ஜக்தல்பூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் NH-16 நெடுஞ்சாலையில் (ஜக்தல்பூர்-கீடம் ரோடு) மண்டவா எனும் இடத்தில் இந்த மண்டவா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 70 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீர் ஒரு குளம் போன்ற நீர்த்தேக்கத்தில் சேகரமாகி பின்னர் கீழ்நோக்கி பாய்ந்து கங்கேர் ஆற்றில் கலந்தபிறகு மற்றும் இரண்டு நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. இவை திரத்கர் மற்றும் கங்கேர்தாரா என்று அழைக்கப்படுகின்றன. தட்டையான காட்சித்தளம் மற்றும் சமமான பாறை அமைப்புகள் இந்த நீர்வீழ்ச்சிக்கருகில் அமைந்திருப்பதால் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்க வசதியாக உள்ளது.
இயற்கை’ சுற்றுலா
ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 38 கி.மீ தூரத்தில், பிரசித்தமான ‘சுற்றுச்சூழல் இயற்கை' சுற்றுலாத்தலமாக விளங்கும் கங்கேர் வேலி தேசிய பூங்கா வளாகத்தின் உள்ளே இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. சட்டிஸ்கரில் அமைந்திருக்கும் அற்புதமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. முகாபஹார் ஆற்றின் பாதையில் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி 100 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலிருந்து விழுகிறது. இந்த ஆறு நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு ஏரியில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sharada Prasad
சித்ரகொடே நீர்வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியை சுற்றிலும் செழிப்பான வனப்பகுதி காணப்படுகிறது. சித்ரகொடே நீர்வீழ்ச்சிக்கு அடுத்ததாக சுற்றுலாப்பயணிகளை அசர வைக்கும் ஒரு பிரம்மாண்ட இயற்கை அதிசயமாக இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. பொதுவாக நீர்வீழ்ச்சிகளை இரு கரைப்பகுதியின் உயரத்தில் நின்று பார்த்து ரசிக்க முடியும் என்றால் இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அப்படியல்ல. நீர்வீழ்ச்சியின் உள்ளே அடுக்கடுக்காக அமைந்திருக்கும் படிகள் மற்றும் பாறைத்தளங்கள் போன்ற அமைப்புகள் வழியாக பாதாளத்தின் உள்ளே செல்வது போன்று பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சி விழும் அடித்தளத்துக்கே செல்லலாம்.
Aashishsainik
வெவ்வேறு பரிமாணங்கள்
இப்படி கீழிறங்கி செல்லும்போது வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும் மினுமினுக்கும் சிலேட்டுப்பாறைகள் வழியே அருவிகள் விழுவதை மிக அருகே தரிசிக்க முடியும். மெய் சிலிர்க்க வைக்கும் இந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். தீரத்கர் நீர்வீழ்ச்சியின் உள்ளே அதன் அடிவாரத்துக்கு நாம் சென்றபின் இயற்கையின் பிரம்மாண்டம் சுற்றிலும் சூழ்ந்து நம்மை உள்வாங்கிக்கொண்டது போன்ற உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது. சுற்றிலும் எழும்பியிருக்கும் பாறை அமைப்புகளின் எழுச்சியும் , அவற்றின் வழியே வெவ்வேறு அளவுகளில் வழிந்து வெண்ணிற நுரையுடன் சிதறும் நீரும் நம்மை திகைத்து தடுமாற வைத்து விடுகின்றன.
Shreyasime
புதிதாய் பிறந்தது போன்ற உணர்வு
மனக்கசடுகளை எல்லாம் துடைத்து அகற்றி புதிதாய் பிறந்தது போன்ற உணர்வை நம்முள் ஏற்படுத்தி நம்மை திருப்பி அனுப்புகிறது இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி. இயற்கையின் தரிசனம் என்றால் அது இதுதான் என்று சொல்லும்படியாக இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி நம்மை பாதாளத்துக்குள் இட்டுச்சென்று இயற்கையின் பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் அடித்தளத்தை நோக்கி செல்லும் பாதையில் சிவன் கோயில் ஒன்று அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு. நம் முன்னோர்கள் ஆதியிலேயே இந்த அற்புத நீர்வீழ்ச்சி ஸ்தலத்தின் அமைப்பையும் அதன் எழிலையும் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த கோயிலை உருவாக்கியிருப்பதும் வியப்புக்குரியது.
RISHI PANDEY -
திபெத்தியக்கோயில்
நீர்வீழ்ச்சியின் அடித்தளத்துக்கு செல்லும் அடுக்குத்தளங்களின் மத்தியில் மலை விளிம்பில் வீற்றிருக்கும் திபெத்தியக்கோயில் போன்று இந்த சிவ-பார்வதி கோயில் காட்சியளிக்கிறது. இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழிற்தலங்களில் இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சியும் ஒன்று என்பதில் ஐயமே இல்லை. இதனுடன் சித்ரகொடே நீர்வீழ்ச்சி, கைலாஷ் குகைகள், கொடும்சர் குகைகள் ஆகிய அம்சங்களையும் சேர்த்தால் இவை யாவுமே சத்திஸ்கர் மாநிலத்தின் இயற்கைப்பொக்கிஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
RISHI PANDEY
கைலாஷ் குகைகள்
கைலாஷ் குகைகள் எனும் இந்த பாறைப்படிம குகை அமைப்புகள் மிகுல்வாடா எனும் இடத்துக்கு அருகே கங்கேர்காட்டி தேசிய இயற்கை பூங்கா வளாகத்தில் அமைந்திருக்கின்றன. 1993ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைகள் தரையிலிருந்து 40 மீ உயரத்தில் 250 மீ நீளமுடையதாக காணப்படுகின்றன. ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் பாறைகளால் உருவாகியிருக்கும் இந்த இயற்கையான குகைக்குடைவு அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கின்றன.
Vikas Singh
வாசற்பகுதி
ஒரு குறுகிய துளை போன்ற வாசற்பகுதி வழியாகத்தான் இந்த குகை அமைப்பிற்குள் செல்ல முடியும். இதன் உள்ளே சிவலிங்கம் போன்ற ஒரு பாறை எழுச்சி காணப்படுகிறது. வெற்றிடத்தை கொண்டுள்ள ஓடு போல அமைந்திருக்கும் குகைச்சுவர்களை கைகளால் தட்டும்போது வித்தியாசமான இசை ஒலிகள் எழும்புவது ஒரு அதிசயமாகும். இந்தியாவில் இது போன்ற பாறைக்குகை அமைப்புகள் வேறெங்கும் இல்லை என்பதால், வித்தியாசமான இயற்கை ஸ்தலங்களை தேடி பயணம் செய்யும் சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய அதிசயக்குகை இது.
Piyal chatterjee
கொடும்சர் குகைகள்
ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த கொடும்சர் குகைகள் அமைந்துள்ளன. இந்த அதிசய பாறைக்குகை அமைப்புகள் இந்தியாவிலேயே முதன்மையானவையாகவும் உலகிலேயே இரண்டாவது நீளமான பாறைக்குகை அமைப்பாகவும் புகழ் பெற்றுள்ளன. இந்த குகைகள் யாவுமே பாதாளத்தில் அமைந்திருப்பதால் உள்ளே வெளிச்சமே கிடையாது என்பதை பயணிகள் மனதில் கொள்வது நல்லது. ஸ்டாலக்சைட்டுகள் மற்றும் ஸ்டாலக்மைட்டுகள் எனப்படும் மினுமினு பாறைப்படிம அமைப்புகளால் இந்த குகைகள் உருவாகியுள்ளன.
Theasg sap