உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத வானுயர்ந்த, அதி நுண்ணிய வேலைப்பாடுகள் நிரம்பிய கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதுபோல இன்னும் பல சிறப்புக்களுக்குரிய இந்திய நாட்டில் தான் உலகின் மிகப்பழமையான நகரம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?.
இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் இந்த நகரம் தான் கோடானகோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. வாருங்கள் இந்த புனித நகரத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் .
வாரணாசி :
உலகின் மிகப்பழமையான நாகரீகங்கள் தோன்றிய இடங்களான கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பழமையான நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது.
பல பெயர்கள் :
கங்கை கரையில் அமைந்திருக்கும் இந்த நகரத்திற்கு வாரணாசி, காசி, பெனாரஸ், காசிகா, அவிமுக்தா, ஆனந்தவனா, ருத்ரவாஷா என பல பெயர்கள் உண்டு.
Photo: Flickr
எப்படி இந்த பெயர் வந்தது :
வருணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகள் இந்த நகரின் ஊடாக பாய்வதால் தான் வாராணசி என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. பழமையான இந்திய வேதமான ரிக் வேதத்தில் 'காசி' என்றே இந்நகரம் விளிக்கப்படுகிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது.
இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும்.
Photo: Flickr
சிறப்பு பெயர்கள் :
மேலும் இந்திய நாட்டில் உதித்த மதங்களான இந்து வாழ்க்கை முறை, ஜைன மதம், பௌத்தம் போன்றவற்றின் புனித நகரமாக இது இருப்பதால் 'இந்தியாவின் புனித நகரம்','இந்தியாவின் ஆன்மீக தலைநகரம்' போன்ற புனைப்பெயர்களாலும் வாரணாசி அறியப்படுகிறது.
Photo:wonker
எங்கே அமைந்திருக்கிறது ? :
காசி நகரமானது வட இந்தியாவில் உள்ள உத்திர பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இம்மாநிலத்தின் தலைநகரான லக்னோ காசியில் இருந்து 320 கி.மீ தொலைவில் இருக்கிறது. தென் இந்தியாவில் வசிப்பவர்கள் நேராக டெல்லி சென்று அங்கிருந்து ரயில் மூலம் காசியை அடையலாம். இந்நகருக்கு எப்படி சென்றடைவது என்பது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Photo:Sam Hawley
வரலாற்று சான்றுகள் :
காசியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகளின்படி கி.மு 11 அல்லது கி.மு 12ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு வேத அறிஞர்கள் மற்றும் முனிவர்கள் வசித்திருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது. அதேசமயம் அதர்வண வேதத்தில் இந்த நகரில் முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் மட்டுமில்லாமல் பூர்வகுடி மக்களும் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
Photo:Lyle Vincent
ஜைன மத தொடர்பு :
ஹிந்துக்களின் புனித நகரமாக மட்டுமே அறியப்படும் காசி, ஜைன மதத்தவர்களுக்கும் புனித நகரம் என்பது பலருக்கு வியப்பை தரலாம். ஜைன மதத்தின் புனித குருவாக சொல்லப்படுபவர் தீர்த்தங்கரர் என அழைக்கப்படுவார். அப்படி ஜைன மதத்தின் 23ஆவது தீர்த்தங்கரரும், மகாவீரருக்கு முன் ஜைன மதத்தின் குருவாக திகழ்ந்தவருமான பரஸ்வநாதர் பிறந்த இடம் காசி ஆகும்.
இதன் காரணமாகவே ஜைன வாழ்க்கை முறையை பின்பற்றும் எவரும் வாழ்கையில் கட்டாயம் ஒருமுறையேனும் காசிக்கு வருகை தருகின்றனர்.
Photo: Flickr
காசி விஸ்வநாதர் கோயில் :
காசி ஹிந்துக்களின் புனித நகரமாக கருதப்பட முக்கிய காரணம் இந்நகரத்தின் ஊடாக பாயும் கங்கை நதியும், இங்கே அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலும் தான். கடவுளாக அல்லாமல் இந்து வேதங்களின் படி ஆதி முனிவரான சிவ பெருமான் வாழ்வுக்கு முக்தியை தரும் விஸ்வநாதராக இங்கே வீற்றிருக்கிறார்.
காசி விஸ்வநாதர் கோயில் :
காசியின் மிக முக்கிய கோயிலாக இருக்கும் இந்த காசி விஸ்வநாதர் கோயிலானது இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மை கோயிலாக சொல்லப்படுகிறது. இந்த நகரை போன்றே இந்த கோயிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும்.
Photo:Sergio Carbajo
காசி விஸ்வநாதர் கோயில் :
வரலாற்று காலம் முழுவதும் அன்னியர் படையெடுப்புக்கு இந்த காசி நகரம் ஆளானதால் காசியில் இருந்த எண்ணற்ற கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. கடைசியாக 16-ஆம் நூற்றாண்டில் முகலாய வம்சத்தை சேர்ந்த இஸ்லாமிய மன்னனான அவுரங்கசீபால் இந்த விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அது இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் கோயிலானது 1780ஆம் ஆண்டு பழைய கோயில் இருந்த இடத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டிருக்கிறது.
முக்தியடையும் இடம் :
இந்த புனித பூமியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிடஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர்.
இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். அப்படி இறப்பவர்களின் பூத உடல் கங்கைக்கரையில் எரிக்கப்படுகிறது.
படித்துறைகள் :
கோயில்களுக்கு அடுத்தபடியாக காசியில் இருக்கும் முக்கிய பகுதியென்றால் அது கங்கை கரைகளில் இருக்கும் படித்துறைகள் தான். இந்த இடத்தில் தான் மத சடங்குகள் நடக்கின்றன, பூஜைகள் செய்யப்படுகின்றன மற்றும் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. காசியில் இருக்கும் முக்கியமான படித்துறைகள் பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தஸ்வமேத படித்துரை :
காசியில் இருக்கும் மிக முக்கிய படித்துரையாக சொல்லப்படுவது காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் தஸ்வமேத படித்துரைதான். இந்த படித்துரையை பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன.
அதாவது சிவ பெருமானை வரவேற்பதற்காக பிரம்ம தேவனால் கட்டப்பட்டது என்றும் இன்னொரு கதையில் இந்த இடத்தில் தான் பிரம்ம தேவன் 10 (தச) குதிரைகளை அஸ்வமேத யாகத்தில் பலிகொடுத்ததாகவும் அதனாலேயே இந்த பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தஸ்வமேத படித்துரை :
இந்த படைத்துரையில் மாலை நேரத்தில் நடக்கும் கங்கா ஆரத்தி பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. வேறு எந்த காரணத்திற்காக இல்ல விட்டாலும் பரவசமூட்டும் இந்த காட்சியை பார்க்கவாவது காசிக்கு ஒருமுறை வரவேண்டும்.
மணிகர்ணிகா படித்துரை :
தஸ்வமேத படித்துரைக்கு அடுத்த படியாக காசியில் இருக்கும் முக்கியமான படித்துரை மணிகர்ணிகா படித்துரையாகும். இங்கே தான் காசியில் இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இந்த இடத்தை 'நான் கடவுள்' படத்தில் விரிவாக படம்பிடித்திருப்பார்கள்.
காசியில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் :
காசிக்கு சென்றால் நாம் கண்டிப்பாக இரண்டு இடங்களை சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.அவை தஸ்வமேத படித்துரைக்கு அருகில் இருக்கும் ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் அந்த காலத்தில் இந்தியர்கள் அறிவியலில் எவ்வளவு முன்னேறி இண்டுந்தார்கள் என்பதற்கு சான்றாகும். அதேபோல காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டைக்கும் செல்லுங்கள். வரலாற்று புதையல் நிரம்பிய பொக்கிஷம் நிரம்பிய அற்புதம் அது.
எப்படி அடைவது ?:
பழமை மிக்க இந்த காசி நகரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.