பசுமை மற்றும் அழகிய கடற்கரையால் சூழப்பட்டுள்ள விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாக சுற்றுலாப் பயணிகளைத் திருப்திப்படுத்துவதில் பல ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது. வரலாறும், விரும்தோம்பலும், வளமான கலாச்சாரமும் நிறைந்த விசாகப்பட்டினம் பல கண்ணிற்கினிய அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கடற்கரை எதுவாக இருந்தாலும், அது பனை மரங்களின் நிழல் மற்றும் சூரியன் முத்தமிட்ட மணலின் சூடான பிரகாசம் ஆகியவற்றால் உங்கள் கவனத்தை மிகவும் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில வேடிக்கை மற்றும் சாகசத்தின் ஆதாரமாக செயல்படுகின்றன, சில அமைதி மற்றும் நிதானத்தின் ஆதாரமாக செயல்படுகின்றன. நீங்கள் விசாகப்பட்டினம் செல்லும் பொழுது மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள கடற்கரைகளை பார்வையிட தவறாதீர்கள்
ரிஷிகொண்டா கடற்கரை
மரகதப் பசுமை மற்றும் நீல நீரால் சூழப்பட்டிருக்கும் ரிஷிகொண்டா கடற்கரை உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ருஷிகொண்டாவின் நீரின் இயற்கையான மரகத நிறம் கடற்கரைக்கு ஒரு கவர்ச்சியான ஒளியை அளிக்கிறது, இது பொதுவாக இலங்கை அல்லது ஆஸ்திரேலிய கடற்கரைகளில் காணப்படும் ஒன்றாகும். ஜெட் ஸ்கீயிங், விண்ட்சர்ஃபிங், ஸ்பீட் போடிங், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், நீச்சல் மற்றும் கடல் கயாக்கிங் ஆகியவை இந்த கடற்கரையில் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய நீர் விளையாட்டுகளில் சில. நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையை பேருந்து, டாக்சி மூலம் எளிதில் அடையலாம்.
பீமிலி கடற்கரை
நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பீமுனிப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பீமிலி கடற்கரை அதன் அசாதாரண அமைதி மற்றும் வித்தியாசமான கருப்பு மணலுக்காக அறியப்படுகிறது. இந்த வினோதமான மீன்பிடி நகரம் டச்சு மற்றும் பிரிட்டிஷ் குடியேற்றங்களின் தடயங்களைக் காணக்கூடிய அமைதியான இடமாகும். நகரக் கூட்டத்திலிருந்து விலகி, படகு சவாரி, வாட்டர் ஸ்கீயிங், ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்ற பல்வேறு நீர் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு பீமிலி கடற்கரை ஒரு சரியான தேர்வாகும்.
ராம கிருஷ்ணா கடற்கரை
விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான கடற்கரைகளில் ராம கிருஷ்ணா கடற்கரை ஒரு தனி இடம் பிடித்துள்ளது. வங்காள விரிகுடா கரையோரத்தில் நீண்டிருக்கும் இந்த அழகிய கடற்கரை நீங்கள் விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய முதன்மையான கடற்கரையாகும். ஆர்கே பீச் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்த இடம் சுற்றிலும் பார்க்க பல இடங்களைக் கொண்டுள்ளது. குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம், விக்டரி அட் சீ போர் நினைவுச்சின்னம் மற்றும் VUDA பூங்கா ஆகியவை அடங்கும். இந்தக் கடற்கரையின் நீரில் நீந்துவது உண்மையில் பாதுகாப்பானது அல்ல என்றாலும், நீங்கள் விண்ட்சர்ஃபிங், வாட்டர் சர்ஃபிங், படகு சவாரி, பீச் வாலிபால் போன்றவற்றில் ஈடுபடலாம்.
கங்காவரம் கடற்கரை
பனை மரங்களின் நிழலால் சூழப்பட்டு, குளிர்ந்த காற்று வீசும், ஒதுக்குப்புறமான கங்காவரம் கடற்கரை விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள அமைதியான கடற்கரைகளின் பட்டியலில் இந்த கங்காவரம் கடற்கரையும் ஒன்றாகும். இந்த இடத்தில் நீச்சல் தடைசெய்யப்பட்டுள்ளது என்றாலும், சூரிய குளியல் போட்டுக் கொண்டு குடும்பம், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக பொழுதை கழிக்க இது ஒரு அற்புதமான இடமாகும்.
யாரதா கடற்கரை
இளைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான யாரதா கடற்கரை விசாகப்பட்டினத்திலும், தென்னிந்தியாவிலும் உள்ள சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இடம் பெற்ற ஒன்றாகும். மூன்று பக்கம் மலைகளாலும், ஒரு பக்கம் நீராலும் சூழப்பட்டஇந்த கடற்கரை இயற்கையின் அதிசயமான படைப்பாகத் தோன்றுகிறது. இந்த கடற்கரைக்குச் செல்வது தொலைந்த தீவைக் கண்டுபிடிப்பது போன்றது, மலையில் ஏறி இறங்கி கடற்கரையை அடைய வேண்டும் என்ற எண்ணமே சிலிர்ப்பைத் தருகிறது அல்லவா! விசாகப்பட்டினத்திலிருந்து பலர் தங்கள் வார இறுதி நாட்களை கழிக்க இங்கு திரளுகிறார்கள்.
லாசன் பே கடற்கரை
கூட்ட நெரிசல் இல்லாத, அழகான, கண்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கடற்கரை என்றே லாசன் பே கடற்கரையை விவரிக்க வேண்டும். ஆர்கே நகரின் விரிவாக்கமாக கருதப்படும் இந்த கடற்கரை அதன் அமைதிக்கு பெயர் பெற்றது. வங்காள விரிகுடாவின் படிக தெளிவான நீரம் மற்றும் அமைதியான அலைகளும் ஒன்று சேர்ந்து நீங்கள் ஒரு முழுமையான கடற்கரை அனுபவத்தை பெறுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நகரத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் இந்த அழகிய கடற்கரையானது சர்ஃபிங், நீச்சல் மற்றும் சூரிய குளியலுக்கு ஏற்றதாக உள்ளது.
எப்படி விசாகப்பட்டினத்தை அடைவது
விமானவழி: நகர மையத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள விசாகப்பட்டினம் விமான நிலையம், பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி, திருப்பதி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
ரயில்வழி: விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் சந்திப்பு என்ற அதன் சொந்த இரயில் நிலையத்தைக் கொண்டுள்ளது, இது பல முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நகர மையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இருந்து, புது தில்லி, ஹைதராபாத், பெங்களூர், சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சாலைவழி: விசாகப்பட்டினம் அருகிலுள்ள நகரங்களுடன் நல்ல சாலை இணைப்பைக் கொண்டுள்ளது. இங்கிருந்து ஹைதராபாத் 588 கிமீ தொலைவிலும், சென்னை 790 கிமீ தொலைவிலும், கொல்கத்தா 882 கிமீ தொலைவிலும், விஜயவாடா 335 கிமீ தொலைவிலும் மற்றும் பூரி 442 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனங்கள் மூலமாகவோ இவ்விடத்தை அடையலாம்.