உலகில் அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனையும் கொண்டது நந்தி என்கிறார்கள். சிவனைக் காண்பதற்கு முன் நந்தியை நாம் கண்டே ஆகவேண்டும். எல்லா சிவன்கோவிலிலும் இதுதான் நியதி. இந்த முறையை முதன்முதலாகக் கொண்டு வந்தது இந்த இடம்தான் என்கிறார்கள் பெரியவர்கள். அது கோயம்புத்தூர் அருகிலுள்ள இந்த சிவன்கோவில் தான்.. வாங்க. இந்த கோவிலுக்கு செல்வது எப்படி, சென்றால் என்ன கிடைக்கும். அதிகார நந்தி என்றால் என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.
மகிழ்ச்சியை வாரி வழங்கும் நந்தி
நந்தி என்றால் ஆனந்தம்.மகிழ்ச்சி என்று பொருள். இவரை வணங்கியபின்னர்தான் சிவனையே நாம் காணமுடியும். அப்படிபட்ட நந்தியின் அனுமதி கிடைத்தால் நாம் சிவனை அடைந்து வேண்டுதலை முன் வைக்கலாம். அது உலக வழக்கம். ஆனால், கோயம்புத்தூர் அருகிலுள்ள இந்த இடத்தில் இருக்கும் கோவிலின் நந்தியிடம் நீங்கள் நேரடியாகவே கோரிக்கைகளை வைக்கலாம். அவரே அருள் தருகிறார். ஆம்... இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்தாலே நீங்கள் மனதில் நினைத்தது கூடிய விரைவில் நடக்குமாம். இதை பக்தர்களே சொல்கின்றனர். அந்த கோவில் எங்க இருக்கு தெரியுமா?
எங்கே இருக்கு அந்த கோவில்
விருந்தீஸ்வரர் கோவில். அதிகார நந்தியை முன்னிறுத்தி சிவபெருமான் வீற்றிருக்கும் தளம் இதுவாகும். இது கோயம்புத்தூர் அருகே வடமதுரையில் அமைந்துள்ளது. இதன் தல விருட்ச மரமாக முருங்கை மரம் அமைந்துள்ளது. இந்த மரத்தின் பலன்களைப் போல இந்த கோவிலும் நிறைய பலன்களை பக்தர்களுக்கு வழங்குவதாக நம்பப்படுகிறது.
திருவிழாக்களும் சிறப்புகளும்
மார்கழியில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் இந்த கோவிலின் சிறப்பாகும். இங்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பெரும்பாலும் முருகன் கோவில்களில் மட்டுமே தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். மேலும் சிவன் கோவில்களில் சிறப்பிக்கப்படும் சிவராத்திரி திருவிழா இங்கும் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமும் நல்ல முறையில் சிறப்பிக்கப்படும்.
தலசிறப்பு
பொதுவாக சிவன் கோவில்களில் சிவபெருமான் தலை முடி விரித்து நடனமாடுவார். ஆனால் இந்த கோவிலில் தலை முடித்து நடனமாடுகிறார் சிவபெருமான். இங்கு தலவிருட்சமாக முருங்கை மரம் இருப்பது வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. சிவன் தனது வாகனமான நந்திக்கு இந்த தளத்தில்தான் சர்வ அதிகாரத்தையும் தந்துள்ளார். எனவேதான் இது அதிகார நந்தி என அழைக்கப்படுகிறது.
அதிசயம் நிகழும் விருந்தீஸ்வரர் கோவில்
சரியாக பங்குனி மாதம் 17ம் தேதி இந்த கோவிலில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது ஒளிக் கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இது இந்த கோவிலில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு எப்படி செல்வது என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
விமான நிலையத்திலிருந்து செல்லும் முறைகள்
அருகிலுள்ள விமான நிலையம் - கோயம்புத்தூர்
தொலைவு - 18.8 கிமீ
கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பீளமேடு, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாக வெள்ளக்கிணறு தாண்டி, துடியலூர் அருகே அமைந்துள்ளது இந்த இடம். அதிகபட்சம் 1 மணி நேரத்துக்குள் விமான நிலையத்திலிருந்து எளிதில் இந்த கோவிலுக்கு வந்து சேரமுடியும்.
ரயில் நிலையத்திலிருந்து
அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர் சந்திப்பு
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து நேர் வழியில் ஒரே சாலையைப் பிடித்து எளிதில் வடமதுரையை அடையமுடியும்.
சந்திப்பு ரயில் நிலையம், ஆர் எஸ் புரம் வழியாக கௌண்டம்பாளையம் தாண்டி பத்து நிமிடத்தில் வடமதுரையை அடையமுடியும். மொத்த தூரம் 11 கிமீ ஆகும். இதன் பயண நேரம் அதிக பட்சம் அரை மணி நேரம் ஆகும்.
பேருந்து மற்றும் சுயவாகனம்
பெங்களூரிலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி, மதுரையிலிருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற சில பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்துக்கும் வரும்.
காந்திபுரத்திலிருந்து 25 நிமிடங்களிலும், உக்கடத்திலிருந்து 40 நிமிடங்களிலும், சிங்காநல்லூரிலிருந்து அதிகபட்சம் 1 மணி நேரத்திலும் வடமதுரைக்கு சென்றுவிடலாம்.