ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்பட்டாலும் மன்றோ தீவை இந்தியாவின் மறைக்கப்பட்ட வெனிஸ் என்று தான் சொல்ல வேண்டும். மன்றோ தீவு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எட்டு சிறிய தீவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நிலப்பகுதியாகும். கல்லாடா நதி மற்றும் அஷ்டமுடி ஏரியால் சூழப்பட்ட இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவு, கேரளாவில் பொதுவாகக் காணப்படும் பசுமையான தென்னந்தோப்புகளின் அற்புதமான காட்சிகளை நமக்கு வழங்குகிறது. இயற்கை அன்னையின் அரவணைப்பில் ஓய்வு நேரத்தை செலவிட அருகிலுள்ள நகரங்களில் இருந்து ஏராளமானோர் இந்த அமைதியான இடத்திற்கு வருகை தருகின்றனர். இந்த இடத்தைப் பற்றிய முழு தகவல்களும் இதோ!
மன்றோவின் சிறப்பம்சங்கள்
179௦களில் கிழக்கிந்திய கம்பெனி திருவிதாங்கூரைக் கைப்பற்றிய பிறகு, கர்னல் ஜான் மன்றோ திருவிதாங்கூரின் இரண்டாவது நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்று இருந்தார். இந்த அழகிய தீவை கண்ட அவர் இதனை விரிவுப்படுத்த எண்ணி கால்வாய் தோண்டுதல், கற்கால கருவிகள் மற்றும் மெகாலித்களைப் பயன்படுத்தி பல உப்பங்கழிப் பகுதிகளை உருவாக்க முற்பட்டார். அன்றிலுருந்து இந்த இடம் மன்றோ தீவு என்றழைக்கப்படுகிறது.
பரபரப்பான வெளியுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் இந்த மன்றோ தீவு, கேரளாவில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பின்பற்றி வந்த கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் வலுவாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் நிறைந்த இந்த மன்றோ தீவில் வசிக்கும் மக்கள் அனைவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என இயற்கையோடு சார்ந்தே வாழ்கின்றனர். மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும்விவசாயமே அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக தெரிகிறது. இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அன்பான முகத்தோடு சுற்றுலாப்பயணிகளை அரவணைத்துக் கொள்கிறார்கள்.
மன்றோ தீவு எங்கே உள்ளது மற்றும் எப்போது அங்கே செல்லலாம்?
கொல்லத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, கல்லாடா நதி மற்றும் அஷ்டமுடி ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதான் மொத்த பரப்பளவு 13 கிமீ சதுர கிமீ ஆகும்.
மன்றோ தீவை ஆண்டு முழுவதும் பார்வையிட முடியும் என்றாலும், அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் செல்வது சிறந்தது. மார்ச் முதல் மே மாதம் வரை அதிக வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கிறது, மேலும் ஜூன் தொடக்கத்தில் பருவமழை வந்து தொடங்குவதால் பெரும்பாலான தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு உள்ளது.
மன்றோ தீவில் என்ன செய்யலாம்?
தீவு முழுவதும் தென்னை மரங்களால் நிறைந்துள்ளது, உப்பங்கழிகள், தடாகங்கள் மற்றும் கால்வாய்களில் ஆங்காங்கே சில வீடுகள் என மன்றோ தீவு ஒரு சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. எனவே நாம தீவு வழியாக செல்லும்போது நம்மை மறந்து ஒரு தனித்துவமான கால்வாய் பயணத்தை அனுபவிக்கலாம். பாரம்பரிய கேரள உணவு மற்றும் பல வகையான உணவுப் பொருட்களை வாங்கி சுவைக்கலாம். கிபி 1878 இல் கட்டப்பட்ட ஒரு பழங்கால டச்சு தேவாலயத்தைப் பார்வையிடலாம். 'S' போன்று இருக்கும் வியூ பாயின்டில் இருந்து சூரிய அஸ்தமனத்தை கண்டு மகிழலாம். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் மாபெரும் படகுப் போட்டியைக் காண ஓணம் பண்டிகையன்று இங்கு வருகை தர வேண்டும். மேலும் அருகிலுள்ள தேவல்லி அரண்மனை, பாலருவி நீர்வீழ்ச்சி, கொல்லம் பீச் மற்றும் செந்துருணி வனவிலங்கு சரணாலயத்தையும் நீங்கள் பார்வையிடலாம்.
எப்படி மன்றோவிற்கு செல்வது?
இந்த தீவை ரயில், சாலை மற்றும் நீர்வழிகள் மூலம் அணுகலாம். முன்ரோடுறுட்டு ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். மன்றோ தீவை அடைய மலிவான வழி ரயிலில் பயணம் செய்வது தான். கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடங்களிலும், திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து 2 மணிநேரத்திலும், கொச்சி ரயில் நிலையத்திலிருந்து 3 மணிநேரத்திலும் மூன்றோட்டுருட்டு ரயில் நிலையத்தை ரயில் மூலம் அடையலாம். அல்லது உங்களுக்கு காரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நீண்ட பயணம் செய்வது பிடிக்குமென்றால், நீங்கள் மதுரை வழியாக NH 744, கொச்சி, மைசூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து NH 66 வழியாக மன்றோவை அடையலாம்.