ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரவர் கர்ம வினையே லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்களாகவும் அமர்ந்து, பெற்றோரையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், வாழ்வின் சுக துக்கங்களையும் தீர்மானிக்கின்றன. இப்படி கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறிந்து நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களில் சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தை எளிதாக குறைத்துக் முடியும் என நம்பப்படுகிறது. சரி வாருங்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில்
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். திருவாரூரில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
Nsmohan
அக்னீஸ்வரர் திருக்கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம். மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.
Ssriram mt
காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது, பிறந்த நட்சத்திரம் அன்றோ கட்டாயம் சென்று வழிபட வேண்டிய தலம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது இக்கோவில். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது தொன்நம்பிக்கை.
Arian Zwegers
பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்
காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோவிலாகும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு அருள்பாலிக்கிறார். இக்கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியமுடிகிறது. ரோஹிணி நட்சத்திரம் உடையோர் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்க இத்தலம் வந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வழிபட்டுச் செல்ல, அனைத்துவிதமான இடையூறுகளும் நீங்கி சுக வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
Ssriram mt
ஆதிநாராயண பெருமாள் கோவில்
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் எண்கள் பகுதியில் அமைந்துள்ளது ஆதிநாராயண பெருமாள் கோவில். இக்கோவில் மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய கோவில் ஆகும். மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் அவர்களின் பிரச்சினை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை. இந்த நட்சத்திரம் உடையோருக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும் ஆதிநாராயணப் பெருமாளை வழிபடுவது ஏற்றது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடைஉள்ளவர்கள், நாக தோஷம், குடும்பத்தில் தொடர் மரணம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இத்தலத்தில் வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
Destination8infinity
அபய வரதீஸ்வரர் ஆலயம்
சிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோவிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இத்தல சிவன் விளங்குவதால் இறைவன் அபயவர தீஸ்வரராக போற்றப்படுகிறார். மேலும், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். தஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள அபய வரதீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
அதிதீஸ்வரர் திருக்கோவில்
புனர்பூச நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோவில் அதிதீஸ்வரர் கோவில். இந்த தலத்தில் உள்ள சிவா சிவ பெருமான் அதிதீஸ்வரர் என்றும் அம்பாள் பெரியநாயகி என்றும் பிரகன் அழைக்கபடுகிறார்கள். இந்த தலத்தில் புனர்பூச நட்சத்திரகாரகள் அடிக்கடி வந்து இந்த இறைவனை வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் புனர்பூச நட்சத்திரத்தில் மளிகை பொருட்கள் வாங்கினால் விருத்தி உண்டாகும். அது மட்டுமின்றி புது வீடு வாங்கும் போதும், நிலம் உள்ளிட்ட சொத்து வாங்கும் போதும் புனர்பூச நட்சத்திர தினத்தன்று இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பலன் மேலும் கிடைக்கும். வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கிலோ மீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆட்டோ அல்லது, வாடகைக் கார் மூலம் பழைய வாணியம்பாடியில் உள்ள இந்த ஆலயத்தை சென்றடையலாம்.
Ssriram mt
அட்சய புரீஸ்வரர் திருக்கோவில்
பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனீஸ்வரனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது பூசநட்சத்திரத்தன்றோ, அட்சய திரிதியை தினத்திலோ வழிபட வேண்டிய திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் விளங்குளம் அட்சய புரீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் பூசநட்சத்திர தினம், அட்சய திரிதியை நாளில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு,இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் தொன்நம்பிக்கை.
Ernesto Perez
கற்கடேஸ்வரர் கோவில்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவியலூர் என்னும் பாடல் பெற்ற சிவதலத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவல் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. தற்போது நண்டாங்கோவில் என அழைக்கப்படம் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களில் இருந்து விடுபட இத்தல இறைவனை பிரார்த்னை செய்கின்றனர். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்கடேறுவரருக்கு நல்லெண்ணை மூலம் அபிஷேகம் செய்து வேண்டுக்கொள்வது வழக்கம்.
Ssriram mt
மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
மகாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம், கொல்லூர் மற்றும் தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் மட்டும் தான் மூகாம்பிகை சன்னிதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
பா.ஜம்புலிங்கம்
ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில்
புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது. இங்கேயே பூரம் நட்சத்திரத்திற்கான ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனது மூலஸ்தானத்திற்கு பின் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியன் தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுககு ஏற்படும் தோஷங்கள் நீங்க இறைவனை வழிபடுவது சிறந்தது. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மேலும், இத்தலத்தில் உள்ள பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதார் இது பூரம் நட்சத்திரத்திற்கு உரிய கோவிலாகும்.
மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில்
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில் உள்ள இடையாற்று மங்கலம், வாளாடி வழியில் மாங்கல்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
Lakshmi R.K.
கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில்
கும்பகோணத்தில் உள்ள திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கிருபா கூபாரேச்வரர் திருக்கோவிலை அடைய முடியும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பார்வதி பசுவாக மாறி இங்கு வந்து வழிபட்டதால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் அழைக்கப்படகிறது. கோவில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர். அஸ்தம் நட்சத்திரக்கார்கள் இங்கு வழிபடுவது வாழ்நாளை நீட்டிக்கவும், செல்வம் செழிப்பு மிக்கவராகவும் மாற்றும். கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவராக உள்ளார். அஸ்த நட்சத்திரம் உடையோர் கொழுக்கட்டை, வடை, லட்சு உள்ளிட்ட பிரசாதம் செய்து கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் வணங்கி வலம் வந்தால் பரிபூரண அருளைப் பெறலாம். இந்தக் கோவில் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் குத்தாலம் என்னும் பகுதியில் இருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
Saminathan Suresh
சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில்
சித்திரை நட்சத்திரத்திற்குரியவர்கள் வழிபட வேண்டிய தலம் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் இக்கோவில் அமைந்துள்ளது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர், சித்திரரத வல்லபபெருமாள் என்று அழைக்கப்படுகிறார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோவிலாக விளங்குகிறது. இத்தல பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோவிலுக்கு எதிரே குருபகவான், கரத்தாழ் வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தை ஏந்தியபடி இந்த பெருமாளை சுற்றி வருவது சிறப்பு.
temple
தாத்திரீஸ்வரர் திருக்கோவில்
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் தாத்திரீஸ்வரர் திருக்கோவில். திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை. சென்னை, வயலாநல்லூர் அடுத்துள்ள பட்டாபிராம் செல்லும் வழியில் திருணம் கிராமம், தெற்கு மாட வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
Richard Mortel
முத்துக்குமாரசாமி திருக்கோவில்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய முக்கிக் கோவில் முத்துக்குமாரசாமி ஆலயம். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் மூலவர் திருமலை முருகன் என்றும் திருமலை முத்துகுமாரசாமி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் திருமலை அம்மனுக்கான ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. "வி" என்றால் மேலான என்றும், "சாகம்" என்றால் ஜோ என்றும் பொருள்படுகிறது. விசாக நட்சத்திரம் விலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும இம்மலையில் படுவதால் விசாக சட்சத்திரம் உடையோர் ஆயுள் முழுவதும் சென்று வழிபட ஏற்ற தலமாக உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலை அடையலாம்.
Saminathan Suresh
மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையேனும் வழிபட வேண்டிய கோவில் மகாலட்சுமிபுரீஸ்வரர் ஆலயம். செல்வம் செழிக்கச் செய்யும் திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரரை வழிபட்டால் வாழ்நாள் சிறக்கும். காவிரியின் வடகரையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பாதையில் இக்கோவில் உள்ளது. அனுஷம் நட்சத்திரம் உடையோர் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியையில் தொடர்ந்து இங்கு வழிபட செல்வம் பெருகும் என்பது தல நம்பிக்கையாக உள்ளது.
Krishna Kumar
வரதராஜப்பெருமாள் ஆலயம்
கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க வரதராஜப்பெருமாள் ஆலய இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் பசுபதிகோவில் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
Ssriram mt
சிங்கீஸ்வரர் திருக்கோவில்
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் உள்ளது சிங்கீஸ்வரர் கோவில். இத்தலத்தில் வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர் சிவன் சன்னதியின் முன்னே உள்ளார். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் தங்களது பிறந்த தினத்தில் இத்தல அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட புகழ் அதிகரிக்கும். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தொலைவில், பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது.
Ssriram mt
ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில்
பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், பதவி உயர்வு பெறவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுவது வழக்கம். இந்தக் கோவில் மிகவும் பழமை யான, ஏறத்தாழ 2500 வருட பாரம் பர்யம் கொண்ட கோவில் ஆகும். ஆகாய வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், கட்டிடங்களுக்கு வாழ்வு தருகின்ற வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரத்து அன்று இத்தலத்து இறைவன் ஆகாச புரீஸ்வரரிடம் வந்து பூஜை செய்து அவரது ஆசி பெற்று செல்வதால் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக விளங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயத்து அதிபதியாக இவர் விளங்கு வதால் ஆகாச புரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடுவெளி என்ற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவிலாக, சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்கொடி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் என்ற சுந்தரேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. ஐந்து அடுக்கு உள்ள பெரிய கோபுரத்துடன் இந்த கோவில் அழகான ஒரு பழமையான கோவிலாகும். ஆடம் என்றால் ஆதியில் தோன்றியது, முதலில் உருவானது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் முதல் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் உள்ளது. மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம் என்பதுதான் இந்த இடத்தின் மகிமை. ஆகவேதான், முதல் நட்சத்திர தேவியான பூங்குடியாளை மற்ற 26 நட்சத்திர தேவியர்களும் பாத பூஜை செய்வதாக கூறப்படுகிறது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஓக்கூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்குடி என்னும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
Saminathan Suresh
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில்
மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய ஆலயங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இங்கு இரண்டு பெருமாள் கோவில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் என கேட்டு செல்லவும்.
Manojkumar03
பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்
பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், மனைவியுடன் அதிகார நந்தி, இரட்டை பைரவர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் சன்தியில் அருள்பாலிக்கின்றனர். பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளிலோ அல்லது ஆவணி அவிட்டத்தன்றோ இத்தலத்திற்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது இத்தல நம்பிக்கை. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் சாலையில் கொருக்கை என்ற இடத்தில் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
பா.ஜம்புலிங்கம்
அக்னிபுரீஸ்வரர் ஆலயம்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம். இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாவவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.
Ssriram mt
திருவானேஷ்வர் திருக்கோவில்
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தில் உள்ள திருவானேஷ்வர் கோவில்.
இந்த ஆலயம் மிகவும் பழமையான திருக்கோவில். இத்தலம் பற்றிய புராண வரலாறு மஹாபாரதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களாக, மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்து அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் படைப்புக்களும், கோவிலில் உள்ள நைவேத்தியங்களையும் பகல் 12 மணி அளவில் அன்னதானம் செய்யப்படுகிறது. திருவையாறில் இருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் ரங்கநாதபுரம் என்ற பகுதியில் இத்திருத்தலம் உள்ளது.
PJeganathan
சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில்
தேவ சிற்பி விஸ்வ கர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ர லட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நட்சத்திரநாளில் அரூப வடிவில் இக்கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டதாக நம்பிகை நிலவுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை அல்லது புதுக்கோட்டை சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
Ramsp35 Ramanathan.SP
காருகுடி கயிலாயநாதர் ஆலயம்
நட்சத்திரங்கள் மொத்தம் 27-ல் நாம் இதுவரையிலும் 26 நட்சத்திரங்களுககான கோவில்களை பார்த்துவிட்டோம். இதில், இறுதியாக வருவது 27-வது நட்சத்திரமான ரேவதி. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான கோவில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில். சந்திர பகவான் ரேவதி நட்சத்திர தேவியை திருமணம் முடித்தார். அவர்கள் இருவரும் சிவனையும், பார்வதியையும் ஒரு சேர தரிசனம் செய்ய விரும்பினர். அதற்காக அம்பிகையிடம் வேண்டினர். அன்னை மனமிரங்கி, சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சி தந்த தலம் இது. அதேச்சமயம் சந்திர பகவானுடன் 27 நட்சத்திர தேவியர்களும் இருந்தனராம். ஆகவே தான், மற்ற பரிகாரக் கோவில்கள் அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு மட்டுமே உரிய கோவிலாக இருக்கும். ஆனால் இந்த திருக்கோவில் மட்டுமே அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் ஏற்ற பரிகாரத் தலமாக உள்ளது. திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.
பா.ஜம்புலிங்கம்