"வெறும் நடிப்பில்ல அதுக்கும் மேல" 'ஐ' படத்தில் விக்ரமின் நடிப்பை சொல்ல இந்த ஒன்று போதும். மூன்று கதாப்பாத்திரத்திலும் தன் அசரடிக்கும் உழைப்பினால் மிரட்டியிருப்பார் விக்ரம். கூடவே விஷுவல் விருந்து படைக்கும் P.C. ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், மெர்சலாக்கிய ரஹ்மானின் இசையும், பிரமாண்டங்களின் பிரம்மா ஷங்கரின் இயக்கமும் சேர்ந்து மிகப்புதுமையான ஒரு திரைப்பட அனுபவத்தை நமக்கு வழங்கியிருந்தது 'ஐ' படம்.
இந்த படத்தில் வரும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள் எமி ஜாக்சனை விடவும் அழகாக இருந்தது என்னவோ உண்மை. வாருங்கள் அந்த இடங்கள் எங்கு இருக்கின்றன, அங்குள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் எவை எவை, அங்கு செல்ல சிறந்த நேரம் எது என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்வோம்.
உள்நாட்டு விமான கட்டணங்களில் 600 ரூபாய் தள்ளுபடி பெற்றிடுங்கள்
ஜோத்பூர்:
விக்ரம் லிங்கேஸ்வரனாக இருந்து மாடல் 'லீ' ஆக மாறிய பிறகு விளம்பர படங்களில் நடிப்பதாக கதை நகரும். அப்படி அவரும் எமி ஜாக்சனும் நடிக்கும் ஜீன்ஸ் விளம்பரம் ஒன்று நீல நிறமாக காட்சி தரும் இடம் ஒன்றில் படமாக்கப்பட்டிருக்கும். 'நீல நகரம்' என்று அழைக்கப்படும் அந்த நகரம் ராஜஸ்தானில் இருக்கும் புராதன நகரமான ஜோத்பூர் ஆகும்.
ஜோத்பூர்:
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா மாநிலமான ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான ஜோத்பூரில் பழமையான பெரிய கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள் மற்றும் தகிக்கும் தார் பாலைவனம் போன்றவை வருடம் முழுக்கவும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை.
Photo:Daniel Mennerich
ஜோத்பூர்:
மெஹ்ரங்கர்க் கோட்டை:
ஜோத்புரின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்வது மெஹ்ரங்கர்க் கோட்டை ஆகும். இந்தியாவில் இருக்கும் மிக பழமையான கோட்டைகளுள் ஒன்றான இது 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. ஏழு பெரும் வாயில்களை உடைய இதனுள் அருங்காட்சியகம் ஒன்றும் செயல்படுகிறது.
ஜோத்பூர்:
இந்த அருங்காட்சியகத்தினுள் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய பல்லக்குகள், ரத்தினங்களும், மரகதங்களும் பதிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கேடையங்கள், பீரங்கிகள் போன்றவற்றை பார்க்கலாம். இந்த கோட்டை சுவற்றின் மேல் இருந்து ஜோத்பூர் நகரின் மொத்த அழகையும் ரசிக்க முடியும்.
Photo: Wikipedia
ஜோத்பூர்:
உமைத் பவான் அரண்மனை:
உலகின் மிகப்பெரிய தனியார் வசிப்பிடங்களில் ஒன்றான இந்த அரண்மனை ஜோத்பூர் ராஜ வம்சத்தினரின் வசிப்பிடமாக திகழ்கிறது. 347 அறைகள் கொண்ட இந்த அரண்மனையை காலை 9 மணி முதல் 5 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். ராஜ பரம்பரையினரின் ஆடம்பர வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த உமைத் பவான் அரண்மனைக்கு வர வேண்டும்.
ஜோத்பூர்:
இவை தவிர கன்தா கர் என்ற மணிக்கூண்டு, கயலான ஏரி, சாஸ்த்ரி சர்கிள் போன்ற இடங்களும் இங்குள்ள குறிப்பிடத் தகுந்த சுற்றுலாத்தலங்கலாகும். ஐ படம் மட்டும் இல்லாது கிறிஸ்டோபர் நோலனின் புகழ்பெற்ற பேட்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளும் இந்த நீல நகரத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
Photo:Daniel Mennerich
ஜோத்பூர்:
ஜோத்புரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோத்பூரில் இரவு தங்க நினைத்தால் அதற்கான ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன.
பொள்ளாச்சி :
ஸ்டுடியோவை விட்டு வெளியே படப்பிடிப்புகள் நடக்க ஆரம்பித்த 1970களில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் மிக முக்கிய படப்பிடிப்புத்தளம் என்றால் அது கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எழில் கொஞ்சும் பொள்ளாச்சி நகரம் தான்.
Photo: S.Sriirama Santhosh
பொள்ளாச்சி :
எங்கெங்கு காணினும் தென்னந்தோப்புகள், வயல் வெளிகள் என பசுமையாக காட்சியளிக்கும் இந்த நகரத்தில் தான் விக்ரமும் எமி ஜாக்சனும் ஒரு அழகுசாதன பொருள் விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. '80களிலும் '90களிலும் வந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் பொள்ளாச்சியில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி :
வெறும் வயல்வெளிகளையும், தென்னந்தோப்புகளையும் தாண்டி ஆழியாறு அணை, டாப் ஸ்லிப் அருவி, ஆனைமலை விலங்குகள் சரணாலயம் மற்றும் வால்பாறை போன்ற அற்புதமான இயற்கை காணிடங்கள் பொள்ளாச்சியை சுற்றிலும் நிறைய இருக்கின்றன.
Photo:Motographer
பொள்ளாச்சி :
ஆழியார் அணை:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருகிறது இந்த ஆழியார் அணை. கோவை நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கு அருகில் சிறுவர்களுக்கான பூங்கா, சிறிய தீம் பார்க் போன்றவை இருக்கின்றன. நகருக்கு வெளியே வார விடுமுறையை கொண்டாட விரும்புகிறவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக ஆழியார் அணை அமையும்.
பொள்ளாச்சி :
வால்பாறை:
பொள்ளாச்சி நகரில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அற்புதமான இயற்கை கட்சிகளை கொண்டு கண்களுக்கு விருந்து படைக்கும் ஓரிடம் தான் வால்பாறை. சோலையாறு அணை, பஞ்ச முக விநாயகர் கோயில், குரங்கருவி போன்றவை வால்பாறையில் இருக்கும் சில நல்ல சுற்றுலா இடங்களாகும்.
பொள்ளாச்சி :
பொள்ளாச்சி நகரை பற்றிய மேலதிக தகவல்களையும்,அந்நகரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள். பொள்ளாச்சியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.
கொடைக்கானல்:
சீனாவில் பார்த்தது போன்றே தங்களுக்காக ஒரு கனவு தோட்டத்தை எமி ஜாக்சனும் விக்ரமும் உருவாக்கும் காட்சி காதல் ததும்ப எடுக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியில் நாம் பார்க்கும் தோட்டம் உண்மையாகவே உருவாக்கப்பட்டதாம். இந்த காட்சிகள் அனைத்தும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
கொடைக்கானல்:
தமிழகத்தில் இருக்கும் மிக அழகான மலைவாசஸ் தளமான கொடைக்கானல் கோடை காலத்தின் சொர்க்கமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் 1845ஆம் ஆண்டு சுட்டெரிக்கும் வெய்யிலில் இருந்து தப்பிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருக்கிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஏரி:
சந்தேகமே இல்லாமல் கொடைக்கானலின் மிக பிரபலமான சுற்றுலாத்தலம் என்றால் அது கொடைக்கானல் ஏரி தான். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி நட்சத்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் படகு சவாரி செல்வது அலாதியான ஓரனுபவமாக இருக்கும்.
கொடைக்கானல்:
குணா குகைகள்:
சாத்தானின் சமையலறை என அழைக்கப்படும் இந்த குகைகள் கமலஹாசனின் 'குணா' படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் படம்பிடிக்கப்பட்டத்தில் இருந்து 'குணா குகைகள்' என அழைக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான இடம் என்பதால் இப்போது முழுவதும் வேலிகளால் மூடப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
இவை தவிர பெரிஜம் ஏரி, மதி கெட்டான் சோலை, வெள்ளி அருவி என அற்புதமான இடங்கள் இங்கு நிறையவே இருக்கின்றன. கொடைக்கானலை எப்படி அடைவது என்ற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். மேலும் கொடைக்கானலில் உள்ள ஹோட்டல்களில் சிறப்பு சலுகைகளை இங்கே பெற்றிடுங்கள்.
"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்"
எங்கள் தளத்தில் இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி மட்டுமே எழுத முடியும் என்பதால் இப்படத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" படம் பிடிக்கப்பட்ட சீனாவில் பாஞ்சின் என்ற இடத்தில் இருக்கும் செங்கடல் கடற்கரையை பற்றி விரிவாக எழுத இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இக்கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் 'Comment' பகுதியில் பதிவிடுங்கள். கட்டுரைகளுக்கான புதிய யோசனைகள் உங்களிடம் இருப்பின் அதையும் தெரிவியுங்கள்.