கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.
தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதோடு கேரளாவில் வாகமன், பொன்முடி, பீர்மேடு என்று எக்கச்சக்கமான மலைவாசஸ்தலங்கள் உங்கள் வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
ராமக்கால்மேடு
ராமக்கால்மேடு எனும் பெயருக்கு ராமபிரானின் பாதம் பட்ட மண் என்பது பொருளாகும். அதாவது சீதாதேவியை தேடி ராமர் இப்பகுதிக்கு வந்தபோது இந்த மலையில் அவர் காலடி பட்டதால் இம்மலைப்பகுதி ராமக்கால்மேடு என்ற பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம்.
நெல்லியம்பதி
பாலக்காடு நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது நெல்லியம்பதி மலைவாசஸ்தலம். எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களும், காப்பித் தோட்டங்களும் சூழ்ந்து காணப்படும் நெல்லியம்பதி ஸ்தலத்தை அடைய நாம் எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை கடந்துசெல்ல வேண்டும்.
பீர்மேடு
பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. எனவே நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்த்து ரசிக்கலாம். இவைதவிர பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம். இந்த மலைவாசஸ்தலம் கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
வாகமண்
வாகமண் மலைவாசஸ்தலம் கோட்டயத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து' என்று வாகமண் குறிப்பிடப்படுகிறதென்றால் அதன் அழகு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 அழகு பிரதேசங்களில் வாகமணையும் சேர்த்து ‘நேஷனல் ஜியாகிரபிக் டிராவலர்' பட்டியலிட்டுள்ளது.
பொன்முடி
பொன்முடி மலைவாசஸ்தலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. பொன்முடி மலைவாசஸ்தலத்தில் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று பயணிகள் பார்த்து ரசிக்க எண்ணற்ற கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் கோல்டன் வேல்லி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம் போன்றவை முக்கியமானவை.
தேவிகுளம்
தேவிகுளம் களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணாரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.
தேன்மலா
தேன்மலா மலைவாசஸ்தலத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை விளங்குகிறது. மேலும் அருகிலேயே அமைந்துள்ள பாலருவி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலம் தேனிலவு தம்பதிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. அதோடு பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன. தேன்மலா திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
ராணிபுரம்
காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராணிபுரம் மலைவாசஸ்தலத்தில் அருமையான 2 டிரெக்கிங் பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் அமைதியும், அடர்த்தியும் கொண்ட அழகான பசுமை காடுகளால் சூழப்பட்டுள்ளன. இங்கு விதவிதமான பட்டாம்பூச்சிகளுடன், எண்ணற்ற பறவைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு கேரள வனத்துறையால் வனவிலங்கு சரணாலமாக மாற்றப்பட்டுள்ள ராணிபுரம் காடுகளில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்களையும் பார்க்க முடியும்.
லக்கிடி
வயநாடு மாவட்டத்தின் நுழைவாயிலாக கருததப்படும் லக்கிடி மலைவாசஸ்தலம் கோழிக்கோடு நகரத்திலிருந்து 111 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. உலகிலேயே அதிகளவில் மழைபெய்யும் 2-வது நகரமாக லக்கிடி திகழ்கிறது. இப்பகுதியில் செயின் மரம், பூக்கோட் லேக் போன்ற சுற்றுலாப் பகுதிகள் கண்டிப்பாக பார்க்கவேண்டியவை.