கோயம்புத்தூர் மக்களுக்கு விடுமுறை தின சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவதும், எளிதில் அடையக் கூடியதுமான கேரளா தான். ஆனால், தற்போதைய சூழல் கேரளத்தை தனித்துவிட்ட தீவு போல மாற்றியுள்ளது. அப்ப வர வாரவிடுமுறைக்கு எங்கதான் செல்வது என ஏங்கி நிற்கும் நம்ம ஊர் பயணிகளுக்காகவே இந்தப் பதிவு. கவலைய விடுங்க பாஸ். கேரளா எல்லைப் பகுதிகளில் இருக்கவே இருக்கு சுற்றுலாவுக்கான சூப்பர் ரோடுங்க. அப்புறம் என்ன, பைக்கோ, காரோ எடுத்துட்டு ஒரு ரைடு போய்ட்டு வாங்களேன்.
முள்ளி
கேரளாவின் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக முள்ளி இல்லாவிட்டாலும், இயற்கையை ரசித்தபடியே சாலையில் பயணிக்க விரும்புவோருக்க ஏற்ற சாலைதான் ஆனைகட்டி, முள்ளி, பிக்கெட்டி மலைப் பாதை. எந்த நேரமும், சலசலவெசன ஓசையெழுப்பி ஓடும் ஆறுகளும், மலை முகட்டில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்க வாசல் தான். என்ன இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?
Kamal Selveraj
காந்திபுரம் - முள்ளி
கோயம்புத்தூரில் இருந்து வெளியூர் செல்வதாக இருந்தாலே காந்திபுரம் பேருந்து நிலையம் தான் முதலிடம். அதனால நம்ம பயணத்தையும் இங்க இருந்தே துவங்குவோம். காந்திபுரத்தில் இருந்து காலை 8 மணியளவிலேயே பயணத்தை தொடங்கினோம் என்றால் ஆனைகட்டி வழியாக அடுத்த 60 கிலோ மீட்டரில் கேரள எல்லையான முள்ளியை அடைந்து விடலாம்.
Ambigapathy
எழில் கொஞ்சும் முள்ளி
மேலே சொன்னது போல கேரள மாநிலம் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து தனித்த தீவுபோலத்தான் உள்ளது. ஆனால், முள்ளி பாதிப்பில் இருந்து சற்று ஒதுங்கி சில்லென்ற காலநிலையுடன் இன்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுக் கொண்டே தான் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் சரிக்கி வரும் மேகக் கூட்டங்கள், தேகத்தை உரசிச் செல்லும் பணிக் காற்று இடத்தை விட்டு நகர விடாது என்று தான் சொல்ல வேண்டும்.
Kamal Selveraj
அத்திக்கடவு பாலம்
ஆனைகட்டியில் இருந்து முள்ளி செல்லும் சாலையில் பசுமைக் காடுகளை மட்டுமல்ல கூடவே நம்ம ஊர் தாகத்தை தீர்க்கும் அத்திக்கடவு ஆற்றையும் கண்டு தரிக்க முடியும். சோலையூர், கோட்டத்தராவைக் கடந்தால் அடுத்து நம் கண்களுக்கு விருந்தளிப்பதே அத்திக்கடவு நீரோடை தான். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் மழையில் அடித்துவரப்படும் நீர் தங்கத்தை உருக்கி ஊற்றியது போல பிரமிப்பை ஏற்படுத்தும்.
Kamal Selveraj
முள்ளி - ஊட்டி
முள்ளியில் சிறிது நேரம் இயற்கை எழிற்காட்சிகளை புகைப்படமெல்லாம் எடுத்துவிட்டு ஓய்வை முடித்தபின் பயணத்தை தொடந்தீர்கள் என்றால் நாம் அடுத்து சென்றடைவது ஊட்டியாக இருக்கும். முள்ளி- பிக்கெட்டி சாலை வழியாக சுமார் 61 கிலோ மீட்டரில் ஊட்டியை அடைந்து விடலாம். பெரும்பாலும், இச்சாலை வளைந்து நெளிந்து இருப்பதாலும், பருவ மழையினால் சற்று கரடுமுரடாக இருப்பதாலும் பைக்கோ, காரோ..! அனுபவம் வாய்ந்த நபர்கள் ஓட்டிச் செல்வது நல்லது.
Kamal Selveraj
43 ஊசி வளைவு முனைகள்
வால்பாறைக்கு அடுத்தபடியாக அதிக கொண்டை ஊசி வளைவுகளை இச்சாலை சற்று சவாலான ஒன்று தான். அவ்வப்போது யானைகளைக் கூட இச்சாலையில் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கேத்தி காட்சி முனைக்குப் பின் சாலை கொஞ்சம் சுமார்தான். ஒற்றை வழி மலைப்பாதை போல காணப்படும் அங்கே மலைப் பாதையில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இன்றி தோன்றும்.
Kamal Selveraj
கேத்தி பள்ளத்தாக்கு
மஞ்சூர்- கேத்தி- முள்ளி சாலையின் வலதுபுறம் மலைச் சரிவில் ஊற்றிய பால் தேங்கி நின்றதைப் போல வரும் கேத்தி அணையும், காட்சி முனையும் நிச்சயம் உங்களது மனதைக் கொள்ளை கொள்ளும். மேலும், இது இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றதுதான் கேத்தி பள்ளத்தாக்கு. குன்னூர் சாலையில் பசுமைக் காடாய் விரிந்து கிடக்கும் இந்தப் பள்ளத்தாக்கின் ஊடாக அமைந்துள்ள சிறுமலைக் கிராமங்கள் கூட நகரவாசிகளுக்கு சொர்க்கபுரிதான்.
Kamal Selveraj
குந்தா அணை
கேத்தியில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் வரும் இரண்டாவது அணைதான் குந்தா. எமரால்டு அணையிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையை வந்தடைகிறது. இங்கு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின் இங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் மாயாறாக உருவாகி, முதுமலை வழியாக பவானி சாகர் அணையைச் சென்றடைகிறது.
Kamal Selveraj
ஊட்டி
கோயம்புத்தூரில் இருந்த ஊட்டி செல்வோருக்கு இந்த மலை சுற்றுலா மாவட்டத்தைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஊட்டி கோவை மக்களுக்கு அத்துபடி தான். இருந்தாலும், கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கன மழை ஊட்டி முழுவதுதையும் மேலும் குளிரூட்டப்பட்ட பணிப் பிரதேசம் போல காட்சியளிக்க வைத்துள்ளது. உங்களது பயணத்தில் ஓய்வை விரும்புவோர் ஓய்வெடுக்க ஏற்ற ஏராளமான பூங்காக்கள், படகு ஏரிகள் இங்கே உள்ளன. நேரம் இருப்பின் இவற்றை சுற்றிப் பார்க்கலாம்.
San95660
ஊட்டி - கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது சிறிய நகர் கோத்தகிரி. உதகையிலிருந்து சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது ஊட்டிக்கு நிகராக பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள அழகிய தேயிலை தோட்டங்களும் வனப்பகுதிகளும் இயற்கை ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்குள்ள புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை வாகன ரைடுக்கு ஏற்ற சூப்பர் ரோடுகளாகும்.
rajaraman sundaram
கோத்தகிரி - காந்திபுரம்
கோத்தகிரியில் நேரத்திற்கு ஏற்ப சுற்றுலாவை முடித்து விட்டு இருள் சூழ்வதற்குள் பயணத்தை துவங்கினீர்கள் என்றால் மேட்டுப்பாளையம் வழியாக 65 கிலோ மீட்டர் பயணித்து காந்திபுரத்தை அடைந்து விடலாம். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரையில் இருபுறங்களிலும் உள்ள தேயிலைக் காடுகளும், பவானிசாகர் காட்சி முனையும் கண்டு ரசித்தபடியே ஊர் திருப்பலாம்.
Jaseem Hamza