வாகமன், கேரளா மாநிலத்தில் கோட்டயம் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம். கடல் மட்டத்தில் இருந்து 1,100 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் தற்போது கேரளாவின் மிகவும் விரும்பப்படும் மலைவாசஸ்தளங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
குளுமையான கால நிலை, மலையேற்றம், பாறை ஏற்றம் மற்றும் பாராக்ளிடிங் செய்ய தகுந்த புவியமைப்பு, தங்கல் பாறா, வாகமண் ஏரி, சூசைட் பாயிண்ட், வாகமண் அருவி போன்ற அற்புதமான சுற்றுலாத்தலங்கள் என நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றான வாகமனை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Photo: Bibin C.Alex - Bibinca
எந்த தொந்தரவும் இல்லாமல் வர்த்தகத்தனங்கள் இன்றி அமைதியாக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் அப்படி ஒரு இடமுமே இல்லையே என நினைப்பவரானால் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இந்த வாகமன் தான். இயற்கை காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பசுமை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், பைன் மரக்காடுகள், அருவிகள் என இங்கே ஒரு இயற்கை அழகுப்புதையலே இருக்கிறது.
வாகமனில் ட்ரெக்கிங்:
Photo: Madhu Kannan
தென் இந்தியாவில் ட்ரெக்கிங் செய்ய அற்புதமான இடங்களில் வாகமனும் ஒன்றாகும். வித விதமான வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களும், ஆர்கிட் மலர்தாவரங்களும், மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளும் நிறைந்திருக்கும் மலைப்பாதை வழியே ட்ரெக்கிங் செல்வதென்பது இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரவசம் கலந்த மகிழ்ச்சியளிக்கும் ஓரனுபவமாக இருக்கும். ட்ரெக்கிங் பாதையில் குறுக்கிடும் சின்ன சின்ன அருவிகளில் சுவையான நீர் அருந்திவிட்டு மலையேற்றத்தை தொடரலாம்.
குரிசுமலா:
Photo: Vanischenu
குரிசுமலா என்றால் மலையாளத்தில் புனித சிலுவை மலை என்று பொருள்படுகிறது. வாகமன் நகரமையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் இம்மலை கத்தோலிக்க மட்டும் நஸ்ரனி கிருத்துவ மக்களின் புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மலையில் இந்திய-சுவிட்சர்லாந்து நாடுகள் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட பால் பண்ணையும் உள்ளது. ட்ரெக்கிங் மற்றும் பாறை ஏற்றம் செய்ய ஏற்ற இடமாகவும் உள்ளது. வாகமனில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் இந்த குரிசுமலாவும் ஒன்று.
பாராக்ளிடிங்:
Photo: Karthik Chandrasekariah
இந்தியாவில் பிரபலமாகி வரும் சாகச விளையாட்டுகளில் ஒன்றான பாரக்ளிடிங் கேரளாவில் வாகமனில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாராக்ளிடிங் செய்வதற்கு ஏற்ற புவியமைப்பும், பருவநிலையும் இங்கே இருப்பதால் இங்கிருக்கும் 'அம்ருதமேடு' என்ற இடத்தில் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும் பாராக்ளிடிங் களைகட்டுகிறது. பறவை போல வானில் பறந்தபடி வாகமனின் இயற்கை அழகை ரசிப்பது பேரானந்தமாக இருக்கும்.
சூசைட் பாயிண்ட்:
Photo: Vanischenu
வாகமனில் இருக்கும் 'V' வடிவிலான சூசைட் பாயிண்ட் மற்ற மலைவாசஸ்தளங்களில் நாம் பார்ப்பதை விட மிகவும் அபயாகரமானது. கடுமையான ட்ரெக்கிங் செய்த பிறகே அடையமுடியும் இந்த இடத்தின் மேல் இருந்து பார்க்கும் போது உயிரை உறையவைக்கும் பயம் நமக்கு தோன்றும்.
எங்கு தங்குவது?
வாகமனில் நாம் தங்குவதற்கு ஏற்ற சில நல்ல ஹோட்டல்கள் உண்டு. அவற்றை தெரிந்து கொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்குங்கள்.