியாக 48.6 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலம் வழியாக 54.4 கிலோ மீட்டர் தொலைவிலும் ஒழிந்தியாம்பட்டுவில் அமைந்துள்ளது அரசலீஸ்வரர் கோவில். விழுப்புரம், பாண்டிச்சேரி, திண்டிவனம் என பிற பகுதிகளில் இருந்தும் இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.