இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம்.
அதேபோல கோயில் என்றால் தஞ்சை பெரிய கோயில், திருப்பதி, மீனாட்சியம்மன் கோயில் போன்ற கோயில்கள்தான் எடுத்த எடுப்பில் நினைவுக்கு வரும்.
ஆனால் இங்கே நாம் சில புகழ்பெறாத இடங்கள் அல்லது அதிகம் கேள்விப்படாத இடங்களை பற்றி அலசுவோம்.
இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு புதிய கோயிலின் பெயரையோ அல்லது ஒரு புதிய மலைப்பிரதேசத்தின் பெயரையோ தெரிந்துகொள்வீர்கள்!
செயிண்ட் மேரி தீவு கடற்கரை
கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.
படம் : Man On Mission
வரந்தா மலைத்தொடர்கள்
புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். இந்த பகுதி முழுக்க அடர்த்தியும் பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று தாராளமாக இயற்கை அன்னை எல்லையில்லா வளங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.
பேலம் குகைகள்
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகைகள். நீங்கள் இங்கு முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் தனியாக எங்காவது சுற்றித் திரிந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உங்களை எங்கென்று தேடுவது?!
ஹரிஷ்சந்திரகட் கோட்டை
மகாராஷ்டிராவின் தானே மற்றும் புனே நகரங்களின் எல்லையில் ஹரிஷ்சந்திரகட் கோட்டை அமைந்திருக்கிறது. 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டைச் சிகரத்திலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17
இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17 கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் ஒரு பக்கம் சௌபர்னிகா நதியும், மறுபக்கம் மரவந்தே கடர்கரையும் அமைந்திருக்க அவற்றின் இடையே நீண்டு செல்கிறது இந்த நெடுஞ்சாலை. இதே போன்றதொரு சாலையை நீங்கள் இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது.
ஹாசனாம்பா கோயில்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது. புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.
மாஜூலி தீவு
அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. இந்தத் தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.
படம் : Kalai Sukanta
சண்டிகரின் ராக் கார்டன்
40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
படம் : Vinay8861
பிரமிட் வேல்லி
பெங்களூர் எல்லையில் உள்ள ஹாரோஹள்ளி என்ற இடத்தில் பிரமிட் வேல்லி அமைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் மைத்ரேய-புத்த விஷ்வாலயம் என்றாலும் பரவலாக பிரமிட் வேல்லி என்ற பெயரிலேயே அறியப்படுகிறது. இந்த பிரமிடினுள் ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பதோடு, உலகின் மிகப்பெரிய தியான பிரமிட் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. எனவே பெங்களூர் தரும் அலுப்பான வாழ்க்கை முறையிலிருந்து மாற்றம் பெற விரும்புபவர்கள் தாரளமாக இங்கு வரலாம். இந்த பிரமிட் வேல்லி செல்வதற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து ஹாரோஹள்ளி அல்லது கனகபுரா போகும் பேருந்தில் ஏற வேண்டும். பின்னர் ஹாரோஹள்ளி நிறுத்தத்தில் இறங்கி 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரமிட் வேல்லியை ஆட்டோ மூலம் அடையலாம்.
நௌகுசியாடல்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடலில் உள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.
படம் : Dr Satendra