ரிவர் ராஃப்டிங் செய்வதற்கு ரிஷிகேஷ், மணாலி, உத்தராகண்ட் தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு இணையான த்ரில் நிறைந்த, சாகசம் கலந்த மற்றும் உங்களது அட்ரினலினை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு அட்டகாசமான ரிவர் ராஃப்டிங் நம் தென்னிந்தியாவிலேயே உள்ளது. ஆம்! ரிவர் ராஃப்டிங் அனுபவத்தை அனுபவிக்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக தண்டேலி விளங்குகிறது. அதனைப் பற்றிய தகவல்கள் இதோ!
தண்டேலி
கர்நாடகா மாநிலத்தின் உத்தர கன்னடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தண்டேலி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகசப் பிரியர்களின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். மலைகள், ஆறுகள், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் குகைகள் ஆகியவை தண்டேலியின் பல்வேறு இயற்கை அம்சங்களாகும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு, தண்டேலி ஒரு விருப்பமான வார இறுதி இடமாக உள்ளது. இது அவர்களின் தினசரி பரபரப்பான வாழக்கை முறையில் இருந்து அவர்களுக்கு சற்று ஓய்வு அளிக்கிறது. கர்நாடகாவின் பிரபலமான சாகச விளையாட்டு இடமான தண்டேலியின் ரிவர் ராஃப்டிங், ஆண்டு முழுவதும் பல்வேறு சாகச ஆர்வலர்கள் மற்றும் வேடிக்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
தண்டேலி ரிவர் ராஃப்டிங்
கர்நாடகாவின் சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 6 ரிவர் ராஃப்டிங் இடங்களில் முதன்மை வகிப்பது காளி நதியாகும். பசுமையான காடுகள் மற்றும் செழுமையான சுற்றுப்புறங்களின் அமைதியான காட்சிகளுடன் துள்ளுகின்ற காளி நதியின் வேகமான தெறிப்புகளில் இந்த சாகச அனுபவம் மேற்கொள்ளப்படுகிறது.
நல்ல தரமான ராஃப்டிங் உபகரணங்களுடன் அதிவேகத்தில் பாய்கின்ற காளி நதியின் மீது ராஃப்டிங் செய்யப்படுகிறது. ராஃப்டிங்கில் நீண்ட, நடுத்தரம் மற்றும் குறுகிய வகை ராஃப்டிங் உள்ளது, அது 11 கிமீ, 6 கிமீ மற்றும் 1.5 கிமீ தூரத்திலான ராஃப்டிங் ஆகும். இந்த உற்சாகமான பயணம் உங்களை ரேபிட்ஸ் மற்றும் நீண்ட நீட்சிகள் வழியாக அழைத்துச் சென்று உங்களின் அட்ரினலினை சார்ஜ் செய்யும். உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் உங்களை வழி நடத்துவார்கள். மேலும் இந்த சாகச அனுபவத்தை வீடியோ எடுக்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு, அதற்கு நீங்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி ரசீது பெற்றிருக்க வேண்டும்.
ரிவர் ராஃப்டிங்கிற்கான கட்டணம்
ஷார்ட் ரிவர் ராஃப்டிங் செய்ய அரை மணி முதல் முக்கால் மணி நேரம் ஆகிறது, இதற்க்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 6௦௦ ஆகும். மீடியம் ரிவர் ராஃப்டிங் செய்ய ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகிறது, இதற்கான கட்டணம் ரூ. 12௦௦ ஆகும். லாங் ரிவர் ராஃப்டிங் செய்ய இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகிறது, இதற்கான கட்டணம் ரூ. 1400 ஆகும்.
வாட்டர் ராஃப்டிங் தொடங்கும் முன் ஒவ்வொரு நபருக்கும் லைஃப் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டப்படும். ஒவ்வொரு இடத்தையும் கண்காணிக்க லைஃப் கார்டுகளும் உள்ளனர்.
தண்டேலிக்கு செல்வதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஜூலை முதல் அக்டோபர் வரை பொழியும் பருவமழையானது காளி நதியையும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளையும் செழிக்க வைத்து செல்கிறது. பருவமழை இந்த இடத்தைச் சுற்றி புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தெளித்து விட்டு செல்லும். ஆக, அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் தண்டேலி ரிவர் ராஃப்டிங்கிற்கு செல்வதற்கு சிறந்த நேரமாகும். மேலும் உடல் உபாதை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 13 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டேலிக்கு எப்படி செல்வது?
தண்டேலி கோவாவிலிருந்து 97 கிமீ தொலைவிலும், ஹுப்பள்ளியிலிருந்து 75 கிமீ தொலைவிலும், பெலகாவியிலிருந்து 9௦ கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தண்டேலியை பொது அல்லது தனியார் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி எளிதாக அணுகலாம்.
உங்கள் தோழர்களுடன் ரிவர் ராஃப்டிங்கின் சிலிர்ப்பை அனுபவித்து அற்புதமான நினைவுகளை உருவாக்க உடனே தண்டேலிக்கு திட்டமிடுங்கள்!