தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்றால் மிகையாகாது. முற்கால சோழர்களின் ஆட்சியும், அவர்களது பல நினைவுச் சின்னங்களும் இன்றும் தமிழகத்தில், பல அடையாளங்களாக வீற்றுள்ளன. இவர்களது கால வரலாறு குறித்த தகவல்கள் அனைத்தும் அறிய உதவும் சான்றுகளாக பல கல்வெட்டுகள் இன்றும் கண்டறியப்பட்டு வருகிறது. சோழர்காலத்து கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் இவர்கள் குறித்த சான்றுகளை கல்வெட்டுகளாக நாம் காண முடிகிறது. அப்படி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய கோவிலின் சிறப்பு குறித்தும், அங்கே மறைந்து கிடக்கும் மர்மப் புதையல் குறித்தும் அறிந்துகொள்வோம்.
விரிஞ்சிபுரம்
வேலுர் மாவட்டத்தில் மாநகருக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப் பழைய திருத்தலத்தைக் கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கபந்தீஸ்வரர் கோவில்
விரிஞ்சிபுரத்திற்கே தொண்மைமிகு அடையாளமாக திகழ்வது இங்கு அமைந்துள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தான். இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை அம்மையாரும், மார்க்கபந்தீருவரராச சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். நாட்டில் சிறந்து விளங்கும் 1008 சிவ தலங்களில், அனைத்து அம்சங்களையும் பெற்ற சிறப்புத் தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில்.
ஒரே உடலில் 1008 லிங்கம்!
ஒரு பெரிய லிங்கத்தின் உடலில் 1008 சிவலிங்கம் இந்தத் திருத்தலத்தில் அமைந்திருப்பது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மூலவர் இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகவும் சற்று சாய்ந்த கோனத்திலும் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக கதைகளும் உண்டு. மேலும், இச்சிலைகளின் வடிவமைப்பும், கல்வெட்டுக் குறிப்புகளும் கோவிலின் உள்ளே சோழர்களால் மறைக்கப்பட்ட புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது.
விரிஞ்சிபுகழ் பாடும் கல்வெட்டுகள்
விரிஞ்சிபுரத்தைக் குறித்து 18 கல்வெட்டுகள் தென்னிந்தியக் கல்வெட்டுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விஜய நகர மன்னர்கள், பல்லவ மன்னர், சோழ மன்னர், சம்புவராய மன்னர் உள்ளிட்டோர் இத்தல இறைவனை வழிபட்டது குறித்த குறிப்பு கல்வெட்டுகளில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. விரிஞ்சிபுரத்தின் தொன்மையையும், சிறப்பையும் இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
பிரம்மாவிற்காக தலைகுனிந்த சிவன்
திருவண்ணாமலையில் ஜோதியாய் அருளிய சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளிய பெருமை இத்தலத்திற்கு உண்டு.
Adbh266
கலைநயக் கட்டிடம்
மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இக்கோவிலின் வடக்கு கோபுர வாயில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திறந்த நிலையில் இருக்கும். இதன் வழியாகத்தான் தேவர்கள் அன்றாடம் வந்து இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். கோவிலின் ஒவ்வொரு சுவர்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதை காணலாம்.
தீர்த்தகுள மகிமை
இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ssriram mt
எப்படிச் செல்லலாம் ?
சென்னை, திருச்சி, திருவண்ணாமலை என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேலூர் சாலைப் போக்குவரத்தில் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் பயணித்து அரசமரம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் பயணித்தால் பாலாற்றுக் கரையோரம் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.
Ssriram mt